செவ்வாய், 14 மே, 2013

மரியான் பாடல்கள் என் பார்வையில்





மரியான்  பாடல்கள் "கடல்" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற  போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது.

இன்னும்  கொஞ்ச நேரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நாட்டுப்புற ஸ்டைலை டச் செய்திருக்கிறார்  “இன்னும்  கொஞ்ச நேரம்”  பாடலில், விஜய் பிரகாஷ் வெஸ்டர்ன், க்ளாசிக் என இரண்டிலும் ஸ்கோர் செய்பவர் இங்கு போல்க்கிலும்.  ஏடி கள்ளச்சியிலேயே அசத்தியவர்தான் . கூடவே அவரது அம்மா  போலவே கொஞ்சுகிறார் ஸ்வேதா மோகன் .

சோனாபாரீயா

சென்யோரீட்டா, லோலிட்டா போல ஒரு புதுவார்த்தை  “சோனாபாரீயா”,  ரொம்பவும் எனர்ஜட்டிக்கான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. ப்ரீலியுட் வாத்திய இசையே கொண்டாட்டமான உலகுக்கு கொண்டு செல்கிறது. ஆமா  சோனாபாரீயா என்றால் என்ன?

நேற்று அவள் இருந்தாள்

குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. கொஞ்சம் எங்கோ கேட்ட சாயலும். அசத்துகிறார்கள் விஜய் பிரகாஷும் சின்மயியும்.

I Love my Africa

தமிழுக்கு முற்று முழுதான புது இசை. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆபிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. பாடல் முழுதும் தொடரும் தாள வாத்திய இசையே பாட்டின் ப்ரெஷ்னசுக்கு காரணமாய் இருக்கும்.

எங்க போன ராசா


சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் நெஞ்சுக்குள்ள ரேஞ்சுல எதிர்பார்த்தால் ஒரு மாற்று குறைவுதான் என்ற போதும் மோசமில்லை. பல்லவியில் கேட்பவர்களுக்கு (அது நாந்தேன்) ஒரு அயர்ச்சி இருந்தாலும் சரணத்தில் சரியாகிவிடுகிறது.

நெஞ்சே எழு

பாட்டுக்கு  மெட்டாயிருக்கக் கூடும். ரஹ்மான் குரலே பிரதானம். குட்டி ரேவதிக்கு நல்வரவு


கடல் ராசா

நனவிடைத் தோய்தல் நம்ம பாசையில் சொன்னால் Nostalgia அட யுவன் நல்லா பாடியிருக்காரே எனத் தோணுவது பாடலின் முதல் வெற்றி, பாடலாசிரியராக நன்றாகவே செயற்படுகிறார் பொயெட்டு தனுஷ்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கடல் - என் பார்வையில்


நம்மெல்லோர் முன்னும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று இலகுவாக சுகபோகங்களை அள்ளித்தரும் சாத்தான் வழிநடத்தும் தீய பாதை. மற்றையது அளவில்லா சோதனைகளை தந்தாலும் இறுதியில் ஒரு ஆத்ம திருப்தியையேனும் தரும் தேவனின் புனித பாதை. துரதிஷ்டவசமாக மனிதன் முதலாவதையே தெரிவு செய்கிறான். அந்தப் பாதையில் செல்பவன் சிறிது தூரம் கடந்ததும் விபரீதம் புரிந்து திரும்ப எத்தனித்தாலும் அது அத்தனை இலகுவில்லை. ஏன் அந்த தேவனாலேயே கூட அவனை ரட்சித்து மீளக் கொணர்வது கடினம். ஆனால் மனிதத்தின் உயரிய பண்பு அன்பு. சாத்தானுக்குள் கூட மிச்சமிருக்கும் ஒரு துளி வெளிச்சம் அது. அதனால் எதுவும் சாத்தியம். வழி தவறியவனை மீட்கும். தேவனே வழி மாறினாலும் தடுக்கும். அவ்வளவு ஏன் அந்த சாத்தானையே தோற்கடிக்கும். ஆம் அன்பு ஒன்றே இவ்வுலகில் சாஸ்வதமானது. மேற்படி கருத்தை ஒரு மீனவக் கிராமப் பின்னணியில் மணிரத்தினம்- ஜெயமோகன் கூட்டணி சொல்லியிருக்கும் படமே கடல்.

 எத்தனை அழகான ஒரு கரு படம் பார்த்த ஒவ்வொருத்தனும் மனம் முழுதும் தேவ குணங்கள் அரும்ப நெகிழ்ச்சியாய் வரவேண்டியவன்,  கொலைவெறியேறி  சாத்தான்களாக வரும் வகையில் படமாக்கியிருக்கிறார் மணி.

