சினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின் வாழ்வில் ஆடும் சதியாட்டமே வெற்றிமாறனின் "ஆடுகளம்". நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு அருமையான படம்.
சேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(வ. செ. ஜ.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.
தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும் விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம்.
வெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா? இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம் செய்திருக்கிறார்.
அதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் வ.செ.ஜ.ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.
ஏ. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.
ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.
ஆடுகளம் - அதகளம்