சனி, 27 பிப்ரவரி, 2010

விண்ணை தாண்டி வருவாயா = இசை + இளமை + காதல்

வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.

அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். காதலை அடையும் முயற்சியில் வரும் இம்சைகள்தான் எத்தனை அப்படியான சந்தர்ப்பங்களில் ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கையில் ஏன் இவளைக் காதலித்தோம் எனத் தோன்றுமல்லவா? அப்படி ஒரு மலையாள கிறித்தவ குடும்பத்தில் பிறந்த ஜெஸ்சியை காதலிக்கும் ஹிந்து இளைஞன் கார்த்திக் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் படமே


ம்ம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் வழமையான கெளதம் படங்களை போன்றே த்ரிஷாவை முதன் முதலாய் பார்க்கும் சந்தர்ப்பத்திலேயே காதலில் விழுகிறார் சிம்பு. சில பல முயற்சிகளின் பின் முதலில் மறுத்த த்ரிஷா பின் கௌதமின் சரித்திர பிரசித்திப் பெற்ற " I Think I'm in love with you" சொல்கிறார். பின் வீட்டார் எதிர்க்க கதை கெளதம் மேனனின் இஷ்ட Location அமெரிக்காவுக்கு எல்லாம் பயணித்து கடைசியில் சேர்ந்தார்களா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

சிம்புவைப் பார்க்க ஆச்சரியம் எல்லாம் எழவில்லை. அவர் திறமையாளர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த படம் தரப்போகும் வெற்றியின் மிதப்பில் பழைய குருடி கதவைத் திறடி என விரல் சுத்தாமல் இருக்க வேண்டும். முதன் முதலில் காதல் வயப்படும் போது காட்டும் பரவசம், த்ரிஷாவை impress செய்வதற்காக எடுக்கும் முயற்சிகள், முதன் முதலில் பேசும்போதுக் காட்டும் தயக்கம், அரிதாகத் தலைக்காட்டும் கோபம், மெல்லிய சோகம் அனைத்தையும் முகத்திலேயே கொண்டு வந்திருக்கிறார். இதுவெல்லாம் இல்லாமல் அநியாயத்திற்கு அழகாய் வேறு இருக்கிறார். அதிலும் கணேஷ் வீட்டில் இவர் த்ரிஷாவுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் தாடி வளர்ந்திருக்கும். அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர படத்தில் சொல்லும்படியான பாத்திரம் சிம்புவின் வயதான நண்பராக வரும் கணேஷ் என்றப் பாத்திரம். இவரை காக்க காக்கப் படத்தின் கமராமேன் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காக்க காக்க படத்தின் கமராமேன் R . D . ராஜசேகர். படத்தில் timing ஆக இவர் அடிக்கும் comment க்கள் சிறப்பை உள்ளன. சிம்புவும் இவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது சிம்பு அடிக்கடி கேட்கும் கேள்வியை இவரே சிம்புவிடம் " இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏண்டா ஜெஸ்ஸிய லவ் பண்ணுன? " எனக் கேட்கும் போது அரங்கமே சிரித்தது.

கமரா மனோஜ் பரமஹம்சா இப்போதுதான் இவர் பெயரை கேள்விப் படுகிறேன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் எனும் அளவுக்கு காட்சிகள் அவ்வளவு அழகு. என்ன close up காட்சிகளில் த்ரிஷாவை கொஞ்சமேனும் மெனக்கெட்டு இளமையாய் காட்டியிருக்கலாம். எடிட்டிங் வழமைப் போல அன்டனி. குறையேதும் எனக்குத் தெரியவில்லை. நிறையப் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் சத்தமிட்டாலும் எதையும் வெட்டத் தேவையில்லை என்பது என் கருத்து.

நம்பி வந்தால் இரண்டரை மணி நேர entertainment க்குத் தான் உத்தரவாதம் என்பதை மீள ஒருமுறை நிருபித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ரெண்டு வருடமா தமிழ் படத்தை இங்கிலிஷில் எடுப்பாரே அவரா? என தன்னையே கிண்டலடித்துக் கொள்ளும் அவர் ராஜபார்வையில்ருந்து இவரது மின்னலே வரை வழக்கிலிருக்கும் சர்ச் வெடிங் கிளைமாக்ஸ், தற்கொலை செய்துக் கொள்வதாய் மிரட்டும் தந்தை போன்றவற்றையும் பகடி பண்ணியவாறே தன படத்தில் சேர்த்திருக்கிறார். வழமையான அவரது கதை சொல்லும் பாணியிலான narrative ஸ்டைலிலேயே கதை நகர்கிறது. சிம்பு த்ரிஷாவைத் தான் காதலிப்பதற்கான காரணத்தைக் கேட்கும் போது முதல் படம் வரும் சொல்கிறேன் என்பார். பிறகு த்ரிஷாவிடமே சிலம்பரசன் த்ரிஷாவை பற்றி சொல்வதும் அது சொல்லப் படுவது எதில் என்பதும் புத்திசாலித்தனமான சுவாரசியம். சிம்பு கதை சொல்ல ஆரம்பிக்கும் அதே வசனங்களில் படம் முடியும் படியான வட்டமான திரைக்கதையும் அருமையாயத்தான் இருக்கிறது.

