இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 மே, 2013

மரியான் பாடல்கள் என் பார்வையில்





மரியான்  பாடல்கள் "கடல்" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற  போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது.

இன்னும்  கொஞ்ச நேரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நாட்டுப்புற ஸ்டைலை டச் செய்திருக்கிறார்  “இன்னும்  கொஞ்ச நேரம்”  பாடலில், விஜய் பிரகாஷ் வெஸ்டர்ன், க்ளாசிக் என இரண்டிலும் ஸ்கோர் செய்பவர் இங்கு போல்க்கிலும்.  ஏடி கள்ளச்சியிலேயே அசத்தியவர்தான் . கூடவே அவரது அம்மா  போலவே கொஞ்சுகிறார் ஸ்வேதா மோகன் .

சோனாபாரீயா

சென்யோரீட்டா, லோலிட்டா போல ஒரு புதுவார்த்தை  “சோனாபாரீயா”,  ரொம்பவும் எனர்ஜட்டிக்கான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. ப்ரீலியுட் வாத்திய இசையே கொண்டாட்டமான உலகுக்கு கொண்டு செல்கிறது. ஆமா  சோனாபாரீயா என்றால் என்ன?

நேற்று அவள் இருந்தாள்

குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. கொஞ்சம் எங்கோ கேட்ட சாயலும். அசத்துகிறார்கள் விஜய் பிரகாஷும் சின்மயியும்.

I Love my Africa

தமிழுக்கு முற்று முழுதான புது இசை. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆபிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. பாடல் முழுதும் தொடரும் தாள வாத்திய இசையே பாட்டின் ப்ரெஷ்னசுக்கு காரணமாய் இருக்கும்.

எங்க போன ராசா


சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் நெஞ்சுக்குள்ள ரேஞ்சுல எதிர்பார்த்தால் ஒரு மாற்று குறைவுதான் என்ற போதும் மோசமில்லை. பல்லவியில் கேட்பவர்களுக்கு (அது நாந்தேன்) ஒரு அயர்ச்சி இருந்தாலும் சரணத்தில் சரியாகிவிடுகிறது.

நெஞ்சே எழு

பாட்டுக்கு  மெட்டாயிருக்கக் கூடும். ரஹ்மான் குரலே பிரதானம். குட்டி ரேவதிக்கு நல்வரவு


கடல் ராசா

நனவிடைத் தோய்தல் நம்ம பாசையில் சொன்னால் Nostalgia அட யுவன் நல்லா பாடியிருக்காரே எனத் தோணுவது பாடலின் முதல் வெற்றி, பாடலாசிரியராக நன்றாகவே செயற்படுகிறார் பொயெட்டு தனுஷ்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஏக் தீவானா தா - இசைப் பார்வை




இசைப்புயலின் பிறந்தநாளில்ஏக் தீவானா தாபாடல்களில் மூழ்கியிருந்தேன். பாடல் பற்றிய கருத்துக்களை நண்பர்களோடு ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணலாம் என எழுதியது நீண்டு விட்டதால் பதிவாக .

ஹோஸன்னா” Leon D'Souza & Suzanne பாடியிருக்கிறார்கள். விஜய் ப்ரகாஷை விடவும் ஒரு மென்மையை பாடல் பூராவும் குழைத்து  விட்டிருக்கிறார்கள். காது வழியே தேன் பருகும் உணர்வு. மொத்தத்தில் தமிழை விட பெட்டர்.


ஷர்மிந்தா ஹூன்மன்னிப்பாயாவின் தமிழ் வடிவம், ஹிந்தி வார்த்தைகள் இசையோடு பொருந்திப் போக மறுப்பது ஹிந்தி தெரியாத எனக்கே புரிகிறது. அதையும் விட தமிழ் மன்னிப்பாயாவின் ஜீவனான ஷ்ரேயா கோஷல் இல்லாதது பெரிய குறை. இசைப்புயலோடு இணைந்திருப்பவர் மதுஸ்ரீ.