மணிரத்னம் என் பிரிய இயக்குனர்களில் இவருக்குத்தான் முதலிடம். மணிரத்தினம் மேக்கிங் என்று வாய் பிளந்த காலமொன்றுண்டு. நல்ல தொழினுட்ப கலைஞர்களின்  கூட்டு இருந்தால் துண்டு துக்கடா இயக்குனர்களும் மேக்கிங்கில் அதகளம் பண்ணலாம் என்ற நிலையில் திறமையான திரைக்கதையின் மூலமே தன நிலையை தொடர்ந்து தக்க வைக்கலாம் என்பதை மணி மறந்து விட்டார். "ராக்கம்மா கையத் தட்டு" போன்ற ஒரு பாட்டை படமாக்கியவர் இந்த படத்தில் "அடியே " படமாக்கி இருக்கும் விதத்தை பார்த்தால் எதால் சிரிப்பது என்றே தெரியவில்லை மொண்டேஜ் ஷாட்களின் பின்னணியில் துண்டு துண்டாக நகரும் பாட்டாக இருக்கும் எனப் பார்த்தால் பாசி மாலைகள் சகிதம் 50, 60 க்ரூப் டான்சர்ஸ் புடை சூழ மானாட மயிலாட காம்படிஷனுக்கு வந்தது போல ஆடுகின்றனர் கவுதம் அண்ட் கோ. என்னை கடைசியாக திருப்தி படுத்திய படம் அலை பாயுதே மட்டுமே. அதற்கு முன்னும் ரோஜா முழுப் படமாக என்னை கவர்ந்ததை விட மதுபாலா,அரவிந்த சாமி காதல் காட்சிகளே கவர்ந்தது. பம்பாய், இருவர் ஓகே. அலைபாயுதேக்கு பிறகு கன்னத்தில் முத்தமிட்டால்  கொஞ்சமே கொஞ்சம் இம்ப்ரஸ் செய்தது. மற்றும்படி இன்னமும் நான் மணியின் படங்களில் தேடிப்பார்ப்பது மௌன ராகத்தின் கச்சிதத்தை, நாயகனின் பிரமாண்டத்தை, தளபதி தந்த நெகிழ்ச்சியை துரதிஷ்டவசமாக மேற்கூறிய எதுவும் கடலில் இல்லை.

கதை ஜெயமோகன். குறை சொல்ல ஏதுமில்லை. இந்த அழகான கதையை திரைக்கதையாக்கி படமாக்குவதில் மணிரத்னமே கோட்டை விட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. வசனங்களும் அருமை. ஆரம்பத்திலேயே அர்ஜுன் எனக்கு "பசியும் தெரியும், பைபிளும் தெரியும்" என்று சொல்ல அர்விந்த் ஸ்வாமி "எனக்கு பைபிள் மட்டும்தான் தெரியும்" என்கிறார். இருவரினதும் பாத்திரங்களின் இயல்புகளை தெளிவாக அந்த வசனமே சொல்லி விடுகிறது. சின்னவன் தொம்மனை மீனவர்களோடு அனுப்பும் போது "ஒரு வேளை கடலுக்கு இவனை தெரிஞ்சிருக்கலாம்" என்பது "எல்லாமே க்றித்தவங்கத்தான் ஆனா விசுவாசிகள்" இவையெல்லாம் பதம் பார்க்க சில சோற்றுப் பருக்கைகள். அத்தோடு கடினமான வட்டார வழக்கு என்றும் சொல்ல முடியாது. நானெல்லாம் ஏழாம் உலகத்தின் ஒரு இருவது பக்கத்து அப்புறம் அந்த மொழிக்கு நன்கு பரிச்சயப்பட்டு படித்து முடித்த பின் இருடே, நிப்பாட்டுடே, வாலே, போலேன்னு தூத்துக்குடி பாஷையவே பேசுனவன். அதோடு எல்லாம் ஒப்பிடும் போது வசனங்கள் எளிமையாகவே இருந்தது.

நடிகர்களில் முதலிடத்தை சந்தேகமின்றி தட்டிச் செல்கிறார் பாதர் சாம் ஆக அரவிந்த் சுவாமி அன்றைய கார்த்திக் போல பிறகு வந்த மாதவனைப் போல அலட்டலில்லாத அற்புதமான நடிப்பு.

பெர்க்ஸ்மான் அலையஸ் மேசைக்காரன் அலையஸ் சாத்தானாக அக்ஷன் கிங். அடிதடிதான் ஆண்மையின் இலக்கணம் என நம்பிய பதின்மங்களில் நானும் அர்ஜுன் ரசிகன்தான். அங்கே இங்கே தாவுவது, ஒன்றுக்கு ரெண்டு கதாநாயகிகளோடு குத்தாட்டம் போடுவது, கவுண்டர் அல்லது வடிவேலுவோடு நகைச்சுவை என்ற பெயரில் ஏதேனும் மொக்கை போடுவது என இருந்தவரை காலம் போன காலத்தில் திடிரென நடிக்கச் சொன்னால் என்ன செய்வார். ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடிக்க முயற்சித்திருக்கிறார்.

பிரபு விக்ரம், அதரவா முரளி, சுருதி ஹாசன், வரு சரத், ஐஸ்வர்யா அர்ஜுன் நாளைக்கே வரக்கூடிய சின்ன கேப்டன் என்ற வாரிசு நடிகர்கள் யாரையும் விட கவுதம் கார்த்திக்கை அதிகம் எதிர்ப்பார்த்தேன். காரணம் அவர் பெயருக்கு பின்னாலிருக்கும் கார்த்திக். ம்ஹ்ம் முதற்படம் என்றளவிற்கு ஓக்கே மன்னிப்போம்.


அப்புறம் அந்த உலகத்திலேயே இல்லாத ரெண்டு பேரழகிகளை பெத்திருக்கிற ராதாவை அவர் பொண்ணுங்களோடு சேர்த்து எங்காவது நாடு கடத்திட்டா தேவலாம். கடுப்பேத்துறாங்க மை லார்ட். பின்ன தேவனாலேயே ரட்சிக்க முடியாதவனை மீட்கும், சாத்தானையே அன்பினால் தோற்கடிக்கும் தேவதை எப்பேர்பட்டவளாய் இருக்க வேண்டும். சகிக்கல.