வழமையாக டைரக்டர் பற்றி இறுதியில்தான் சொல்வார்கள். நான் அவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு இறுதியில் இவரைப் பற்றி சொல்லக் காரணம். இவரது இசையத் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ச்சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் இசைப் புயல்.
காதலில் விழுந்த கணத்தின் பரவசம் ஒரு கொண்டாட்டமான துள்ளாட்டமாக ஹோசன்னவில் ஆரம்பிக்க அவள் அழகை பிரமிக்கும் ஓமனப் பெண்ணே ஒரு கனவை போல் மிதக்கச் செய்கிறது. காதலியை உடன்பட வைக்கும் போராட்டம் தட தட என கண்ணில் கண்ணை பாட்டில். அடுத்து ஸ்ரேயா கோஷலும் இசைப்புயலும் பிரிவையும் ஏக்கத்தையும் உணர்த்தும் மன்னிப்பாயாவில் உருக பின் சர்ச் கல்யாணங்களில் வரும் இசை, நாதஸ்வர இசை எல்லாம் கோர்த்த ஒரு கல்யாண பரவசம் அன்பில் அவன் பாடலில். பாடல்களைத் தவிர்த்து விட்டு படம் எடுக்கலாமே என்ற வாதத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் இசைப் புயல். படம் பார்த்தவர்கள் மனதை விட்டு சொல்லுங்கள் இவரைத் தவிர்த்து இன்னுமொருவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க முடியுமா?

படத்தில் குறைகள் பெரிதாய் இல்லை. என்ன சிம்பு படத்தில் சண்டை வேண்டுமென்பதற்காகவோ என்னவோ த்ரிஷாவின் அண்ணன் கூட்டி வரும் நான்கு ரௌடிகளுடன் சண்டையிடுகிறார். வாரணம் ஆயிரத்தில் கதையைக் கொண்டு செல்ல திடீரென சூர்யாவுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது போல யதார்த்தமான படத்தில் சிம்பு பத்து பேரை அடிப்பதை ஞாயப்படுத்த அவர் boxer என்று சொல்வது (லாஜிக்காமாம் ) மட்டும் கொஞ்சமாய் இடித்தது. கேரளாவில் நாலு நாளாய் சுற்றிய பின் கொஞ்சம் மூளையைப் பாவித்துதான் சர்ச்சில் த்ரிஷாவைக் காண்கிறார். ஆனால் அமெரிக்காவில் படம் எடுக்கப் போனவர் அங்கு அவரை சந்திப்பதை Just coincident என ஒத்துக் கொள்ள முடியவில்லை.

படம் கட்டாயம் பார்க்கலாம். எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை. கெளதம் மேனன் End card போடும் போது அது தன்னுடைய கதை என்பது போல முடிக்கிறார். படம் பார்த்த என் நண்பர்கள் பலர் தம் கதை என்கிறார்கள். so படத்தைப் பாருங்கள் இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சுஜாதா - நடமாடிய கலைக்களஞ்சியம்


சின்ன வயதிலிருந்தே கதை கேட்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம். எழுத்துக் கூட்டி வாசிக்கத் துவங்கியப் போதே சின்ன சின்னக் கதை புத்தகங்களாய் ஆரம்பித்து பின் அம்புலிமாமா,கோகுலம்,பாலமித்ரா,காமிக்ஸ்கள் எனத் தொடர்ந்தது என் கதையறியும் ஆர்வம். இதுதானோ என்னவோ இன்னமும் ஒரு Daydreamer ஆகவே இருக்கிறேன்.

பதின்ம வயதுகளுக்குள் நுழைய முன்பாகவே மாலைமதி,ராணிமுத்து போன்ற கமர்சியல் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,எஸ்.பாலசுப்ரமணியம்,பி.டி.சாமி எல்லாம் அபோது படித்ததுதான். ராஜேஷ்குமார் நாவல்கள் அப்போது ரொம்பப் பிடிக்கும். முடிவுகளை யூகிக்கக் கூடியதாய் நிலை மாறிய போது அந்த சுவாரசியமும் அற்றுப் போனது.

அப்படியே அடுத்தக் கட்டமாக சாண்டில்யன். அவர் நாவல்களை படித்ததற்கான காரணம் பரகசியம். முழுசாய் படித்து முக்கியமான மேட்டர்கள் இருக்கும் பக்கங்களை அடையாளப்படுத்தி தர வேண்டிய சீரியப் பணி நண்பர்களால் எனக்குத் தரப்பட்டிருந்தது. பிஞ்சிலேயே பழுத்து விட்டேனோ என யோசித்தாலும் வருத்தமில்லை. அதுதான் வாத்தியாரே சொல்லியிருக்கிராறே வாத்சாயனமும் கல்வியே என அதனால் அந்தக் குற்றவுணர்ச்சியும் அற்றுப்போனது. அதுபோக இப்போது எதையாவது இப்படி கிறுக்கித் தள்ள அந்த வாசிப்பனுபவம்தான் கைகொடுக்கிறது. என்ன இன்னமும் ப்ராக்டிகலாக செய்துப் பார்க்காத குறைதான்.