மலையாள ஆரோமலே ஹிந்தியில் உருமாறியிருக்கிறது. விடிவியில் இந்த பாடலை கேட்ட போது இருந்த பிரமிப்பு நிச்சயமாக இல்லை.

”தோஸ்த் ஹை ஹம் தோ” கண்ணில் கண்ணை ஒட்டிக் கொண்டே பாடலின் ஹிந்தி வடிவம். மிக்ஸிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஒரு காதலனின் போராட்டத்தின் பதட்டம் தடதடக்கும் ரயிலின் பக்கத்தில் நிற்கும் நம்மையும் தொற்றிக் கொள்வதான அந்த பரபர உணர்வை ஹிந்திப் பாடல் தரவில்லை.

”க்யா ஹை மொஹாபத்” தமிழில் இல்லாத பாடல் . ஹிந்தி ரசிகர்களுக்கான இசை. எளிமையான இசை போலத் தோன்றினாலும் இசைப்புயலின் குரலின் வசீகரம் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தை தருகிறது. சொல்லி ஹிட் அடிக்கப் போகும் ஒரு பாடல்.

பதிவில் திருப்தியுறாதவர்களுக்காக எமியின் சிறப்பு உம்மா படம் 

”பூலோன் ஜைஸி” ஓமணப் பெண்ணேவின் இந்தி வடிவம். இசையை விட்டு ஓடும் வரிகளை வலுக்கட்டாயமாக சிறை பிடித்திருக்கிறார்கள். இது ஹிந்தி ரசிகர்களுக்கான பாடல் இல்லை. அங்கு ஹிட்டடிப்பது கடினம்.


”சுன்லோ சரா” குரலில் தேன் தடவி பாடுபவர் ஷ்ரேயா கோஷல். இசையிலும் ஆங்காங்கே ரசிக்கச் செய்யும் சில மாற்றங்கள்.

“சோஹ்ரா ஜபின்” விண்ணைத் தாண்டி வருவாயாவின் ஹிந்தி வடிவம்.இசைப்புயலுக்கு பதில் ஜவேட் அலி பாடியிருக்கிறார். சென்னையின் மொசார்ட் அளவுக்கு இல்லை.

மொத்தத்தில் தமிழளவிற்கு ஹிட் அடிக்க வாய்ப்பில்லாத ரஹ்மானின் சராசரியான இசைத் தொகுப்புகளில் ஒன்று. இரண்டாம் முறை செய்யும் போது மெருகேறும் என்பதெல்லாம் சும்மா. எப்போதும் முதலில் செய்வதே பெஸ்ட் என்பதை நிரூபித்திருக்கிறது. 


வியாழன், 6 மே, 2010

ராவணன் பாடல்கள் - என் பார்வையில்





பால் வேண்டுமானால் பழகப் பழகப் புளிக்கலாம். ஆனால் வைன் பழசாகத்தான் ருசியும் போதையும் அதிகம் என்பர். வைனைப் போலத்தான் நம் இசைப்புயலின் இசையும் கேட்க கேட்க புதிதாய் பாடலில் பொத்தி வைக்கப்பட்ட சூட்சுமங்கள் எல்லாம் பிடிப்பட்டு அப்படியே அந்தப் போதையில் திளைத்து அதன் வசமாகி விடுவோம். முதற்றடவை ராவணன் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும் போக போகப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பினாலேயே மேற்கண்ட வரிகள்.

"வீரா" பாடல் ஒரு ஹீரோ புகழ் பாடும் பாடல் முதற்றடவையாக மணி படத்தில். ஒரு தனிப்பாடலாக அல்லாமல் அவ்வப்போது வந்து செல்லும் என நினைக்கிறேன். பாடலில் ஒலிக்கும் சில வரிகள் சத்தியமாய் புரியவில்லை. அது தமிழா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.