பாரதிராஜா தாஜ்மஹால் என்று ஒரு படம் எடுத்தார் இன்று பலருக்கு அந்த படம் நினைவில் இருக்க காரணம் இசைப்புயல். அது போல காலம் கடந்தாலும் நிற்கும் இசையை படத்துக்கு வழங்கியிருக்கிறார் படத்தின் நிஜ ஹீரோ ஏ. ஆர். ரஹ்மான். மண்வாசனை மண்ணாங்கட்டி வாசனை எல்லாம் விட்டு விடுவோம். படத்தில் பாடல்கள் என்பதே யதார்த்ததிற்கு அப்பாற்பட்டதுதான் எனும்போது அலைகள் ஓய்வதில்லையில் இருந்து கடலுக்குண்டான இந்த 30 வருடத்தில் கடற்கரையோர கிராமங்களில் இசையில் ஒரு இவாலுவேஷன் நடந்திருக்காதா?

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவை தனியே சிலாகித்தால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல விட்டு விடுவோம். மணிக்கு அப்புறம் படத்தின் மிகப் பெரிய சொதப்பல் ஸ்ரீகர் பிரசாத் தேசிய விருது பெற்ற எடிட்டர். சம்பந்தா சம்பந்தமில்லாது  கோர்வைவையில்லாது தாவி செல்லும் காட்சிகளின் தொகுப்பு. தலைவலிக்கு அதுதான் பிரதான காரணம்.

குப்பையில் கிடைத்த கோமேதகம் போல படத்தில் நெகிழ வைத்த ஒரு காட்சி.  துளசியிடம் தான் ஒரு பாவி என கவுதம் சொல்ல அவ்ளோதானே இதோட எல்லாம் போச்சு இனி எல்லாத்தையும் விட்டுறு என்னா என அசால்ட்டாக பாவ மன்னிப்பு அளிப்பார் துளசி தண்டனையிலும் கொடிய அந்த மன்னிப்பின் கனம்  தாங்காத கவுதமின் கதறல் அதைத் தொடர்ந்து  மன்னிக்கப்பட்டதால் பாவங்களிலிருந்து விட்டு விடுதலையான பரவசத்துடன் அப்படியே அவர் துளசியிடம் சரண்டர் ஆவதை காட்டும் "மூங்கில் தோட்டம்" பாடல். இது போல இன்னும் 5 சீன் இருந்திருந்தா?

 படத்தை ஒரேயடியாய் நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லைத்தான். பார்க்காலாம். ஆனால் நாம் மணியிடம் எதிர்பார்ப்பது இதை அல்ல. அவரின் திறமை நீர்த்து போயிருப்பது அவருக்கே புரிந்தால் செய்ய வேண்டியது பேசாமல் படம் எடுப்பதை நிறுத்தி விட்டு மெட்ராஸ் டாக்கிஸ் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதுதான். நாம் மவுன ராகத்தையும் நாயகனையும் தளபதியையும் காலம் பூரா சிலாகித்துக் கொண்டிருக்கலாம்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஏக் தீவானா தா - இசைப் பார்வை




இசைப்புயலின் பிறந்தநாளில்ஏக் தீவானா தாபாடல்களில் மூழ்கியிருந்தேன். பாடல் பற்றிய கருத்துக்களை நண்பர்களோடு ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணலாம் என எழுதியது நீண்டு விட்டதால் பதிவாக .

ஹோஸன்னா” Leon D'Souza & Suzanne பாடியிருக்கிறார்கள். விஜய் ப்ரகாஷை விடவும் ஒரு மென்மையை பாடல் பூராவும் குழைத்து  விட்டிருக்கிறார்கள். காது வழியே தேன் பருகும் உணர்வு. மொத்தத்தில் தமிழை விட பெட்டர்.


ஷர்மிந்தா ஹூன்மன்னிப்பாயாவின் தமிழ் வடிவம், ஹிந்தி வார்த்தைகள் இசையோடு பொருந்திப் போக மறுப்பது ஹிந்தி தெரியாத எனக்கே புரிகிறது. அதையும் விட தமிழ் மன்னிப்பாயாவின் ஜீவனான ஷ்ரேயா கோஷல் இல்லாதது பெரிய குறை. இசைப்புயலோடு இணைந்திருப்பவர் மதுஸ்ரீ.

மலையாள ஆரோமலே ஹிந்தியில் உருமாறியிருக்கிறது. விடிவியில் இந்த பாடலை கேட்ட போது இருந்த பிரமிப்பு நிச்சயமாக இல்லை.

”தோஸ்த் ஹை ஹம் தோ” கண்ணில் கண்ணை ஒட்டிக் கொண்டே பாடலின் ஹிந்தி வடிவம். மிக்ஸிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஒரு காதலனின் போராட்டத்தின் பதட்டம் தடதடக்கும் ரயிலின் பக்கத்தில் நிற்கும் நம்மையும் தொற்றிக் கொள்வதான அந்த பரபர உணர்வை ஹிந்திப் பாடல் தரவில்லை.

”க்யா ஹை மொஹாபத்” தமிழில் இல்லாத பாடல் . ஹிந்தி ரசிகர்களுக்கான இசை. எளிமையான இசை போலத் தோன்றினாலும் இசைப்புயலின் குரலின் வசீகரம் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தை தருகிறது. சொல்லி ஹிட் அடிக்கப் போகும் ஒரு பாடல்.

