ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள் பாகம் II




 பாகம்  I
5 . நாயகன் 

டைம்ஸ் சஞ்சிகையினால் எப்போதைக்குமான சிறந்த 100  படங்களில் ஒன்றாக தெரிவானது. பம்பாயில் தாதாவாக கோலோச்சிய தமிழர் வரதராஜ முதலியாரின் கதையையே எடுத்ததாக மணிரத்னம் சொன்னாலும், The God father படத்தின் இரு பாகங்களினதும் பாதிப்பு படம் பூராகவே தெரியும். படத்தைப் பார்த்த போது பிரமித்துப் போயிருந்தாலும் பிறகு The God father பார்த்த போது நொந்து போனதும் உண்மை. ஆனாலும் படத்தை சிறப்பாக தமிழ் படுத்திய வகையில் மணிரத்னம் நிச்சயம் பாராட்டுக்குரியவரே. இதே படத்தின் ஹிந்தி ரீமேக் "தயாவான்" பார்த்தால் மணியின் அருமை புரியும். பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லாமே ஒரு படத்துக்கு சிறப்பாக அமைந்தது இந்தப் படத்திற்காய்த்தான் இருக்கும். 

4. மகாநதி 


கமலின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. குழந்தை பாலியல் தொழிலாளர்கள் பற்றி உருக்கமாக சொன்ன திரைப்படம். சிறைச்சாலை சென்ற அனுபவம் பெற விரும்பினால் நான் தாராளமாய் பரிந்துரைக்கும் படம் the sawshank redemption . அதற்கு கொஞ்சமும் குறையாத வகையில் தமிழில் இயல்பான சிறைச்சாலைக் காட்சிகள் இடம் பெற்ற படம் என மகாநதியைக் கூறலாம். சலனமற்று  ஓடும் நதியைப் போல தன் போக்கில் இயல்பாய் வாழும் கிருஷ்ணஸ்வாமி பணத்தாசையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதன் விளைவாக அவன் சந்திக்கும் இழப்புகளையும் அடுத்து, தேடிச் சோறு  நிதந்தின்று வாழும் சின்னத்தனமான வாழ்க்கையை விடுத்து கட்டற்ற காட்டாறாய் மாறி அதற்கு காரணமானவர்களை பலி தீர்ப்பதே கதை. நுணுக்கமான நடிப்பு என்பார்களே அப்படி என்றால் என்னவென கமலின் இந்தப் படத்தில் பார்க்கலாம். 

3.  அன்பே சிவம் 


கமல் என் பிரிய நடிகர்களில் ஒருவரான மாதவனுடன் சேர்ந்து நடித்தப் படம். எப்போதும் ஆள் மாறாட்ட குழப்பங்களை வைத்து நகைச்சுவையாய் கதை சொல்லும் சுந்தர் c படம் என்பதால் அன்பு ,சிவம் என இருவர் அவர்களிடையே ஏற்படும் ஆள்மாறாட்ட குழப்பம் என எதிர்பார்த்தால் சுந்தரிடமிருந்து இப்படி ஒரு படமா என வியக்க வைத்தப் படம். நல்லசிவம்  அதீத புத்திசாலித்தனத்தையும், வர்க்க உணர்வையும் தன சோடாப் புட்டி கண்ணாடிக்குள் மறைத்துக் கொண்டு கலகலப்பாய் வாழும் ஒரு போராளி. முதலாளித்துவத்தின் பிரதி நிதியாக அன்பரசு என இரண்டே பாத்திரங்கள் அவர்களுக்கிடையிலான உரையாடல் என் செல்லும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றது சுந்தரின் சாமர்த்தியம்.ஒரு கம்யுனிஸ்டுக்கு இருக்க வேண்டிய தீவிரம் கமலிடம் இருக்காது. அத்தோடு  படத்தை ஆழமாகப் பார்த்தால் பாட்டாளிகளின் எதிரிகளான  பூர்ஷ்வாக்களையும்  அரவணைத்துச் செல்வதே பொதுவுடமைக்கான வழி என்ற ஒரு போலியான தீர்வைக் காட்டுவதாக வேறு தோன்றும்.எனினும் ஆங்காங்கே வரும் அழகான வசனங்களுக்காகவே படத்தைப் பார்க்கலாம். 

2. வறுமையின் நிறம் சிவப்பு 

 என்னை அதிகம் பாதித்த சினிமா பாத்திரம் எது எனக் கேட்டால் Forrest gump க்கு பிறகு இதைத்தான் சொல்வேன். இளந்தாடியும் புத்திசாலித்தனமும் சுயாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக அறச்சீற்றமும் மிகுந்த கோபக்கார இளைஞன் ரங்கன். காதலுக்காக கூட தன சுயத்தை விட்டுத் தராத அளவுக்கு கர்வம் மிகுந்தவன்.  இந்தப் பாத்திரம் தந்த பாதிப்பில் நானும் முகச் சவரம் பற்றிய கவலை எல்லாம் மறந்து திரிந்த நாட்கள் உண்டு. 