அப்படியே கல்வியியற் கல்லூரி போன போது அங்கிருந்த சூழலோ என்னவோ மார்க்ஸிசம் பால் ஈடுபாடு உண்டானது. முதலில் தோழர் தியாகுவின் "ஆனா ஆவன்னா" வில் ஆரம்பித்தவன் பின் அப்படியே முன்னேற்றப் பதிப்பகத்தின் பல புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். மாக்சிம் கோர்க்கியின் தாய் நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது பல தடவை படித்தது. சித்தாந்தங்களை வார்த்தைகளாக உள்வாங்கிக் கொண்டேனே ஒழிய எனக்குள் இருந்த பூர்ஷ்வாவை விரட்ட முடியாத குற்றவுணர்வில் மெல்ல அதன்பாலிருந்த தீவிரத்தைக் குறைத்துக் கொண்டேன். பெரியாரும் அப்போதிருந்துதான் என் உடன் வரத் துவங்கினார்.

இப்படி எனது வாசிப்பனுபவம் வயதுக்கேற்ற மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிருக்கும் ஒரே நபர் அமரர் சுஜாதா. காரணம் ரொம்ப simple எதை எழுதினாலும் எளிமையாக எழுதுவார், புரியும்படி எழுதுவார், சுவாரசியமாய் எழுதுவார்.

என்னவாக ஆக வேண்டும் என்று யாரேனும் கேட்டால் டொக்டர் தொடங்கி ஜனாதிபதியாவது வரை சொல்லுவோம். ஆனால் இருந்தா இப்படித்தாண்டா இருக்கணும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் இவர். இவரது அறிவின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. எழுத்தாளர், நாடகாசிரியர், திரைப்பட வசனக்கர்த்தா, கண்டுப்பிடிப்பாளர் என இந்த மனிதனுக்குத்தான் எத்தனை முகங்கள். எதைப் பற்றித் தெரியாது இவருக்கு. சங்கப் பாடல்கள் தொடங்கி சாப்ட்வேர் வரை பேசுவார். நல்லப் பாடல்களின் ராகங்களைப் பற்றியெல்லாம் ரசனையாய் அலசுவார். நல்லப் படங்களைக் கொண்டாடுவார். அரசியல்,கிரிக்கெட் இன்னும் என்னவெல்லாமோ. இதனாற்றானோ என்னவோ அவரைப் போல இல்லாவிட்டாலும் எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாய் பிய்த்தெடுத்தது ஏதோக் கொஞ்சம் மண்டைக்குள் போட்டு வைத்திருக்க முயல்கிறேன்.

அவரது கொலை அரங்கம் நாவலில் வசந்த் ஒரு முறை " உங்களுக்கு வல்வெட்டித்துறை, மாத்தளை இங்கு யாரேனும் பழைய உறவினர் இருந்து அவர்கள் எதிரிகளாகியிருக்க வாய்ப்பில்லையா?" எனக் கேட்பதாய் ஒரு வசனம் வரும். அடடா சுஜாதா நம்ம ஊர் பெயர எழுதிட்டாருடா என புல்லரித்துப் போயிருக்கிறேன். நமக்குப் பிடித்தவருக்கு நம்ம ஊர் தெரிஞ்சிருக்கே என்ற புளங்காகிதம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுவது இவர் எழுத்துக்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு காலயந்திரப் பயணம் போல கதை நிகழ்வதாய் சொல்லப்படும் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்வது அது. சமகால நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி பயிர் செய்யப் பட்ட காலத்திற்கேற்ற எழுத்துக்கள் அவருடையவை.

Advanced level படிக்கும் போதும் college of Education இலும் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் கெத்தாய் உலாவ உதவியது அவ்வப்போது நான் சொல்லும் A ஜோக்குகள் உபயம் வசந்த். என்ன இது போன்ற ஜோக்சைக் கேட்டு வெட்கத்தால் முகம் சிவந்து செல்லமாய் அடிக்கத்தான் யாருமில்லாமல் போய் விட்டனர். ஒருவேளை வசந்த் போல் இல்லாமல் கணேஷ் போல் கொஞ்சம் அழுத்தமானவனாய் இருந்ததாலாயிருக்கலாம். வல்கராக இல்லாமல் முகஞ்சுழிக்கச் செய்யாது உதட்டோரம் புன்னகையை வரச் செய்பவை சுஜாதாவின் பகடிகள். ஏன் போய்சில் கூட அந்த இளைஞர்கள் தமக்குள்ள பரிமாறிக்கொள்ளும் பகடிகளில் அவை வெறும் பாலுணர்வு பாற்பட்டதாக இல்லாமல் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும்.

இணையம் பரவலாக இல்லாதக் காலத்தில் அவரது எழுத்துக்கள் நிச்சயம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும். பிறகு எத்தனை விடயங்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நாமெல்லாம் Grand master பார்த்து விட்டு யாரையாவது நினைத்துக்கொள் நான் கண்டுப்பிடிக்கிறேன் என விளையாடிக் கொண்டிருக்கும் போது இது Savant syndrome இதை மையமாக வைத்து Rain man படம் எடுக்கப்பட்டிருக்கிறது என எழுதுவார். உலகத்தரத்திலான பெரும் ஆளுமைகளை அடையாளம் காட்டினார். இதையெல்லாம் இவர் செய்தது சிக்கலான வார்த்தைகளாலான பெரிய கட்டுரைகளின் மூலம் அல்ல. ச்சும்மா போகிற போக்கில் தனது எழுத்துக்களில் அள்ளித் தெளித்தவையே அவை.