பதிவில் திருப்தியுறாதவர்களுக்காக எமியின் சிறப்பு உம்மா படம் 

”பூலோன் ஜைஸி” ஓமணப் பெண்ணேவின் இந்தி வடிவம். இசையை விட்டு ஓடும் வரிகளை வலுக்கட்டாயமாக சிறை பிடித்திருக்கிறார்கள். இது ஹிந்தி ரசிகர்களுக்கான பாடல் இல்லை. அங்கு ஹிட்டடிப்பது கடினம்.


”சுன்லோ சரா” குரலில் தேன் தடவி பாடுபவர் ஷ்ரேயா கோஷல். இசையிலும் ஆங்காங்கே ரசிக்கச் செய்யும் சில மாற்றங்கள்.

“சோஹ்ரா ஜபின்” விண்ணைத் தாண்டி வருவாயாவின் ஹிந்தி வடிவம்.இசைப்புயலுக்கு பதில் ஜவேட் அலி பாடியிருக்கிறார். சென்னையின் மொசார்ட் அளவுக்கு இல்லை.

மொத்தத்தில் தமிழளவிற்கு ஹிட் அடிக்க வாய்ப்பில்லாத ரஹ்மானின் சராசரியான இசைத் தொகுப்புகளில் ஒன்று. இரண்டாம் முறை செய்யும் போது மெருகேறும் என்பதெல்லாம் சும்மா. எப்போதும் முதலில் செய்வதே பெஸ்ட் என்பதை நிரூபித்திருக்கிறது. 


ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதியும் பெண்ணியமும்



“இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி” அதாவது இலக்கியம் என்பது தான் ஆக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்த சமூகத்தையும் அதன் பண்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.அவ்வாறன இலக்கியங்கள் சமூகத்தில் புரையோடியிருக்கும் அவலங்களையும் பிற்போக்கான நம்பிக்கைகளையும் சாடும் போது அவை இச்சமூகத்தை விட்டு அகலக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வகையில் தாம் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சமூகத்தில் காணப்பட்ட அவலங்களை சாடியதோடு நாளைய சமூகம் அமைந்திருக்க வேண்டிய விதம் தொடர்பிலும் தீர்க்கதரிசனத்தோடு சொல்லிச் சென்றவர் என்ற வகையில் மகாகவி பாரதி முக்கியத்துவமுடையவனாகின்றான்.

பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் இந்தியா முழுமையும் அந்நியர் ஆட்சியில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் முகமாக அவர் பாடிய தேசிய எழுச்சிப் பாடல்கள் ஆங்கிலேய ஏகாதிபத்திய எரிமலையை சுட்டெரித்தது. அத்தோடு நில்லாமல் சக மனிதனை மதிக்காது ஜாதி வேறுபாடு பாராட்டும் இழிவான மக்கட் கூட்டத்தை தன் பாடல்களால் சாடியதோடு நில்லாமல் நாளைய சமூகம் அவ்வாறான இழிசெயல்களை செய்யாமல் இருக்கும் பொருட்டு குழந்தைகளுக்காக பாடிய பாப்பா பாட்டில் கூட ஜாதி வேற்றுமை கூடாதென்பதை வலியுறுத்தினார்.

இலக்கணக் கட்டுக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ்க் கவிதைகளை வசனக்கவிதை எனும் புதுப்பாதை காட்டி அழைத்து வந்து மெருகேற்றிய பாரதி அன்றைக்கு தமிழுக்கு புதுவரவாயிருந்த சிறுகதையை கையாண்டு பார்த்தவர்களிலும் முக்கியமான ஒருவர் . பாரதி தமிழர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதற்காகவும், ஜாதிக் கொடுமைகள் பற்றிப் பாடியதற்காகவும், தமிழைப் புதியப் பாதையில் பயணிக்கச் செய்ததற்காககவும் மட்டும் ஒரு புதுமைக்கவியாகவோ மகாகவியாகவோ போற்றப் படுவதில்லை. மாறாக அவர் பெண்மையைப் போற்றும் பெண்ணியப் பாடல்களே அவரை புதுமைக்கவியாகவும், தீர்க்கதரிசியாகவும், தத்துவவியலாளராகவும், மகாகவியாகவும் கொண்டாடச் செய்கின்றது என்று கூறினால் அது மிகையல்ல.

காலத்திற்கு காலம் பெண்ணியம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். பெண்ணியச் சிந்தனையானது முதலாளியத்திற்கு எதிரான வர்க்கப் போர் தீவீரம் பெற்ற காலங்களில் முதலாளியத்தில் காணப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்த மார்க்சிய சிந்தனையாளர்களாலேயே முதன்முதலில் முன்வைக்கப் பட்டது எனலாம்.

பெண்ணியம் தொடர்பில் மேன்னாட்டு அறிஞர்கள் கூறிய சில கூற்றுக்களை எடுத்து பார்க்கும்  போது கார்டன் என்ற அறிஞர் " பெண்ணின் தாழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்ற எடுக்கும் வழிமுறைகள் பெண்ணியம் எனப்படும்." என்றார். ஜெயின் என்பவர் " பெண்கள் தன்மையில் ஆண்களில் இருந்து வேறுபடினும் அவர்களும் தமக்குள் இணைந்து தாம் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தலே பெண்ணியம்" என்பார். புட்சர் என்பவரோ " பாலினப் பாகுபாட்டால் பெண்களை எதிர்த்து இடம்பெறும் கொடுமைகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இயக்கம்" என்றார். பார்பரா ஸ்மித் மிக எளிமையாக "எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தருவது பெண்ணியம்" என்றார்.

மேன்னாட்டு அறிஞர் கூற்று எவ்வாறு அமையினும் எம் பெண்களுக்கு பொருத்தமான எம் பெண்களுக்கு தேவையான சீரிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினால் அது மிகையாகாது.