1. சலங்கை ஒலி

 நிராகரிப்பை போன்று வலி தரக்கூடியது வேறெதுவுமில்லை. சலங்கை ஒலி  அப்படி தன் கனவான நாட்டியத்திலும் சரியான அங்கீகாரமின்றி, காதலிலும் வெற்றிப் பெற முடியாது குடிபழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர்களை விமர்சித்தேனும் தன் சுயத்தை நிறுவ முயலும் ஒருவனின் கதை. 
ஈற்றில் அங்கீகரிக்கப்படாது போன தன் திறமையை தன் காதலியின் மகளின் நாட்டியத்தின் மூலம் மீட்டெடுத்து அக்கைத்தட்டல் தந்த திருப்தியில் உயிர் விடும் பாலக்ருஷ்ணன் பாத்திரம் அலட்சியமும் நிராகரிப்பும் தனிமையும் சூழ்ந்த ஒரு வாழ்வின் கொடுமையை நம்முன் நிகழ்த்திக் காட்டியப் படம். எத்தனை முறை பார்த்தாலும் படம் தரும் பாதிப்பு ஒரு போதும் குறைவதில்லை. என்னளவில் கமலின் ஆகச் சிறந்தப் படம் இதுவே. 



ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள்

கமல், உலகின் ஆகச் சிறந்த நடிகர் எனவும் இவர் மட்டும் ஹோலிவூட்டில் பிறந்திருந்தால் டேவிட் ஹோப்மன், அல் பசினோ, டோம் ஹான்க்ஸ் வகையறாக்கள் வீட்டுக்கு மூட்டை கட்டியிருக்க வேண்டுமெனவும் அவர்தம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அது சற்று மிகைப்படுத்தப் பட்ட கூற்று எனினும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மிகச் சிறு வயதில் நான் பார்த்த கமல் படங்கள் எல்லாம் அருமையான மசாலாக்கள். உயர்ந்த உள்ளமும் தூங்காதே தம்பி தூங்காதேயும் மறக்க இயலாத படங்கள். உயர்ந்த உள்ளத்தில் அந்த ஆட்டோ சேசிங் காட்சி இன்னமும் கண்முன் நிழலாடுகிறது. அப்போது ரஜினி கமல் பேதம் எல்லாம் கிடையாது. தொன்னூறுகளில் ரஜினி பித்து தலைக்கடித்திருந்த நேரம் கமல் படங்கள் எப்போதும் தோல்வியுற வேண்டுமென நினைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.ரஜினி- கமல் என்ற வரிசை இனி ஒரு போதும் கமல்- ரஜினி என மாறி விடாது என்ற நம்பிக்கையினாலிருக்கலாம்.
உலக நாயகன், கலைஞானி, சூப்பர் ஆக்டர் எனப் பல பட்டங்கள் இவருக்கு வழங்கப் பட்டாலும் எனக்குப் பிடித்ததென்னவோ காதல் இளவரசன்தான். சத்யாவில் வரும் "வளையோசை" பாடல் போதும். இவர்தான் என்றென்றைக்குமான காதல் இளவரசன் எனச் சொல்ல.

சரி இனி என் பார்வையில் கமலின் சிறந்தப் பத்து படங்கள் எனக் கருதுபவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்இது என் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. உங்கள் கருத்துகளையும் கீழே பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்

10. மும்பை எக்ஸ்பிரஸ்

கமல் என்ற நடிகனை விட்டு விடுங்கள். ஒரு திரைக்கதாசிரியராகவும்  வசனகர்த்தாவாகவும் கமல் என்னைப் பெரிதும் ஈர்த்தப் படம் இது. வாத்தியார் சுஜாதா சொன்னது போல முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடும். கதாப்பாத்திரங்களுக்கிடையே நிலவும் குழப்பங்கள், கிரேசி மோகன் பாணியில் வசனங்கள் என இந்த ஸ்டைலில் அவர் நிறையப் படங்கள் எடுத்திருந்தாலும் இது அவை அனைத்தையும் விட நேர்த்தி மிக்கது என்பது என் கருத்து. பசுபதிக்குள் இருந்த நகைச்சுவை நடிகனை வெளிக்கொணர்ந்த படம். கட்டுகோப்பான திரைக்கதை என்பதாலேயே என்னை ஈர்த்தது. இது நிச்சயம் எங்கும் சுட்டப் படம் அல்ல என்று நம்புகிறேன். ஆனால் தாராளமாக ஹோலிவூட்டிலும் முயன்று பார்க்ககூடிய கதை.