"கள்வரே" பாடல் என்னுடைய விருப்பப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியது என்றாலும் ஹிந்தியில் ரீனா பரத்வாஜ் உருகியிருப்பதோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிந்திருப்பது ஸ்ரேயாவுக்கு தெரியாததாலோ என்னவோ சுரத்தேயில்லாமல் இருக்கிறது பல இடங்களில்.

"கெடா கறி" பாடல் ஒரு கல்யாண வீட்டில் பாடப்படும் போல் இருக்கிறது. மிக உன்னிப்பாக கேட்டால் மட்டும் வரிகள் காதில் விழுகிறது.
"இவ கண்ணால பார்த்தா ஜானகி அம்சம் ,
கட்டில் மேல பார்த்தால் சூர்ப்பனகை வம்சம்"

என்ற வரிகள் கல்கியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் ஒரு வசனத்தை ஞாபகப்படுத்திகிறது.

"கோடு போட்டா" பென்னி தயாள் பாடியிருக்கிறார்.
"வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி"
ஆக்ரோஷமான பாடல் வரிகள். ஆனால் பென்னி தயாளின் குரலில் அந்த ஆக்ரோஷம் சுத்தமாய் தவறியிருக்கிறது.

கார்த்திக் பாடியுள்ள "உசுரே போகுதே" இந்தப் படத்தில் தமிழுக்கென்றே எடுத்தது போல பாடல் வரிகளும் இசையும் பொருந்திப் போகும் ஒரேப் பாடல். தன மோகித்தப் பெண்ணை அக்கினிப் பழம் என உருவகித்திருப்பது அருமை. அது எப்படி மணி படங்களில் மட்டும் வைரமுத்தால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது.


"காட்டுச் சிறுக்கி" என்னைக் கேட்டால் ஆல்பத்தின் ஆகச் சிறந்தப் பாடல் இதுதான் என்பேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அனுராதா ஸ்ரீராம் வழமை போல் பாடலை வளைத்துக் குழைத்து ஏதேதோ செய்கிறார். கூடவே ஷங்கர் மகாதேவன். இசைப்புயலுக்கு இணையாக வைரமுத்தின் பேனாவும் தாண்டவமாடி இருக்கிறது. வெறுமையும் தனிமையுமாய் கணக்கும் மனதின் வலியை
"பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி"
என எழுதியிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்தது.

என்னளவில் பாடல்கள் மோசமில்லை ஆனால் ஆஹா ஓஹோ எனப் புகழும் ரகமுமில்லை. வைரமுத்து மினக்கெட்டு எழுதியிருப்பது தெரிகிறது ஆனால் வார்த்தைகளை கருவிகள் ஆக்கிரமித்து அமுக்கி விடுவது கவலை. எளிதில் மனதில் ஓட்டும் ரகமான இசை இல்லையாதலால் விண்ணைத் தாண்டி வருவாயா போல் ஹிட்டடிக்க போவதில்லை. அடுத்தி ஹிந்தியில் போல் இல்லாமல் தமிழில் வரிகள் குறித்த இசைக்குள் வலிந்து திணிக்கப்பட்டதைப் போல் தோன்றுகிறது. மணிரத்னம் ஹிந்திக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தமிழுக்கும் தந்தால் தேவலாம். எப்படியும் பாடல்கள் நிச்சயமாக மணிரத்னத்தின் காட்சியமைப்புகளுடன் பார்க்கும் போது ஒரு புதுவிதமான பரவசத்தைத் தரும் என்பது திண்ணம். அதுவரை எதிர்பார்த்திருப்போம் ஜூன் பதினெட்டை

இதெல்லாம் இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த ஒரு பாமரனின் பார்வை. யாரேனும் விவரமறிந்தவர்கள் பாடல்களை நுணுகி ஆராய்ந்து விமர்சனம் எழுதுங்கள். படிக்க ஆவலாயுள்ளோம்.

சனி, 27 பிப்ரவரி, 2010

விண்ணை தாண்டி வருவாயா = இசை + இளமை + காதல்

வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.

அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். காதலை அடையும் முயற்சியில் வரும் இம்சைகள்தான் எத்தனை அப்படியான சந்தர்ப்பங்களில் ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கையில் ஏன் இவளைக் காதலித்தோம் எனத் தோன்றுமல்லவா? அப்படி ஒரு மலையாள கிறித்தவ குடும்பத்தில் பிறந்த ஜெஸ்சியை காதலிக்கும் ஹிந்து இளைஞன் கார்த்திக் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் படமே


ம்ம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் வழமையான கெளதம் படங்களை போன்றே த்ரிஷாவை முதன் முதலாய் பார்க்கும் சந்தர்ப்பத்திலேயே காதலில் விழுகிறார் சிம்பு. சில பல முயற்சிகளின் பின் முதலில் மறுத்த த்ரிஷா பின் கௌதமின் சரித்திர பிரசித்திப் பெற்ற " I Think I'm in love with you" சொல்கிறார். பின் வீட்டார் எதிர்க்க கதை கெளதம் மேனனின் இஷ்ட Location அமெரிக்காவுக்கு எல்லாம் பயணித்து கடைசியில் சேர்ந்தார்களா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

சிம்புவைப் பார்க்க ஆச்சரியம் எல்லாம் எழவில்லை. அவர் திறமையாளர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த படம் தரப்போகும் வெற்றியின் மிதப்பில் பழைய குருடி கதவைத் திறடி என விரல் சுத்தாமல் இருக்க வேண்டும். முதன் முதலில் காதல் வயப்படும் போது காட்டும் பரவசம், த்ரிஷாவை impress செய்வதற்காக எடுக்கும் முயற்சிகள், முதன் முதலில் பேசும்போதுக் காட்டும் தயக்கம், அரிதாகத் தலைக்காட்டும் கோபம், மெல்லிய சோகம் அனைத்தையும் முகத்திலேயே கொண்டு வந்திருக்கிறார். இதுவெல்லாம் இல்லாமல் அநியாயத்திற்கு அழகாய் வேறு இருக்கிறார். அதிலும் கணேஷ் வீட்டில் இவர் த்ரிஷாவுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் தாடி வளர்ந்திருக்கும். அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர படத்தில் சொல்லும்படியான பாத்திரம் சிம்புவின் வயதான நண்பராக வரும் கணேஷ் என்றப் பாத்திரம். இவரை காக்க காக்கப் படத்தின் கமராமேன் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காக்க காக்க படத்தின் கமராமேன் R . D . ராஜசேகர். படத்தில் timing ஆக இவர் அடிக்கும் comment க்கள் சிறப்பை உள்ளன. சிம்புவும் இவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது சிம்பு அடிக்கடி கேட்கும் கேள்வியை இவரே சிம்புவிடம் " இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏண்டா ஜெஸ்ஸிய லவ் பண்ணுன? " எனக் கேட்கும் போது அரங்கமே சிரித்தது.

கமரா மனோஜ் பரமஹம்சா இப்போதுதான் இவர் பெயரை கேள்விப் படுகிறேன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் எனும் அளவுக்கு காட்சிகள் அவ்வளவு அழகு. என்ன close up காட்சிகளில் த்ரிஷாவை கொஞ்சமேனும் மெனக்கெட்டு இளமையாய் காட்டியிருக்கலாம். எடிட்டிங் வழமைப் போல அன்டனி. குறையேதும் எனக்குத் தெரியவில்லை. நிறையப் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் சத்தமிட்டாலும் எதையும் வெட்டத் தேவையில்லை என்பது என் கருத்து.