சிலக் கதைகளை ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போல இருந்தது என வர்ணிப்பார்கள். எனக்கு ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாசிக்கும் போது படமே பார்ப்பது போல இருந்தது.

சுஜாதாவின் கதைகளில் நான் படித்தவற்றில் எனக்குப் பிடிக்காதது என்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றே ஒன்று பெயர் ஞாபகமில்லை நன்றாக படித்த தோற்றப் பொலிவற்ற முதிர்கன்னி ஒருவரை அவரது சம்பளத்துக்காக திருமணம் செய்து ஏமாற்றும் ஒருவரின் கதை. இருவரது பார்வையிலும் அந்நாவல் நகரும்.
திக்கான மீசையும் சவரத்திற்குப் பின்னரான பசுமை படர்ந்த மழு மழுப்பான கன்னங்களையும் கொண்ட பசையுடைய ஆண்களை மடக்கி செட்டில் ஆகும் பெண்களின் கனவுகளையே திரும்ப திரும்ப எழுதும் எனக்குப் பிடிக்காத ஒரு எழுத்தாளரின் கதை போல் இருந்ததாலிருக்கலாம்.

மற்றப்படி மறுபிறவி,ஜோசியம் போன்ற அபத்தங்களை எல்லாம் மறுப்பவர் ஆண்டாள் பாசுரங்களை பற்றியும் ஸ்ரீரங்கநாதனை பற்றியும் பக்தி பரவசத்தோடு சொல்லும் போதும் பௌதீக விஞ்ஞானத்தில் தனக்கு இருக்கும் ஞானத்தைப் பயன்படுத்தி பாகவத புராணத்தில் இருக்கும் கதைகளை எல்லாம் ஏதோ விஞ்ஞான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற ரீதியில் சொல்லும் போதும் சற்று எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

சுஜாதா என்ற ஒருவர் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இன்று இத்தனை பேர் பளோகுகளில் பத்தி எழுத்துக்களை முயற்சித்துக் கொண்டிருக்க மாட்டோம் என நினைக்கிறேன். ஏதோ வருடமொரு முறை நினைவுக் கூறத்தக்கவர் அல்ல அவர். இருந்தாலும் அவரைப் பற்றிய என் எண்ணங்களின் சிறு தொகுப்பே இப்பதிவு.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

இப்படியும் ஒரு தமிழினம் 2


முதல் முறை இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் அப்படியே இதன் முதற் பாகத்தையும் இங்கே சென்று படித்து விடுங்கள்.

மலையகத் தமிழர்களுக்கு இலங்கையில் நீண்ட வரலாறு இல்லை என்று சொல்லியிருந்தேன். ம்ம் ஆமாம் 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அவர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்கள். மன்னாரிலே இறங்கி அங்கிருந்து மலைநாடு நோக்கித் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்தவர்களில் பலர் தொற்று நோய்களுக்கும், காட்டு விலங்குகளுக்கும் பலியாக எஞ்சியோர் மலையகத்தை வந்தடைந்தனர். மாத்தளை,கண்டி,நுவர எளிய பகுதிகளில் உள்ள உயர்ந்த நிலங்களிலுள்ள அடர்ந்த காடுகளை தம் இரத்தம் சிந்திய விலைமதிப்பற்ற உழைப்பின் மூலம் இலங்கைக்கு பெரும் அந்நிய செலாவணியை இன்றும் ஈட்டித் தரும் பெருந்தோட்டங்களாக மாற்றிய பெருமை இவர்களையே சார்ந்தது.

உங்கள் வீட்டுக்கு வரும் ஒருவர் உங்கள் வீட்டின் முன்னேற்றத்திற்கு பாடுப்பட்டு உழைக்கிறார். அவரது தேவை இனி அத்தனை தூரம் அவசியமில்லை எனும் நிலை வரும் போது அவரை வீட்டை விட்டு விரட்டி விடுவீர்களா? அப்படித்தான் செய்தது அன்றைய இலங்கை அரசு. ஆம் பிரித்தானிய ஆட்சியில் இலங்கைப் பிரஜைகளாகவே கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு ஓட்டுரிமையும் இருந்தது. தேர்தல்களிலும் அவர்கள் இடதுசாரிகளையே ஆதரித்திருந்தனர். இதைக் கருத்திற்கொண்ட முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரம் கிடைத்ததும் இலங்கை பிரஜாவுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது.

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க

அதாவது இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராக இருக்க வேண்டும் அல்லது அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாக இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர்.
அல்லது இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக கருதப்பட அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது, அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.
இந்த சட்டத்தினால் அன்று இலங்கையில் இருந்த ஏழரை லட்சம் இந்திய தமிழர்களும் நாடற்றவர்களானார்கள்.