பெண்ணியம் தொடர்பில் மேல்நாட்டு அறிஞர்கள் கூறியக் கருத்துக்கள் இவ்வாறு கிடக்க பாரதியின் பெண்ணியச் சிந்தனை தொடர்பில் அடுத்த பதிவில் பார்க்கலாம். 
(தொடரும்.........)



பின்குறிப்பு - நான் சாதாரண தரம் கற்கும் போது கிட்டத் தட்ட 12 வருடங்களுக்கு முன் தமிழ் பாடத்தில் ஒரு ஒப்படைக்காக எழுதியது. அமேச்சூர் தனமாக இருக்கலாம். மன்னிக்க.........

வெள்ளி, 2 டிசம்பர், 2011

கார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்



“Behind the success of every man there is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன் திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள், அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு  என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.
படத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

கார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும் ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி. சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின் போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக் கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும் கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.

புதுப்பேட்டையிலிருந்தே
கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்னவில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.

செல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.

செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு, 100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா? என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது எல்லாம் விசுவல் ட்ரீட்.

காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.

ராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர் அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில் சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.


ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல 
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்

வழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”. 

சனி, 29 அக்டோபர், 2011

அட்டு ஃபிகர் 7ம் அறிவும் சுமார் ஃபிகர் வேலாயுதமும்



ஒவ்வொரு படம் பார்ப்பதற்கும் ஒவ்வோர் மனநிலையில் செல்வோம். அது அந்த படம் சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய படங்களை வைத்து நாமாக எடுத்துகொண்ட முன்முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது அதன் படைப்பாளிகள் ஊடகங்களில் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையிலோ அமையும். 

விஜய் படம் பார்ப்பவர்கள் யாரும் ஒரு அலாதியான கலையனுபவத்தை பெற வேண்டி திரையரங்கிற்கு செல்வதில்லை. கலகலவென நகைச்சுவை, அசத்தல் நடனத்துடன் அருமையாய் 5 பாட்டு, சண்டை காட்சிகள் என ஒரு ரெண்டரை மணி நேர பொழுதை போக்குவதே பிரதான நோக்கம். அதை சரியாய் பொதி செய்து தரத் தெரியாத இயக்குனர்களிடம் மாட்டி அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் இம்சைப்படுத்தியதே தன் தோல்விகளுக்கு காரணம் எனத் தெரிந்து கொண்டார் போலிருக்கிறது. அவர் ரசிகர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும் வகையில் சுமாராய் ஒரு படம் விஜயிடமிருந்து.

கதையெல்லாம் சொல்லி அலுப்படிக்க போவதில்லை. 7ம் அறிவு அளவுக்கு புதிதாக, நல்ல முடிச்சுள்ள கதையல்ல. ஒரு 100 படங்களிலாவது பார்த்திருக்க கூடிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் சாமான்யனின் கதை. ஆனால் ரசிக்கும் விதமாக அதை கொடுத்த விதத்தில் ஏ.ஆர். முருகதாஸை பல மடங்கு விஞ்சியிருக்கிறார் ராஜா.

விஜய் வழமையான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றோடு நகைச்சுவையும் இயல்பாக வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம். அவரது ரசிகர்களுக்கு இது தாராளம். நமக்கும் பெரிதாய் அலுக்கவில்லை(சில இடங்கள் தவிர்த்து). சலிப்பூட்டும் அவரது முந்தைய சாகசங்களை ஓரளவு தவிர்த்திருக்கிறார். பாராட்டுக்கள். 

ரெண்டு ஹீரோயினும் சும்மா. ஜெனிலியா ம்ம் பெரிதாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. தங்கை கல்யாணத்திற்கு வந்த தேங்காய்கள் சிறுத்திருப்பதாய் விஜய் ஆதங்கப்படும் போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் குலுங்கி குலுங்கி வரும்போதும், விஜய்க்கு ஏதோ மருந்து கொடுத்து மேட்டர் பண்ண பார்க்கும் போதும் ஹன்சிகா வசீகரிக்கிறார்.


சந்தானம் எனக்கு பெரிய ஏமாற்றம் அவரை விட பராட்டா சூரி இதில் கவர்கிறார். எம்.எஸ். பாஸ்கர் அவ்வப்போது சொல்லும் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு விஜய்யிடம் அடி வாங்குவது தவிர பெரிதாய் வேலையில்லை.

விஜய் ஆண்டனி பாடல்கள் கேட்கலாம் ரகம். அங்க இங்க சுட்டாலும் அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தை தந்திருக்கிறார் ஜெயம் ராஜா. இரண்டாம் பாகம் ரொம்பவும் போரடித்தது உண்மை ஆனால் தியேட்டரில் கேட்ட கைதட்டல்களும் விசில் சத்தங்களும் எல்லோருக்கும் அப்படியல்ல என்பதை புரிய வைத்தது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாமே ராஜா. விஜய் தூக்குடுவை ரீமேக்குவதாக இருந்தால் பிரபுதேவாவை விட ராஜாவை நம்பி கொடுக்கலாம். 


அப்புறம் இந்த படத்தை சலிப்பில்லாமல் என்னைப் பார்க்கச் செய்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. பிறகு அட்டு ஃபிகரை பார்த்துட்டு பார்த்தா சுமாரான ஃபிகரும் பேரழகியா தெரிவது போலத்தான் இதுவும். 

