சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் என் பார்வையில்


 ஒரு பத்து வருடங்களுக்கு முன் "ஷங்கர்- கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்-சுஜாதா,  மீண்டும் இணையும்  இந்தியன் கூட்டணி " எனப் பத்திரிகையொன்றின் சினிமாப் பகுதியில் ஒரு ஓரமாக அறிவிப்பை பார்த்ததிலிருந்தே இப்படத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.. கமல் நடிக்கவில்லை என்ற போதே சப்பென ஆனது. பிறகு அந்நியன் ஆரம்பித்த காலத்தில் அந்த கதைதான் இது என தகவல் வர விக்ரமும் பரவாயில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு அஜித், ஷாருக் எனப் பயணித்த இக்கதை கடைசியாக வந்துச் சேர்ந்திருப்பது இக்கதைக்கு மிக மிகப் பொருத்தமானவரிடம். பத்து வருடங்களுக்கு முந்தைய கதை இன்று எப்படி ரசிகர்களை கவரப் போகின்றது என்பதையெல்லாம் தகர்த்திருக்கின்றது எந்திரன். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதகளப்படுத்தியிருக்கிறார்  ரஜினிகாந்த். 

ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என மக்கள் அவருக்களித்த அங்கீகாரமும்  சுஜாதா என்ற விஞ்ஞானம் அறிந்த சுவாரசிய(பரப்பிலக்கிய)  எழுத்தாளரின் நட்பும் தமிழில் ஒரு sci-fi   திரைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற கனவை தூண்டி விட்டிருக்க வேண்டும். நிறைய  சுஜாதா  பாதிப்போடு  இன்று திரையில் விரிந்திருக்கிறது ஷங்கரின் பத்து வருட உழைப்பு.
படம் வர முன்னரே பல தளங்களிலும் பேசப்பட்ட அதே கதைதான். ஆனால் கடைசி வரை அதை சலிப்புத் தட்டாமல் கொண்டு  சென்றதில்தான் இருக்கிறது ஷங்கரின் வெற்றி. நிச்சயமாய் இந்தப் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்காகவும் ஷங்கர் உழைத்திருக்கக் கூடிய உழைப்பு படத்தில் Dr.வசீகரனின் உழைப்புக்கு இணையானதாய் இருக்கும். 

ஷங்கருக்கு என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீனோவும் ரொம்பப் பிடிக்குமென நினைக்கிறேன். பல இடங்களில் இவ்விரு நாவல்களும் எட்டிப் பார்க்கிறது. சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ.  கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ. 

ஐஷை ஓவியமாய்த் தீட்டும் காட்சியும் ரோபோக் கூட்டத்துக்குள் கருப்பாடைக் கண்டுப் பிடிக்கும் காட்சியும் ஐ ரோபோட்டில் பார்த்தது.  Bicentennial Man போல என்று சொல்பவர்களுக்கு ரோபோ மனித உணர்வு பெறுதல் என்ற ஒரு ஒற்றுமையைத்  தவிர இரண்டுக்கும் ஒரு தொடர்பும்  இல்லை. அதிலும் ராபின் வில்லியம்ஸ் போன்ற ஒரு கலகலப்பான நடிகரை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை பெரும் இழுவையாக இழுத்திருப்பார் இயக்குனர் க்றிஸ் கொலம்பஸ். அவ்வகையில் ரஜினியை எப்படி முடியுமோ அப்படி அட்டகாசமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

ரஜினி மிக இயல்பாக நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர். கூடவே படத்தில் அவரது பாத்திரப்  பெயருக்கேற்ப எளிதில் எவரையும் வசீகரிக்கக் கூடியவர். கண்களில் பயம்,காதல்,அர்ப்பணிப்பு,கோபம் போன்றவற்றை எல்லாம் காட்டும் இயல்பான மனிதனாக வசீ, கலகலப்பும் நகைச்சுவையுமாய் சிட்டி I , நக்கலும் நையாண்டியும் நிறைந்த வில்லத்தனத்துடன்  சிட்டி II என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் தலைவர். நிச்சயம் விருதுக்கு தகுதியானது எனினும் மசாலா படம் என்பது இடிக்கிறது. சரி இந்தியனில் கமலுக்கு கொடுத்தார்கள் அதற்கு எள்ளளவும் குறையாத நடிப்பு கிடைக்குமென நம்புவோம். ரஜினியை தவிர்த்து இன்னுமொருவர் இதை இதனிலும் சிறப்பாகச் செய்ய முடியுமெனச் சொன்னால் சிரிக்க வேண்டியதுதான். இதுவல்லாமல் சிட்டி தன்னை போல சிலரை உருவாக்கி விட கடைசி 40 நிமிடங்களில் திரையெங்கும் பல நூறு ரஜினிக்கள். ரஜினி ரசிகனுக்கு அற்புதமானதொரு முன்கூட்டிய தீபாவளி விருந்து. 

ஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார். ரஜினியே வில்லனாய், காமெடியனாய் பிரகாசிப்பதில் டேனி,கருணாஸ்,சந்தானம் எல்லாம் காணாமல் போகின்றார்கள். ஒவ்வோர் காட்சியில் மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி வருகின்றார்கள்.

வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.
"உயிரோட இருக்காருல்ல?   வயரோடு இருக்கார்"
" அவ உடம்புல உடை இல்ல , ஆனா உயிர் இருக்கு"
கொச்சின் ஹனிபாவுடன் வரும் காட்சியில் உள்ள வசனங்கள்
"உன்னோட பாய் பிரண்டா இல்ல, டோய் பிரண்டா"
"காதலிச்சா நட்டு கழண்டுடும் "
மேற்சொன்னவை ரொம்பவும் நான் ரசித்தவை, மூவரில் எதை எதை யாரெல்லாம் எழுதினார்கள் எனத் தெரியாத நிலையில் சுஜாதா டச் இருப்பதாகப் பட்டது ஆனால் இவை கார்க்கியின் வசனங்கள் என நினைக்கிறேன் (அவரது ட்வீட்டில் கிடைத்த தகவல்) அட்டகாசம் கார்க்கி.

ஷங்கர் படத்தில் கலை, ஒளிப்பதிவு, இசை எல்லாம் உயர் தரத்தில் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆக இவை வழமைப் போலவே அசத்துகிறது. பின்னணி இசை அமைக்கும் காலங்களில் இரண்டு மணி நேரம்தான் தூங்கினேன் என்ற ரஹ்மானின் கூற்றில் கொஞ்சமும் மிகையில்லை. கலக்குகிறார் இசைப் புயல்.

இடைவேளைக்கு பின் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் சிறு தொய்வும், ரங்குஸ்கி கொசுக் காட்சியும் கிலிமாஞ்சாரோ பாடலை நுழைக்கவென வைத்த கலாபவன் மணி  காட்சியும் திருஷ்டிகள்.

மற்றும் படி நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு மகிழ்வான திரையனுபவம். கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். செல்லும் போது குழந்தைகளுடன் செல்வது அல்லது நாமே குழந்தைகளாய் செல்வது படத்தை இன்னமும் ரசிக்கச் செய்யும். Dot

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சுஜாதா - நடமாடிய கலைக்களஞ்சியம்


சின்ன வயதிலிருந்தே கதை கேட்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம். எழுத்துக் கூட்டி வாசிக்கத் துவங்கியப் போதே சின்ன சின்னக் கதை புத்தகங்களாய் ஆரம்பித்து பின் அம்புலிமாமா,கோகுலம்,பாலமித்ரா,காமிக்ஸ்கள் எனத் தொடர்ந்தது என் கதையறியும் ஆர்வம். இதுதானோ என்னவோ இன்னமும் ஒரு Daydreamer ஆகவே இருக்கிறேன்.

பதின்ம வயதுகளுக்குள் நுழைய முன்பாகவே மாலைமதி,ராணிமுத்து போன்ற கமர்சியல் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,எஸ்.பாலசுப்ரமணியம்,பி.டி.சாமி எல்லாம் அபோது படித்ததுதான். ராஜேஷ்குமார் நாவல்கள் அப்போது ரொம்பப் பிடிக்கும். முடிவுகளை யூகிக்கக் கூடியதாய் நிலை மாறிய போது அந்த சுவாரசியமும் அற்றுப் போனது.