ஜி.ஜி.பொன்னம்பலம்

அப்போதுதான் எதிர்பார்த்திராத இடத்திலுருந்து மலையகத் தமிழருக்கு எதிரான துரோகம் ஒன்று நடந்தேறியது. அக்காலத்தில் இலங்கை அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். அதன் தலைவர் அமரர் ஜி.ஜி . பொன்னம்பலம் அவர்கள் ஆவார். இச்சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டப் போது ஒப்புக்கு அதை எதிர்த்தவர் பின் கதவு வழியாக ஐக்கிய தேசியக் கட்சியோடு செய்திருந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக சட்டமூலத்தை எதிர்த்தோ ஆதரித்தோ வாக்களிக்காது நடுநிலை வகித்தார். பின் அப்படியே அரசோடு இணைந்தவர் அங்கு அமைச்சுப் பதவியைப் பெற்று தனது பிரதேசத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார். இதனால் மனம் நொந்த அதே கட்சியை சேர்ந்த தமிழர்களால் இன்றளவும் தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உள்ளிட்ட சிலர் பிரிந்து சென்று தமிழரசு கட்சியை ஆரம்பித்தமையும் வரலாறு. இச்செயற்பாடானது மலையக மக்களுக்கு ஈழத் தமிழர் மீது நிரந்தரமாய் ஏற்பட இருந்த வெறுப்பைத் தனித்தது எனலாம்.

தந்தை செல்வா

ஜி.ஜி.பி எதிர்த்து வாக்களித்தாரென்றும், இல்லை அவர் ஆதரித்து அவரும் அவர் சார்ந்த கட்சியினரும் வாக்களிக்காது விலகி நின்றனர் எனவும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றனர். ஆக இங்கு நான் எழுதியிருப்பது பெரும்பான்மையானோரின் வாய் வழி கேட்டக் கருத்துக்களே. அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் அப்பாத்துரை வினாயகமூர்த்தியும் இன்று வரையிலும் அவர் எதிர்த்து வாக்களித்தாரென்று அவரை ஞாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். அண்மையில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் இது தொடர்பில் அப்பாத்துரை வினாயகமூர்த்தி மலையகத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் புத்திரசிகாமணியுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுப்பட்டார். எனினும் ஜி.ஜி.பி அரசுடன் சேர்ந்தமை அவர் தரப்பை சந்தேகத்துடனே பார்க்கச் செய்தது எனலாம்.

தொடரும்.......

புதன், 24 பிப்ரவரி, 2010

கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்


All good things must come to end at some point என்று சொல்வார்கள் அது எல்லாவற்றுக்கும் பொருந்தாது என நிரூபித்திருக்கிறார் சச்சின். சகாப்தம், சரித்திரம் இன்னும் அகராதியில் உள்ள என்ன வார்த்தைகளை தேடிப்பார்த்தாலும் அவை இந்த வீரனின் சாதனைகளை சொல்ல போதா.

சச்சினின் திறமைக்கு முன் இது ஆச்சரியமில்லைத்தான். நிச்சயம் இதுவும் எனக்கு ஒரு செய்தியாக இருந்திருக்கும் சற்று முன்கூட்டியே கிடைத்த தலைமைத்துவம் தந்த அழுத்தத்தினால் துடுப்பாட்டத்தில் சோபையிழந்து பின் அதிலிருந்து விடுப்பட்டதும் காட்டினாரே ஒரு விஸ்வரூபம் தொண்ணூறுகளின் இறுதியில் அப்போது அடித்திருந்தார் என்றால் .

அவர் விளையாடிய காலத்தில் விரல் சூப்பிய பயல்களெல்லாம் அவரோடு ஆடும் இக்காலத்தில் முதன்நிலை அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்காவுக்கு அடித்தது உச்சப்பட்ச மகிழ்ச்சி.

ஆனால் அது என்ன அந்த 195 ஆவது ஓட்டத்தை அப்படித்தான் எடுத்திருக்க வேண்டுமா. இதயத் துடிப்பே ஒருகணம் நின்றுப் போனது. எப்படியோ இன்றிரவு தூங்கப் போவதில்லை. அப்படியே மாட்சை வெத்திருங்கப்பா இந்த டிவிலியர்ஸ் அடிப்பதைப் பார்த்தால் பயமா இருக்கு 7 விக்கெட் போன பின்னும்.

வாழ்த்துக்கள் சச்சின்







பெருமை வாய்ந்த பிள்ளையார்

1995 ம வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெற்றி மேல் வெற்றிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். எனக்கு 13 வயதளவில்தான் இருக்கும். கிரிக்கெட் வெறி தலைக்கேறியிருந்த சமயம் யாரேனும் நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கையில் சனலை மாத்தினார்கள் என்றால் தொலைந்தார்கள்.இப்படி இருக்கும் போதுதான் கிரிக்கெட் காய்ச்சலை இலகுவாய் புறந் தள்ளிய அந்த சம்பவம் நடைப் பெற்றது.

"விஷயம் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவில் பிள்ளையார் பால் குடிககீராறாம் tv இல காட்டினார்கள்" என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிப்போனதுதான் தாமதம் அனைவரும் தெரிந்த இடத்திலெல்லாம் பால் வாங்கிக் கொண்டு வழிப் பிள்ளையார்களுக்கு கொடுக்கத் துவங்கினார்கள். எத்தனை இடத்தில் பிள்ளையார் பால் குடித்தார்? எத்தனை லீட்டர் குடித்தார் என்ற புள்ளி விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் போனவர்களில் அநேகமானோர் பரவசம் ததும்பிய முகத்துடன் வந்தனர்.