நம்பி வந்தால் இரண்டரை மணி நேர entertainment க்குத் தான் உத்தரவாதம் என்பதை மீள ஒருமுறை நிருபித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ரெண்டு வருடமா தமிழ் படத்தை இங்கிலிஷில் எடுப்பாரே அவரா? என தன்னையே கிண்டலடித்துக் கொள்ளும் அவர் ராஜபார்வையில்ருந்து இவரது மின்னலே வரை வழக்கிலிருக்கும் சர்ச் வெடிங் கிளைமாக்ஸ், தற்கொலை செய்துக் கொள்வதாய் மிரட்டும் தந்தை போன்றவற்றையும் பகடி பண்ணியவாறே தன படத்தில் சேர்த்திருக்கிறார். வழமையான அவரது கதை சொல்லும் பாணியிலான narrative ஸ்டைலிலேயே கதை நகர்கிறது. சிம்பு த்ரிஷாவைத் தான் காதலிப்பதற்கான காரணத்தைக் கேட்கும் போது முதல் படம் வரும் சொல்கிறேன் என்பார். பிறகு த்ரிஷாவிடமே சிலம்பரசன் த்ரிஷாவை பற்றி சொல்வதும் அது சொல்லப் படுவது எதில் என்பதும் புத்திசாலித்தனமான சுவாரசியம். சிம்பு கதை சொல்ல ஆரம்பிக்கும் அதே வசனங்களில் படம் முடியும் படியான வட்டமான திரைக்கதையும் அருமையாயத்தான் இருக்கிறது.

வழமையாக டைரக்டர் பற்றி இறுதியில்தான் சொல்வார்கள். நான் அவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு இறுதியில் இவரைப் பற்றி சொல்லக் காரணம். இவரது இசையத் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ச்சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் இசைப் புயல்.
காதலில் விழுந்த கணத்தின் பரவசம் ஒரு கொண்டாட்டமான துள்ளாட்டமாக ஹோசன்னவில் ஆரம்பிக்க அவள் அழகை பிரமிக்கும் ஓமனப் பெண்ணே ஒரு கனவை போல் மிதக்கச் செய்கிறது. காதலியை உடன்பட வைக்கும் போராட்டம் தட தட என கண்ணில் கண்ணை பாட்டில். அடுத்து ஸ்ரேயா கோஷலும் இசைப்புயலும் பிரிவையும் ஏக்கத்தையும் உணர்த்தும் மன்னிப்பாயாவில் உருக பின் சர்ச் கல்யாணங்களில் வரும் இசை, நாதஸ்வர இசை எல்லாம் கோர்த்த ஒரு கல்யாண பரவசம் அன்பில் அவன் பாடலில். பாடல்களைத் தவிர்த்து விட்டு படம் எடுக்கலாமே என்ற வாதத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் இசைப் புயல். படம் பார்த்தவர்கள் மனதை விட்டு சொல்லுங்கள் இவரைத் தவிர்த்து இன்னுமொருவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க முடியுமா?

படத்தில் குறைகள் பெரிதாய் இல்லை. என்ன சிம்பு படத்தில் சண்டை வேண்டுமென்பதற்காகவோ என்னவோ த்ரிஷாவின் அண்ணன் கூட்டி வரும் நான்கு ரௌடிகளுடன் சண்டையிடுகிறார். வாரணம் ஆயிரத்தில் கதையைக் கொண்டு செல்ல திடீரென சூர்யாவுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது போல யதார்த்தமான படத்தில் சிம்பு பத்து பேரை அடிப்பதை ஞாயப்படுத்த அவர் boxer என்று சொல்வது (லாஜிக்காமாம் ) மட்டும் கொஞ்சமாய் இடித்தது. கேரளாவில் நாலு நாளாய் சுற்றிய பின் கொஞ்சம் மூளையைப் பாவித்துதான் சர்ச்சில் த்ரிஷாவைக் காண்கிறார். ஆனால் அமெரிக்காவில் படம் எடுக்கப் போனவர் அங்கு அவரை சந்திப்பதை Just coincident என ஒத்துக் கொள்ள முடியவில்லை.