வியாழன், 27 அக்டோபர், 2011

7ம் அறிவு - என் பார்வையில்



இதற்கு முன் ஒரு படத்தை இத்தனைக் கஷ்டப்பட்டு பார்த்ததில்லை. காலை 10.30 காட்சிக்கு போனால் house full போர்ட் போட்டு விட்டார்கள். சரி வீட்டுக்கு போகலாம் என்று நினைத்த வேளையில் சனீஸ்வரன் நண்பர்கள் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தான். அடுத்த காட்சியை பார்த்து விட்டு போகலாமென்ற வற்புறுத்தலுக்காக நின்றால் அடுத்த காட்சி நேரத்திலும் நம்மவருக்கே உரிய தள்ளு முள்ளுகளால் நான் மாத்திரம் உள்ளே செல்ல நண்பர்கள் வெளியே ஒருவருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே என்பது தியேட்டர் ரூல் என்பதால் புலம்ப கூட பக்கத்தில் ஆள் இல்லாமல் தலையைலடித்துக் கொண்டே படத்தைப் பார்த்தேன்.

முருகதாஸில் எனக்கு எப்போதும் பெரிய அபிப்பிராயம் கிடையாது. தீனா ஒரு மொக்கை, ரமணா கேப்டன் படங்களில் ஏதோ சொல்லிக் கொள்ளும் படியான படம். கஜினி மெமெண்டோவின் ஒரு மலினமான பதிப்பு. 

யோசித்து பாருங்கள் மெமெண்டோ பார்த்த பின் லெனார்டின் மனைவியைக் கொன்ற ஜோன் ஜி யார்? நட்டாலியின் காதலனா? இல்லை ஏற்கனவே டெடியுடன் சேர்ந்து கொன்றதாக ஒருவனை சொல்கிறார்களே அவனா? சரி லெனார்டின் மனைவி இன்சூலின் அதிகமாக செலுத்தப்பட்டதால் செத்திருந்தால் டெடி அவனை வைத்து ஏன் அவர்களை போட்டுத் தள்ள வேண்டும். ஜோன் ஜியைக் கொல்ல முன்  அவன் சேமி பற்றி சொல்வான், அப்படியானால் லெனார்டுக்கு ஏலவே அவனோடு பழக்கமுண்டா? என பல கேள்விகள் விரியும். ஆனால் அப்படி ஒரு படத்தை ரொம்ப சீப்பா காதலியைக் கொன்றவனை அடிக்கடி நினைவு தப்பி போகின்றவன் பலி வாங்குகின்றான் அவ்வளவுதான் என்ற ரீதியில் எடுக்கிறாரென்றால் தமிழ் ரசிகர்களை அவர் எவ்வளவு கேவலமாக எடைப் போட்டிருக்கிறார். படத்தில் சஞ்சய் ராமசாமி,கல்பனா என்ற பாத்திரங்களில் சூர்யா,அசின் இருவரினதும் அட்டகாசமான நடிப்பில் வந்த சுவாரஸியமான காதல் காட்சிகளை தவிர்த்து படத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

சை ஃபை, ஃபேண்டசி படங்களில் லோஜிக் இல்லாமல் இருக்கலாம் பிரச்சினையில்லை. இன்செப்ஷனில் எல்லோரும் மருந்தேற்றிக் கொண்டு கனவுகளில் மூழ்கிப் போவதையும், ப்ரஸ்டீஜில் மனிதனைப் பிரதியெடுக்கும் டெஸ்லா செய்த மெஷினையும் லோஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொண்டால் படத்தில் சுவாரஸியத்திற்கு குறைவில்லை. சரி அப்படிப் பார்த்தால் ஊசி மருந்து அடிச்சி ஒருத்தர்ட ஜீனோமயே மாற்றி அவரோட பரம்பரையில ஒருத்தர் எப்பையோ கற்ற வித்தைகளை எல்லாம் உடம்பில் ஆவி புகுந்தது போல வரப் பண்றீங்க. நம்பித் தொலைக்கிறோம் அதை சுவாரஸியமாக கோர்வையாக சொல்ல வேண்டாமா?

முருகதாஸை வாயில்லா விட்டால் நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும். ஹோலிவுட் காரனே காப்பியடிக்க கூடிய அளவுக்கு கதை பண்ணக் கிளம்பியவர் அப்படியெல்லாம் ஒண்ணும் புடுங்கல. ஃபர்ஸ்ட் ஹாஃப கலகலப்பா கொண்டு போவோம். செகண்ட் ஹாஃப்ல சேஸிங், எக்‌ஷன்ன்னு ஏதாவது விறு விறுப்பா பண்ணுவோம்னு முடிவு பண்ணி வழமையான தமிழ் சினிமாக்களின் மசாலா ஃபார்முலாவில் காட்சிகளை பிரதியிட்டிருக்கிறார். காட்சிகள் வழமையானதாகவும், சில்லியாகவும், சுவாரஸியமற்றும் இருப்பதால் படம் தலைவலியை உண்டு பண்ணுகிறது.