அப்படியே அடுத்தக் கட்டமாக சாண்டில்யன். அவர் நாவல்களை படித்ததற்கான காரணம் பரகசியம். முழுசாய் படித்து முக்கியமான மேட்டர்கள் இருக்கும் பக்கங்களை அடையாளப்படுத்தி தர வேண்டிய சீரியப் பணி நண்பர்களால் எனக்குத் தரப்பட்டிருந்தது. பிஞ்சிலேயே பழுத்து விட்டேனோ என யோசித்தாலும் வருத்தமில்லை. அதுதான் வாத்தியாரே சொல்லியிருக்கிராறே வாத்சாயனமும் கல்வியே என அதனால் அந்தக் குற்றவுணர்ச்சியும் அற்றுப்போனது. அதுபோக இப்போது எதையாவது இப்படி கிறுக்கித் தள்ள அந்த வாசிப்பனுபவம்தான் கைகொடுக்கிறது. என்ன இன்னமும் ப்ராக்டிகலாக செய்துப் பார்க்காத குறைதான்.

அப்படியே கல்வியியற் கல்லூரி போன போது அங்கிருந்த சூழலோ என்னவோ மார்க்ஸிசம் பால் ஈடுபாடு உண்டானது. முதலில் தோழர் தியாகுவின் "ஆனா ஆவன்னா" வில் ஆரம்பித்தவன் பின் அப்படியே முன்னேற்றப் பதிப்பகத்தின் பல புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். மாக்சிம் கோர்க்கியின் தாய் நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது பல தடவை படித்தது. சித்தாந்தங்களை வார்த்தைகளாக உள்வாங்கிக் கொண்டேனே ஒழிய எனக்குள் இருந்த பூர்ஷ்வாவை விரட்ட முடியாத குற்றவுணர்வில் மெல்ல அதன்பாலிருந்த தீவிரத்தைக் குறைத்துக் கொண்டேன். பெரியாரும் அப்போதிருந்துதான் என் உடன் வரத் துவங்கினார்.

இப்படி எனது வாசிப்பனுபவம் வயதுக்கேற்ற மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிருக்கும் ஒரே நபர் அமரர் சுஜாதா. காரணம் ரொம்ப simple எதை எழுதினாலும் எளிமையாக எழுதுவார், புரியும்படி எழுதுவார், சுவாரசியமாய் எழுதுவார்.

என்னவாக ஆக வேண்டும் என்று யாரேனும் கேட்டால் டொக்டர் தொடங்கி ஜனாதிபதியாவது வரை சொல்லுவோம். ஆனால் இருந்தா இப்படித்தாண்டா இருக்கணும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் இவர். இவரது அறிவின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. எழுத்தாளர், நாடகாசிரியர், திரைப்பட வசனக்கர்த்தா, கண்டுப்பிடிப்பாளர் என இந்த மனிதனுக்குத்தான் எத்தனை முகங்கள். எதைப் பற்றித் தெரியாது இவருக்கு. சங்கப் பாடல்கள் தொடங்கி சாப்ட்வேர் வரை பேசுவார். நல்லப் பாடல்களின் ராகங்களைப் பற்றியெல்லாம் ரசனையாய் அலசுவார். நல்லப் படங்களைக் கொண்டாடுவார். அரசியல்,கிரிக்கெட் இன்னும் என்னவெல்லாமோ. இதனாற்றானோ என்னவோ அவரைப் போல இல்லாவிட்டாலும் எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாய் பிய்த்தெடுத்தது ஏதோக் கொஞ்சம் மண்டைக்குள் போட்டு வைத்திருக்க முயல்கிறேன்.

அவரது கொலை அரங்கம் நாவலில் வசந்த் ஒரு முறை " உங்களுக்கு வல்வெட்டித்துறை, மாத்தளை இங்கு யாரேனும் பழைய உறவினர் இருந்து அவர்கள் எதிரிகளாகியிருக்க வாய்ப்பில்லையா?" எனக் கேட்பதாய் ஒரு வசனம் வரும். அடடா சுஜாதா நம்ம ஊர் பெயர எழுதிட்டாருடா என புல்லரித்துப் போயிருக்கிறேன். நமக்குப் பிடித்தவருக்கு நம்ம ஊர் தெரிஞ்சிருக்கே என்ற புளங்காகிதம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுவது இவர் எழுத்துக்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு காலயந்திரப் பயணம் போல கதை நிகழ்வதாய் சொல்லப்படும் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்வது அது. சமகால நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி பயிர் செய்யப் பட்ட காலத்திற்கேற்ற எழுத்துக்கள் அவருடையவை.