9. வேட்டையாடு விளையாடு

 
கமல் அற்புதமானதொரு நடிகர். என்ன சில நேரங்களில் நன்றாக நடிப்பதோடு கொஞ்சம் அதிகமாகவும் நடித்து விடுவார். நஸ்ருதீன் ஷா அலட்டாமல் செய்த common man பாத்திரத்தை வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை தனத்தோடு செய்தது ஒரு உதாரணம். ஆனால் கமல் வெகு இயல்பாக நடித்த பாத்திரம் வேட்டையாடு விளையாடின் ராகவன் பாத்திரம். பெரும்பாலும் கமல் தன்னை முழுமையாக கெளதம் மேனனிடம் ஒப்படைத்திருப்பார் என நினைக்கிறேன்.

8. ஹேராம்

சில காட்சியமைப்புகளில் இயக்குனர் கமலும் பல காட்சிகளில் நடிகர் கமலும் தனித்து தெரிந்தாலும் திரைக்கதை கொஞ்சம் பலவீனமானதாக இருந்ததாக உணர்வு. கல்கத்தாக் காட்சிகளில் தெரியும் குறும்புத்தனம், வன்செயல்களின் போது கண்களில் காட்டும் பயமும் பதட்டமும், இரண்டாம் முறை பெண் பார்க்கையில் மெல்லிய சலனம் எட்டிப் பார்த்தாலும் அதை மறைக்கும் அலை பாயும் மனம், காந்தியை கொல்லக் கிளம்புகையில் கண்களில் காட்டும் வன்மம்(இதில் அதுல் குல்கர்னி கமலையும் மிஞ்சியிருப்பார்என அசத்தியிருப்பார். கற்றது தமிழில் தன் கொலைகளைப் பற்றிச் சொல்லும் ஜீவா அது புணர்ச்சியை ஒத்த மகிழ்வைத் தரக் கூடியது எனப் பொருள் பட ஒரு வசனம் பேசுவார். கமல் ஹேராமில் வசுந்தராதாசை துப்பாக்கியாக நினைத்துப் புணரும் காட்சி எத்தனை அழகான ஒரு குறியீடு. முத்தக் காட்சிகள் கூட கவிதையாகவே இருக்கும்.

7. குணா


stockholm syndrome சுவீடனின் ஸ்டொக்ஹோல்மில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் பிணைக்கைதிகளாக பிடித்திருந்தவர்களுக்கு சில நாட்களின் பின் அக்கொள்ளையர்கள் மீது ஏற்பட்ட பிடிப்பினை வைத்து உளவியலில் பாவிக்கப் பட்டு வரும் பதம். கிட்டத்தட்ட இதே கதைதான் குணாவும். விபச்சாரியான  தாய்க்குப்  பிறந்து அச்சூழலிலேயே வளரும் மனநலம் பிறழ்ந்த குணசேகரன் தன்னை சிவமாக எண்ணுவதோடு  தன்னை அபிராமி ஆகிய சக்தி வந்தடைவாள் எனவும் நம்புகிறான். அபிராமி என அவனால் கடத்தப் படும் பெண்ணுக்கு காலவோட்டத்தில் குணா மீது வரும் காதலே திரைப்படம். படம் நிச்சயமாக  ஒரு கிளாசிக்  இன்னமும் 20 வருடங்களுக்கு பின் பார்த்தாலும் நிச்சயம் பேசப்படும்.

6. மூன்றாம் பிறை 

 
ஷோபாவின் பிரிவு தனக்கு ஏற்படுத்திய துயரத்தை திரையில் கொண்டு வர பாலு மகேந்திரா எடுத்த திரைப்படம். நன்கு பக்குவப்பட்ட ஒரு பாத்திரம் கமலுக்கு, ஆசிரியர் பாத்திரம் அல்லவா. ஸ்ரீதேவியை வெகு சிரத்தையோடு பார்த்துக் கொள்வதும், ஒரு கணம் கோபம் கொண்டு பின் சமாதானம் செய்வதும் வெகு அருமையாக நடித்திருப்பார். கிளைமாக்ஸ் இல் கமலுக்கு ஏற்படும் வலியை நம்மையும் உணரச் செய்வது படத்துக்கு கிடைத்த வெற்றி. சிறு வயதில் தம்பியையும் பிறகு எங்கள் சித்தியின் மகளையும் தூங்கச்  செய்ய இந்தப் படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடலைத்தான் பாடுவேன். நாளை என் பிள்ளைகளுக்கும் இதைப் பாடலாம். காலத்தை வென்ற அருமையான தாலாட்டுப் பாடல்
Related Posts with Thumbnails