இவர ரொம்ப கலைத்துவமா எல்லாம் படம் எடுக்க சொல்லல. இந்த மாதிரி டெக்னிக்கல் வித்தை காட்டுகிற ஷங்கரைப் பாருங்கள். ஒரே கதைய திரும்ப திரும்ப எடுத்தாலும் ஒவ்வொரு ஷாட்டும் புதுசா இருக்குல்ல. அப்புறம் சொல்ல வந்ததை சிம்பளா பிரச்சினை இல்லாம சொல்லி முடிக்கிறாறில்ல. மயக்கம் என்ன, வேலாயுதம் ஏன் ஒஸ்தி அளவுக்கு கூட பாட்டுகள் இல்லை என்று பார்த்தால் தியேட்டரில் நிம்மதியாக தூங்கவும் விடாமல் பின்னணி இசை ஒரே இரைச்சல். சூர்யா, வில்லன், ஸ்ருதி மூன்று பேரையும் குறை சொல்லக் கூடாது நல்லா நடிச்சிருக்காங்க. ரவி கே. சந்திரன் ஒகே ஆனால் இந்த மனுசண்ட ப்ளெக், பஹேலி, சவாரியா, ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் யோசித்தால் இதுல ஒண்ணுமே இல்லை.

இப்படி தெரிஞ்சிருந்தா பேசாம வேலாயுதம் போய் சிரிச்சு பார்த்து இருப்பேன். இல்லன்னா ரா 1 போய் தலைவர் வர்ற சீனுக்கு விசில் அடித்திருப்பேன். இல்லாட்டி வீட்டிலேயே உக்காந்து பணியாரம் சாப்பிட்டிருப்பேன். அதெல்லாம் விட்டுட்டு இதை ஒரு படம்னு பார்த்து. முருகதாஸிடம் ஒரே ஒரு விண்ணப்பம் இனி மேல் படம் எடுங்க ஆனா ஒவரா பேசாதிங்க.

திங்கள், 24 அக்டோபர், 2011

சுவரில் கிறுக்கியவை

சும்மா இருக்க முடியாமல் என் ஃபேஸ்புக் சுவரில் அவ்வப்போது கிறுக்கியவை



உனக்கு புரியாதென்றப் போதும்
தொடர்கிறேன்
கவிதை எழுதுவதையும்
உன்னைக் காதல்
செய்வதையும்……..

தண்ணீருக்கு பதிலாய்
கண்ணீரால் துவைக்கிறேன்
நீ வாங்கித் தந்த
ஆடையை

கொடுத்ததெல்லாம்
திரும்பக் கேட்டவள்
மறந்து விட்டாள்,
அவள் நினைவுகளையும்
தந்த முத்தங்களையும்
திரும்பப் பெற

உன்னால்
இழப்புகளேதுமில்லை
வரவுதான்
இன்னமும் மிச்சமிருக்கிறது
உன் நினைவுகளேனும்


உன்னிடம் பேசிக்களித்த
நீண்ட இரவுகள்
இன்னமும் தொடர்கின்றன
என்ன? சம்பாஷணையெல்லாம்
என் தலையணையுடன்தான்

இப்போதுதான் புரிகிறது
எப்போதும் உடனிருப்பேன்
என நீ சொன்னதன் அர்த்தம்
அழகாய் எதைப்பார்த்தாலும்
உன் ஞாபகம்

காம்ப்ளான் அருந்தாமலே
தினம் வளர்கிறது
 உன் மீதான என் காதல்

புதன், 19 அக்டோபர், 2011

பிரபஞ்ச சூப்பர் ஸ்டார்


பிரபஞ்ச சூப்பர் ஸ்டார்(அகில உலக என யாரோ ரஜினி என்பவரை அழைக்கிறார்களாம்) பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் திருவடி பணிந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.

தலைவர் ஓர் அக்குபஞ்சர் டாக்டர். நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தவர் , கலையார்வம் கொண்ட தமிழ் ரசிகர்கள் தமிழில் தரமான சினிமாக்களின் வருகையின்மையால் வெதும்பிக் கொண்டிருந்ததை, எதேச்சையாக தன் கருப்புக் கண்ணாடியைக் கழட்டிய ஒரு கணப்பொழுதில் ஞானத் திருஸ்டியால் அறிந்தார். ரசிகர் தம் குறை தீர்க்க அவர் எடுத்த உடனடி நடவடிக்கைத்தான் ”லத்திகா”.  தமிழ்நாட்டில் பெரம்பலூரில் 200 நாட்களைக் கடந்து இன்னமும் வெற்றி நடைப் போடும் அரியக் கலைப் பொக்கிஷம். அதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காகவே சுரங்கப்பாதை, மூலக்கடை முருகன், மன்னவன், திருமா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை என ஒரே நேரத்தில் 6 படங்களில் ஓய்வொழிச்சலின்றி நடித்து வரும் ஒப்பற்ற திரைக்கலைஞன். ”எழுச்சித் தமிழன்” திருமாவளவன் அவர்களால் “பவர் ஸ்டார்” எனப் பட்டமளிக்கப்பட்டு இன்று ரசிகர்களாலும் அவ்வண்ணமே அழைக்கப்படுபவர்.


காற்றடைத்த பலூன்களான இன்றைய தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களையெல்லாம் தன் அக்குபஞ்சர் ஊசியால் குத்தி காத்துப் போன ஸ்டார்களாக்கிய நம்ம பவர் ஸ்டார் பெருமைதனை அகில உலகுக்கும் பரப்பும் நோக்குடன் ஹன்சிகாவின் காதலனும் இலங்கைப் பதிவருமான மைந்தன் சிவாவினால் ஆரம்பிக்கப் பட்ட முகப்புத்தக குழுமம் இன்று 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு வீறுநடைப் போடுகின்றது. அவரது இவ்வரியப் பணிக்கு ஓர் அணிலாக நானும் ஓர் பதிவின் மூலம் கைக்கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வியாழன், 6 அக்டோபர், 2011

சிலிக்கான் சிங்கம்





”எந்தவொரு மனிதனும் இறப்பதற்கு விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல நினைப்பவர்கள் கூட. என்றாலும் மரணம் யாராலும் வெற்றிக் கொள்ளப்பட முடியாத, நாம் அனைவரும் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்கு. மரணம் வாழ்வின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு. பழையதைக் கழித்து புதியதை புகுத்தி வாழ்வை மாற்றும் தூதன். நீங்களும் கிழடு தட்டி இவ்விடத்தை விட்டு அகலும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாடகத்தன்மையான வார்த்தைகளாயிருந்தாலும் இதுவே உண்மை.”