Advanced level படிக்கும் போதும் college of Education இலும் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் கெத்தாய் உலாவ உதவியது அவ்வப்போது நான் சொல்லும் A ஜோக்குகள் உபயம் வசந்த். என்ன இது போன்ற ஜோக்சைக் கேட்டு வெட்கத்தால் முகம் சிவந்து செல்லமாய் அடிக்கத்தான் யாருமில்லாமல் போய் விட்டனர். ஒருவேளை வசந்த் போல் இல்லாமல் கணேஷ் போல் கொஞ்சம் அழுத்தமானவனாய் இருந்ததாலாயிருக்கலாம். வல்கராக இல்லாமல் முகஞ்சுழிக்கச் செய்யாது உதட்டோரம் புன்னகையை வரச் செய்பவை சுஜாதாவின் பகடிகள். ஏன் போய்சில் கூட அந்த இளைஞர்கள் தமக்குள்ள பரிமாறிக்கொள்ளும் பகடிகளில் அவை வெறும் பாலுணர்வு பாற்பட்டதாக இல்லாமல் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும்.

இணையம் பரவலாக இல்லாதக் காலத்தில் அவரது எழுத்துக்கள் நிச்சயம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும். பிறகு எத்தனை விடயங்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நாமெல்லாம் Grand master பார்த்து விட்டு யாரையாவது நினைத்துக்கொள் நான் கண்டுப்பிடிக்கிறேன் என விளையாடிக் கொண்டிருக்கும் போது இது Savant syndrome இதை மையமாக வைத்து Rain man படம் எடுக்கப்பட்டிருக்கிறது என எழுதுவார். உலகத்தரத்திலான பெரும் ஆளுமைகளை அடையாளம் காட்டினார். இதையெல்லாம் இவர் செய்தது சிக்கலான வார்த்தைகளாலான பெரிய கட்டுரைகளின் மூலம் அல்ல. ச்சும்மா போகிற போக்கில் தனது எழுத்துக்களில் அள்ளித் தெளித்தவையே அவை.

சிலக் கதைகளை ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போல இருந்தது என வர்ணிப்பார்கள். எனக்கு ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாசிக்கும் போது படமே பார்ப்பது போல இருந்தது.

சுஜாதாவின் கதைகளில் நான் படித்தவற்றில் எனக்குப் பிடிக்காதது என்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றே ஒன்று பெயர் ஞாபகமில்லை நன்றாக படித்த தோற்றப் பொலிவற்ற முதிர்கன்னி ஒருவரை அவரது சம்பளத்துக்காக திருமணம் செய்து ஏமாற்றும் ஒருவரின் கதை. இருவரது பார்வையிலும் அந்நாவல் நகரும்.
திக்கான மீசையும் சவரத்திற்குப் பின்னரான பசுமை படர்ந்த மழு மழுப்பான கன்னங்களையும் கொண்ட பசையுடைய ஆண்களை மடக்கி செட்டில் ஆகும் பெண்களின் கனவுகளையே திரும்ப திரும்ப எழுதும் எனக்குப் பிடிக்காத ஒரு எழுத்தாளரின் கதை போல் இருந்ததாலிருக்கலாம்.

மற்றப்படி மறுபிறவி,ஜோசியம் போன்ற அபத்தங்களை எல்லாம் மறுப்பவர் ஆண்டாள் பாசுரங்களை பற்றியும் ஸ்ரீரங்கநாதனை பற்றியும் பக்தி பரவசத்தோடு சொல்லும் போதும் பௌதீக விஞ்ஞானத்தில் தனக்கு இருக்கும் ஞானத்தைப் பயன்படுத்தி பாகவத புராணத்தில் இருக்கும் கதைகளை எல்லாம் ஏதோ விஞ்ஞான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற ரீதியில் சொல்லும் போதும் சற்று எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

சுஜாதா என்ற ஒருவர் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இன்று இத்தனை பேர் பளோகுகளில் பத்தி எழுத்துக்களை முயற்சித்துக் கொண்டிருக்க மாட்டோம் என நினைக்கிறேன். ஏதோ வருடமொரு முறை நினைவுக் கூறத்தக்கவர் அல்ல அவர். இருந்தாலும் அவரைப் பற்றிய என் எண்ணங்களின் சிறு தொகுப்பே இப்பதிவு.
Related Posts with Thumbnails