படம் கட்டாயம் பார்க்கலாம். எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை. கெளதம் மேனன் End card போடும் போது அது தன்னுடைய கதை என்பது போல முடிக்கிறார். படம் பார்த்த என் நண்பர்கள் பலர் தம் கதை என்கிறார்கள். so படத்தைப் பாருங்கள் இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்.

வியாழன், 14 ஜனவரி, 2010

தல போல் நடக்கும் தளபதி



நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.




அடுத்தடுத்து தான் ஆடிய பத்தாவது இறுதிப் போட்டியிலும் தோற்றிருக்கிறது இந்தியா. முதலில் 150 ஓட்டங்களுக்கு சுருட்டி விடலாம் என நினைத்தாலும் ரைனாவின் அபாரமான ஆட்டத் திறமையால் 246 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி எப்போது சொதப்புவார்கள் எனத் தெரியாததால் மிகுந்த அவநம்பிக்கையுடன்தான் டிவி முன் அமர்ந்தேன். நல்லவேளை சங்கக்கார அன் கோ என்னை ஏமாற்றவில்லை. ஆனாலும் 48 ஆவது ஓவர் வரை கடும் போட்டியைக் கொடுத்த இந்திய அணியை பாராட்டத்தான் வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் போட்டியைக் கைவிட வில்லை இந்தியா. இந்திய அணியின் பழைய போட்டிகளை நினைத்துப் பார்த்தேன். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களது Body Language ஏ எதிரணியினருக்கு உதிரி உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து விடும். தோனியின் தலைமையில் ஏற்பட்ட நல்லதொரு முன்னேற்றம் இது. இலங்கையைப் பொறுத்தவரை புதுமுகங்களுடனான அணியின் வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அறிகுறி. வாசுக்கு சொல்லாமலே கல்தா கொடுத்தாயிற்று. சனத்,முரளி போன்ற ஏனைய கிழடுக் கட்டைகள் கௌரவமாய் ஓய்வுப் பெறுதல் உத்தமம்.

ஜனாதிபதித் தேர்தல் நாளொரு கொலையும் பொழுதொரு சச்சரவுமாய் உச்சக் கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் பிரச்சாரம் சப்பென இருக்கிறது. போர் வெற்றி ஒன்றைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு. இதில் ஆளுங்கட்சி தொ(கு)ண்டர்கள் பாவம் பிரியாணிக்கும் அன்றைக்குத் தரப்போகும் காசுக்கும் ஆசைப்பட்டு ஐதேகவின் பிரச்சாரத்திற்கு போகவென வண்டியேறிய ஐந்துப் பிள்ளைகளின் ஏழைத் தாயை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். முன்பு ஐதேக ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகமாகவே இருக்கும். பின் சந்திரிக்கா அரசில் ஒப்பிட்டளவில் வன்முறைகள் குறைந்தாலும் மகிந்த மீண்டும் பழைய கலாசாரத்தை கொண்டு வர முயல்கிறார். மகிந்தவின் பிரசாரம் வேடிக்கையாக இருக்கிறது. போரை வென்ற நன்றிக் கடனாக அவருக்கு வாக்களிக்கவாம். பிரித்தானியாவில் உலகப் போரை வென்ற சர்ச்சிலுக்கே அடுத்த தேர்தலில் கிடைத்தது தோல்விதான். ஜெனரலின் விளம்பரம் ஒன்றில் முதலில் வீரத்தளபதி (அப்படித்தான் போடுகிறார்கள்) சீருடையில் வருகிறார் பின் தேசிய உடைக்கு மாறுகிறார். நடக்கிறார் நடக்கிறார் விளம்பரம் முடியும் வரையில் நடக்கிறார். தளபதி தலயின் படம் ஏதும் பார்த்தாரோ தெரியாது.