என்று நிலையாமையைப் பற்றிக் கூறியவர் இன்றிலிருந்து நம் மத்தியில் இல்லை. ஆம் ஆச்சரியப்படத் தக்க தொழினுட்ப சாதனைகளின் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காணும் சாத்தியங்களை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து விட்டார். வாக்மனையும், லாப்டாப்பையுமே வாய் பிளந்து பார்க்கும் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு எல்லாம் ஐப்பாடும், ஐஃபோனும், ஐப்பேடும் பெரும் ஆச்சரியங்கள்தான்.

இந்த பெயரை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது குமுதத்தில் வந்த “பிஸினஸ் மகாராஜாக்கள்” என்ற தொடரில். அதன் பிறகு “ஃபொரெஸ்ட் கம்ப்” திரைப்படத்தில் டோம் ஹேன்க்ஸ் இறால் பிடித்து சம்பாதிக்கும் பணத்தை டான் அப்பிள் நிறுவனத்தில் முதலிட்டு பெரிதாய் காசு பார்க்கும் போது அத்தனை லாபம் கொழிக்கும் கம்பனியை நடத்துமளவுக்கு இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா என யோசித்திருக்கிறேன். ஆப்பிள் நிறுவன CEO ஆக 2006 தொடக்கம் 2010 வரை வருடமொன்றிற்கு அவர் பெற்ற சம்பளம் 1 டொலர் மட்டுமே. இதை படிக்கும் ஒரு ரூபாய் சம்பளம் பெற்ற வேறு யாரேனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

திருமணம் செய்து கொள்ளாத ஒரு இளம் ஜோடிக்குப் பிறந்து பின் தத்துக் கொடுக்கப்பட்டு கல்வியில் நாட்டமின்றி வளர்ந்து பின் தொழினுட்ப புரட்சியின் தலையாய நபராக மாறிய இவரின் வரலாறு ஒரு சினிமா கதையை விட சுவாரசியமானது. வாழ்வில் சடுதியாக முன்னேற்றத்தை சந்தித்த ஜாப்ஸ் அதையொன்றும் நேர்மையான வழியில் அடையவில்லை. நேர்மையாக ஒரே பாட்டில் வெற்றியை சுவைக்க அவர் ஒன்றும் ரஜினிகாந்த் இல்லையே. ஆக சாம,தான, பேத, தண்டங்களைப் பிரயோகித்தும் முடியாத போது ஏகப்பட்ட தகிடு தத்தங்களை செய்துமே அவர் இந்த இடத்திற்கு வந்தார். துரோகம் என்ற வார்த்தைக்கெல்லாம் இந்த வியாபாரக் காந்ததின் அகராதியில் வியாபர நுணுக்கம் என்ற அர்த்தம் இருக்கக்கூடும்.
”முன்னேற்றம் உன் குறிக்கோளாயின் நீ மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிடு” என்ற பில்லா அஜித் பாணியிலான இவரது மேற்கோள் உலகப் பிரசித்தம்.

தரமான பொருட்கள் மலிவான விலையில் இது ஸ்டீவின் தாரக மந்திரம். இதன் மூலம் அதிகமான வாடிக்கையளர்களை கவர்ந்த இவர் பெற்ற லாபமும் பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால் அதற்காக உலகெங்கும் இருந்த ஆப்பிள் தொழிற்சாலை பணியாளரகள் அனுபவித்த துன்பம் சொல்லி மாளாது. சீனாவில் ஐபாட் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து மாதமொன்றிற்கு 100 டொலர் அளவில் மட்டுமே சம்பளம் பெற்ற 200,000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வருவாயில் பாதிக்கு மேல் உணவு மற்றும் வதிவிடத்திற்காக பிடித்தம் செய்யப் பட்டது, எல்சிடி திரைகளை சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருளால் பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டது என்பனவெல்லாம் வண்ணமயமான ஆப்பிளின் சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்கள்.
நம்மை ஒரு நவீன உலகுக்கு வழிநடத்தியவராக ஸ்டீவை கெளரவிக்கும் நாம் அந்த தொழிலாளர்களையும் என்றென்றும் நினைவு கூறுதலே ஞாயமாகும்.


டிஸ்கி:- ஆப்பிளின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐஃபோன் 4s எதிர்பார்த்த வர்த்தக வெற்றியைப் பெற தவறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 19 ஜனவரி, 2011

ஆடுகளம் - என் பார்வையில்

 சினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின்  வாழ்வில் ஆடும்  சதியாட்டமே வெற்றிமாறனின் "ஆடுகளம்".  நீண்ட நாட்களுக்கு  பிறகு தமிழில் ஒரு அருமையான  படம்.  

சேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(. செ. ‌.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.

 தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும்  விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி  கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம். 

வெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா? இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம்  செய்திருக்கிறார்.
அதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் .செ..ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.

. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.

ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.
ஆடுகளம் - அதகளம் 
Related Posts with Thumbnails