அப்போதெல்லாம் சிறுவானாயிருந்த நான் அதிகம் வாசிப்பது பக்திக் கதைகளைத்தான் அதுவும் அவற்றை வாசித்து இறைவனின் அற்புதங்களை பார்த்து வியந்து ஆண்டவனே நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்துவாய் பிறந்திருக்கிறேன் என்று புளங்காகிதம் கொண்டிருந்த காலம். எனக்கும் பிள்ளையாருக்கு பால் கொடுத்து பார்க்கும் சிறிய ஆர்வம் தலைக்காட்டியது. வீட்டில் என் விருப்பத்தை சொன்னப் போது அதெல்லாம் ஆச்சாரமாய் செய்ய வேண்டியது என என் விருப்பத்துக்கு தடை போடப் பட்டது. ம்ஹ்ம் வீட்டிலுருந்து வெளியே போக வழியில்லை பாலுக்கும் வழியில்லை.

அப்போதுதான் எனக்கு நந்தனாரும், தின்னனாரும் ஞாபகத்துக்கு வந்தனர் அவர்களை விட பக்தியில் குறைந்தவனா நான் என்ற எண்ணத்தோடு திட்டம் ஒன்றை தீட்டினேன். எனது மச்சானும் என்னோடு இந்த செயற்றிட்டத்தில் இணைந்துக் கொண்டான். பூஜையறை சென்று அங்கிருந்த சிறிய பிள்ளையார் சிலையை வெளியே கடத்திக் கொண்டு வந்தேன். வீட்டுக் கொல்லைப் புறத்திலே கம்புகளை ஊன்றி கோயில் போல் அமைத்து அதற்கு யூரியா உரப்பையினால் கூரை அமைத்தோம். உள்ளே களிமண்ணை குழைத்து மேடை போல் அமைத்து விட்டு அதில் விநாயகரை வைத்தோம். பிறகு கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து அவர் மேல் தூவி விட்டு "ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை" எல்லாம் பாடி விட்டு பார்த்தால் அவருக்கு கொடுக்க பால் இல்லை. பூஜையறையில் இருந்து விநாயகரை கடத்தியது போல் சமையலறையில் இருந்து பாலை கடத்துவது அவ்வளவு எளிதான ஒரு விடயமாய் இருக்க வில்லை. என்ன கொடுமை கடவுளே இது என்று நொந்தவன் பின் மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அடியேனின் அன்பை அறியாதவரா கடவுள் கொடுப்பதை மனமுவந்து ஏற்பார் என்ற நம்பிக்கையுடன் spoon ஒன்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் toilet போகும் போது தண்ணீர் அள்ள பீப்பாய் ஒன்று வைத்திருந்தனர். அதிலிருந்து சிறிது தண்ணீர் அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்க என்ன ஆச்சரியம் ஒரு சொட்டு விடாமல் அவ்வளவையும் உறிஞ்சிக் குடித்தார் பிள்ளையார்.

அதிசயம் பார்க்க ஆசைப் பட்ட என் மச்சான் " பாவம் பிள்ளையாருக்கு ரொம்ப தாகம் போல" என கூறி பிள்ளையார் மேல் பலியை போட்டு விட்டு கக்கூஸ் தண்ணியை மேலும் அள்ளி அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்கத் துவங்கினான். அசூயை படாமல் பொறுமையாக அவ்வளவையும் குடித்தார் பிள்ளையார். சாமி காக்கூஷ் தண்ணி என சந்தேகம் கிளப்ப முற்பட்ட மச்சானை "போடா பிள்ளையார் அப்படித்தான் எளிமையானவர் சாணத்தில் பிடித்து வைத்தாலே அவர் வந்து விடுவார். கோமயம் எலாம் அவருக்கு பிடித்த அபிஷேகப் பொருள் பார்வதி குளிக்கும் போது தேய்த்ததில் உருவான ஊத்தை தானேடா அவர் அதான் ரொம்ப விரும்பிக் குடிக்கிறார் என அவன் வாயை அடைத்தேன்.

அன்று முழுவதும் எல்லையில்லா ஆனந்தத்துடன்தான் இருந்தேன். பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.

அப்போதுதான் இடியென தாக்கும் அந்த செய்திக் கிடைத்தது. அதாவது சில விஞ்ஞானிகள் ஏதோ நிறமூட்டிய பாலை கொடுத்த போது பால் சிலையில் துளியாக இருந்ததைக் கொண்டு மயிர்துளைவிளைவு மற்றும் மேற்பரப்பு இழுவிசை என்பவற்றின் ஊடாக ஏதோ விளக்கமளித்து விட்டனராம். திரவ மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் மேற்பரப்பிழுவிசையினால்(surface tension) புவிஈர்ப்பினையும் மீறி பால் மேலேத் தள்ளப் பட அங்கிருந்து மயிர்த்துளை விளைவினால்(capillary action) பால் தொடர்ந்தும் உள்ளே செல்கின்றது என்பதே இவ்விளக்கமாகும்.

