ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதியும் பெண்ணியமும்



“இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி” அதாவது இலக்கியம் என்பது தான் ஆக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்த சமூகத்தையும் அதன் பண்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.அவ்வாறன இலக்கியங்கள் சமூகத்தில் புரையோடியிருக்கும் அவலங்களையும் பிற்போக்கான நம்பிக்கைகளையும் சாடும் போது அவை இச்சமூகத்தை விட்டு அகலக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வகையில் தாம் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சமூகத்தில் காணப்பட்ட அவலங்களை சாடியதோடு நாளைய சமூகம் அமைந்திருக்க வேண்டிய விதம் தொடர்பிலும் தீர்க்கதரிசனத்தோடு சொல்லிச் சென்றவர் என்ற வகையில் மகாகவி பாரதி முக்கியத்துவமுடையவனாகின்றான்.

பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் இந்தியா முழுமையும் அந்நியர் ஆட்சியில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் முகமாக அவர் பாடிய தேசிய எழுச்சிப் பாடல்கள் ஆங்கிலேய ஏகாதிபத்திய எரிமலையை சுட்டெரித்தது. அத்தோடு நில்லாமல் சக மனிதனை மதிக்காது ஜாதி வேறுபாடு பாராட்டும் இழிவான மக்கட் கூட்டத்தை தன் பாடல்களால் சாடியதோடு நில்லாமல் நாளைய சமூகம் அவ்வாறான இழிசெயல்களை செய்யாமல் இருக்கும் பொருட்டு குழந்தைகளுக்காக பாடிய பாப்பா பாட்டில் கூட ஜாதி வேற்றுமை கூடாதென்பதை வலியுறுத்தினார்.

இலக்கணக் கட்டுக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ்க் கவிதைகளை வசனக்கவிதை எனும் புதுப்பாதை காட்டி அழைத்து வந்து மெருகேற்றிய பாரதி அன்றைக்கு தமிழுக்கு புதுவரவாயிருந்த சிறுகதையை கையாண்டு பார்த்தவர்களிலும் முக்கியமான ஒருவர் . பாரதி தமிழர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதற்காகவும், ஜாதிக் கொடுமைகள் பற்றிப் பாடியதற்காகவும், தமிழைப் புதியப் பாதையில் பயணிக்கச் செய்ததற்காககவும் மட்டும் ஒரு புதுமைக்கவியாகவோ மகாகவியாகவோ போற்றப் படுவதில்லை. மாறாக அவர் பெண்மையைப் போற்றும் பெண்ணியப் பாடல்களே அவரை புதுமைக்கவியாகவும், தீர்க்கதரிசியாகவும், தத்துவவியலாளராகவும், மகாகவியாகவும் கொண்டாடச் செய்கின்றது என்று கூறினால் அது மிகையல்ல.

காலத்திற்கு காலம் பெண்ணியம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். பெண்ணியச் சிந்தனையானது முதலாளியத்திற்கு எதிரான வர்க்கப் போர் தீவீரம் பெற்ற காலங்களில் முதலாளியத்தில் காணப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்த மார்க்சிய சிந்தனையாளர்களாலேயே முதன்முதலில் முன்வைக்கப் பட்டது எனலாம்.

பெண்ணியம் தொடர்பில் மேன்னாட்டு அறிஞர்கள் கூறிய சில கூற்றுக்களை எடுத்து பார்க்கும்  போது கார்டன் என்ற அறிஞர் " பெண்ணின் தாழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்ற எடுக்கும் வழிமுறைகள் பெண்ணியம் எனப்படும்." என்றார். ஜெயின் என்பவர் " பெண்கள் தன்மையில் ஆண்களில் இருந்து வேறுபடினும் அவர்களும் தமக்குள் இணைந்து தாம் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தலே பெண்ணியம்" என்பார். புட்சர் என்பவரோ " பாலினப் பாகுபாட்டால் பெண்களை எதிர்த்து இடம்பெறும் கொடுமைகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இயக்கம்" என்றார். பார்பரா ஸ்மித் மிக எளிமையாக "எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தருவது பெண்ணியம்" என்றார்.

மேன்னாட்டு அறிஞர் கூற்று எவ்வாறு அமையினும் எம் பெண்களுக்கு பொருத்தமான எம் பெண்களுக்கு தேவையான சீரிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினால் அது மிகையாகாது.

பெண்ணியம் தொடர்பில் மேல்நாட்டு அறிஞர்கள் கூறியக் கருத்துக்கள் இவ்வாறு கிடக்க பாரதியின் பெண்ணியச் சிந்தனை தொடர்பில் அடுத்த பதிவில் பார்க்கலாம். 
(தொடரும்.........)



பின்குறிப்பு - நான் சாதாரண தரம் கற்கும் போது கிட்டத் தட்ட 12 வருடங்களுக்கு முன் தமிழ் பாடத்தில் ஒரு ஒப்படைக்காக எழுதியது. அமேச்சூர் தனமாக இருக்கலாம். மன்னிக்க.........

வெள்ளி, 2 டிசம்பர், 2011

கார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்



“Behind the success of every man there is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன் திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள், அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு  என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.
படத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

கார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும் ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி. சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின் போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக் கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும் கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.

புதுப்பேட்டையிலிருந்தே
கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்னவில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.

செல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.

செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு, 100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா? என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது எல்லாம் விசுவல் ட்ரீட்.

காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.

ராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர் அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில் சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.


ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல 
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்

வழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”. 

Related Posts with Thumbnails