விண்வெளியில் புவியீர்ப்பு புறக்கணிக்கத் தக்க அளவில் தொழிற்படும் இடத்தில் திரவப் பானங்களை பருக மேற்படி மேற்பரப்பிழுவிசையை அவர்கள் பயன்படுத்த நாம் பிள்ளையாரைப் பால் குடிக்க வைக்க பயன் படுத்துகிறோம் இன்னதென்று தெரியாமலே.
தாவரங்களில் காழ் இழையம் வழியே தொடர்ச்சியாய் நீர் உட்செல்வதிலும்
(சாற்றேறம்) மேற்படி விடயங்கள் பங்களிக்கின்றன.

விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி, குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.



செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி - My sassy girl


காதலித்திருக்கிறீர்களா? இல்லையென்று சொல்லும் வெகு சொற்பமானவர்கள் இங்கேயே கழண்டுக் கொள்ளுவது உத்தமம். எஞ்சியவர்களில் சில பேர் காதலை ப்ரொபோஸ் செய்யும் முயற்சியில் இருந்த போது காதலி லேசாக முறைத்ததற்கே "போடி நீயும் உன் முகரையும்" என்று இந்தப் பழம் புளிக்கும் கதையாய் திரும்பி நடையைக் கட்டியவர்களா? இந்தப் படம் உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம் (அதுதான் உண்மையும் கூட).

இப்போது எஞ்சியிருப்போரைப் பற்றிதான் எனக்குத் தெரியுமே. ஒரு நாள் சிரித்து இனிக்கப் பேசும் காதலி (அதாவது நீங்களாக சொல்லிக் கொள்வது) மறுநாள் நீங்கள் யாரென்றே தெரியாதது போல இருக்கும் பார்வையின் மர்மம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். அவளது குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக நீங்கள் செய்யும் காரியங்கள் அவளால் வெகு எளிதாக அலட்சியப் படுத்தப்படும் போது சொரணை என்பது கொஞ்சமாவது எட்டிப்பார்க்க வேண்டுமே ம்ஹ்ம் அசடு வழிய மறு நாளும் தொடர்வீர்கள். திடிரென I LOVE YOU என SMS வரும் அவளோடு செட்டில் ஆகும் வாழ்க்கைப் பற்றி கலர் கலராய் கனவுகள் கண்டு விட்டு அவளிடம் செல்லும் போது "அய்யய்யோ இது அவருக்கு அனுப்ப வேண்டியது சொறி" என ஒற்றை வார்த்தையில் முடிப்பாள். இத்தனைக்குப் பிறகும் குடித்தழிவதும் புகை வளையங்களாய் ஊதித் தள்ளுவதும் நீங்கள்தானே ஒழிய அவளை வெறுக்கவே முடியாது. ஏன் என்று மனதிற்குள் கேட்டுப் பார்த்தால் காரணம் காதல் என்றுதான் தோன்றும் இதையும் " இல்லப்பா காதலை எல்லாம் உணர நீ இன்னும் வளரனும் இது வெறும் Infatuation " என்று சொல்லி விட்டு அவளுக்கு சரியான காலத்தில் வந்தக் காதலை கொண்டாடிக் கொண்டிருப்பாள். இத்தனைக்கும் பிறகு அவளை என்ன செய்ய தோன்றும்????? வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் காதலிக்கலாம்.

இதேதான் நடக்கிறது நம்ம ஹீரோ Gyeon-woo வுக்கும். பெற்றோருக்கு கட்டுப்பட்ட அமைதியான சுபாவம் கொண்ட அப்பாவியான இளைஞன். ரயில் நிலையமொன்றின் platform இல் நன்றாக குடித்து விட்டு தள்ளாடிய படி ரயிலில் அடிபடப் போகும் இளம்பெண்ணை தெரியாத்தனமாய் காப்பாற்றுகிறான். ரயிலுக்குள்ளும் அடாவடியாய் நடப்பவளிடமிருந்து தள்ளியே நிற்கிறான். இருந்தாலும் விதி விளையாடுகிறது. இவனைப் பார்த்து Honey என சொல்லி விட்டு மயக்கமாகிறாள். பிடித்தது ஏழரை சனி எல்லோரும் இவனை அவளது காதலன் என நினைப்பதால் உப்புமூட்டை தூக்கி கொண்டு போய் ஒரு லொட்ஜில் அவளுடன் தங்குகிறான். அத்தோடு விட்டால் பரவாயில்லை.

அடுத்தடுத்த
நாட்களில் இவனை தேடி வந்து இம்சிக்கிறாள். அவள் எழுதிய திரைக்கதைகளை கஷ்டப்பட்டாவது வாசிக்க வைப்பது. அவளது வகுப்பறைக்கு வந்து பூ கொடுக்கச் சொல்வது இப்படி கட்டாயப் படுத்தி செய்ய வைக்கிறாள். மறுத்தால் ரொம்ப சிம்பிள் அடி உதை துவைத்தெடுத்து விடுவாள். அவளது ஹை ஹீல்ஸ் காலனியை இவனை அணியச் செய்து நடு ரோட்டில் தன்னைத் துரத்திப் பிடிக்கச் சொல்கிறாள். அடிப்பதை பந்தயமாக கொண்டு ஒரு போட்டி. முதலில் அவள் தோற்க செல்லமாய் நெற்றியில் சுண்டுகிறான். அடுத்து இவன் தோற்க அத்தனை பேர் முன்னிலையிலும் இவன் காலரைப் பிடித்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி பளார் பளார். பேசாமல் விட்டுத் தொலையலாம்தானே நம்மைப் போலவே அவனும் நினைத்தாலும் முடியவில்லை காரணம் நான் மேலே சொன்ன அந்தப் பாழாய்ப் போனக் காதல்.

பிறிதொரு நாளில் பெற்றோர் அவளுக்கு பார்த்து வைத்திருப்பவனோடு Dating சென்ற இடத்தில் இவனும் வர அவள் பாத்ரூம் போன நேரம் பார்த்து இவனிடம் அவளைப் பற்றிக் கேட்கும் மாப்பிளையிடம் அவளுக்குப் பிடித்தமானவனாய் இருக்க 10 Rule களை சொல்கிறான். அடி வாங்கினாலும் வலிப்பதை காட்டிக் கொள்ளாதே, வலிக்கா விட்டால் வலிப்பதை போல நடி இத்யாதி இத்யாதிகள் அதைக் கேட்டு உருகிப் போகின்றவள் இவனைத் தேடி ஓடுகிறாள்.(பார்த்தது போல் இருக்கா இதைத்தான் SMS இல் சுட்டு இருந்தார்கள்). இவன் மேல் தனக்கும் பீலிங்க்ஸ் இருக்கா என குழப்பமாய் இருப்பதாய் சொல்பவள் தான் அவனுக்கு சொல்ல விரும்புவதையும் அவன் தனக்கு சொல்ல விரும்புவதையும் கடிதமாய் எழுதி ஒரு முட்டை வடிவ போத்தலில் இட்டு மலையுச்சி ஒன்றின் மேலிருக்கும் மரத்தின் கீழ் புதைக்கிறார்கள். இரண்டு வருடம் கழித்து வந்து வாசிப்பதாயும் அப்போதும் ஏதேனும் பீலிங்க்ஸ் மிச்சமிருந்தால் காதலிப்பதாயும் ஏற்பாடு. இரண்டு வருடம் கழித்து பார்த்தால் ஹீரோ மட்டும் வந்திருக்க அவளைக் காணோம். பொறுமையிழப்பவன் கடித்தத்தை எடுத்துப் படித்தால் இறந்துப் போன அவளது முன்னாள் காதலன் போல இவன் இருந்ததால்தான் Honey என்றாளாம். அவனுக்கு கொடுத்த இம்சைகளெல்லாம் தன பழைய காதல் ஞாபகங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளத்தானாம். அவன் அப்படி எல்லாம்தான் அவர்கள் காதலிக்கும் காலத்தில் செய்தானாம். "என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்" என நாம் சந்திரமுகி பிரபு கணக்காய் தலையிலடித்துக் கொள்ள அதற்கப்புறம் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை Youtube இலோ வேறேதும் தளத்திலேயோ 2001 ஆம் ஆண்டு வெளிவந்த My sassy girl கொரியத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஹாலிவுட்,பாலிவுட் அட நம்ம தமிழ்ப்படம் அளவுக்கு கூட ஒரு ரிச்னெஸ் இருக்காது. ரொம்ப யதார்த்தமான கதையோ அல்லது உயர்ந்த கலானுபூர்வ அனுபவத்தைத் தரும் படைப்போக் கிடையாது. புனிதமெனக் கூறப்படும் காதலின் மகத்துவம் கூறி பார்வையாளர்களை உணர்ச்சிவசப் படச் செய்யும் இன்னுமொரு மெலோட்ராமா. மிகையுணர்வை வெளிக்காட்டும் நடிப்பு, கொஞ்சமும் யதார்த்தமற்ற காட்சிகள், பார்வையாளனை திருப்திப் படுத்தவெனவே திணிக்கப் பட்ட திருப்பங்கள், இறுதியில் சுபம் என ரொம்பவும் வழமையான படமாயிருந்தாலும் அதெல்லாம் படம் பார்த்து முடிந்து யோசித்தால் மட்டுமே உறுத்துகிறது. மற்றும் படி படம் ஆரம்பித்து முடியும் வரை உதட்டோரம் சிரிப்போடு பார்த்து கொண்டிருந்த எனக்கு இறுதியில் தோன்றியது ச்சே இப்படி அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி இருந்திருக்கலாம். ஒருவேளை படத்தின் வெற்றியும் இதுவாய் இருக்கலாம்.

படம் பார்க்க விரும்புவோர் கட்டாயம் பாருங்கள் ஒரு நல்ல டைம் பாஸ் படம். அய்யய்யோ கொரியன் படமா எனக்கு அவங்க மூஞ்சே பிடிக்காது, சப் டைட்டில் படிக்கிறதா, படம் பார்க்கிறதா எனவெல்லாம் அங்கலாய்ப்போர் 2008 இல் வந்த இதன் ஆங்கில ரீமேக் பார்க்கலாம். Elisha cuthbert நடித்தது நான் பார்த்ததில்லை இருந்தாலும் ஒரிஜினல் அளவு இல்லை என்பது நண்பர்கள் கருத்து.
Related Posts with Thumbnails