நல்லப் பாடல்கள் எல்லாம் வெளியாகி இருக்கின்றன. சந்தேகமில்லாமல் முதலிடம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குத்தான். "ஹோசானா" பச்சக் என மனதில் ஒட்டிக் கொண்டு போக மறுப்பதில் மற்ற பாடல்களை அடிக்கடி கேட்க முடியவில்லை. "மன்னிப்பாயா" பாடலில் ஸ்ரேயா கோஷலின்(இன்னுமொரு முன்பே வா ஸ்ரேயாவுக்கு) குரல் இனிமை. கூடவே ஈடு கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.
கோவாவில் ஏழேழுத் தலைமுறைக்கும் பாடல் கேட்டப் போது பழைய ஈஸ்ட்மன் கலரும் தொடர்ந்து மக்கள் நாயகன் ராமராஜன், கௌண்டமணி,செந்தில் என டைட்டில் போடுவதுமாக எல்லாம் ஒரு பிரமை. அதில் எனக்குப் பிடித்தது "இதுவரை" பாடல் அன்றியாவின் குரலில்.


ம்ம் இதை இப்போது பதிவிட்டப் பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப் போவதாய் ஒரு ஐடியா. போய் பார்த்து விட்டு மாலை என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

திங்கள், 14 டிசம்பர், 2009

வேட்டைக்காரனை எதிர்க்கத்தான் வேண்டுமா?


இலங்கை திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜேக்சன் என்தனி இயக்குனர் ,மேடை நாடக நெறியாளர்,தொலைகாட்சி அறிவிப்பாளர் எனப் பன்முகங்களையும் கொண்டவர். ஒருமுறை நேத்ரா டிவியின் நான்காம் பரிமாணம் நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு தான் உலகிலேயே சிறந்த நடிகர் என்று கருதுபவரும் சிறந்த இயக்குனர் என்று கருதுபவரும் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் என்றார். அவ்வாறு அவரால் சுட்டப்பட்டவர்கள் கமல் மற்றும் மணிரத்னம்.


ரஞ்சன் ராமநாயக்க சிங்கள சினியுலகின் சூப்பர் ஸ்டார், சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஒவ்வொரு முறை ரஜினி படங்களை ரீமேக்கி என்னைப் போன்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுபவர். ஒருமுறை அவரது பிரபலம் தொடர்பிலான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னது Popularity என்றால் என்னவென்று ரஜினி படங்களைத் திரையரங்கில் பாருங்கள் தெரியும் என்பதாக இருந்தது. இன்னொருமுறை தமிழகத்தில் ஏதோ ஷூட்டிங்கில் பங்குபற்றிய அவர் ரஜினி நடிக்கும் மண்ணில் நான் நடித்தேன் என்பதே பெருமை என இங்கு நெகிழ்ந்திருந்தார்.
இவ்வளவு ஏன் நாம் பெரிதாக Mind பண்ணாத சப்பை பிகர்களான பூஜா,மோனிகா போன்றோருக்கு எல்லாம் இங்குள்ளப் படங்களில் எல்லாம் Title role.


இராஜ் வீரரத்ன என்பவர் இங்குள்ள இளம் தலைமுறை இசைக்கலைஞர். ஒரு பாடகர்,Composer என்பதையும் தாண்டி நல்லதொரு Sound engineer இவரது mixing இல் வரும் பாடல்கள் அவற்றின் தொழிநுட்பநேர்த்திக்காகவே ரசிக்கப்படுபவை. ஒருமுறை சிங்கள டிவி நிகழ்ச்சியில் W.D. அமரதேவவுக்கான பாராட்டு விழா, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்வு எதற்கு போவீர்கள் என்ற கேள்விக்கு இவர் சற்றும் யோசிக்காமல் தந்த பதில் ரஹ்மானின் இசை கச்சேரிக்கு. அமரதேவ லேசுப்பட்ட ஆளில்லை இலங்கையின் மிக மூத்த முதிர்ந்த இசைக்கலைஞர். இந்திய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுப் பெற்ற ஒரே ஒரு இலங்கையர். ஆனால் இராஜின் பதிலால் இங்கு எவரும் உணர்ச்சி வசப்பட்டு பேசவில்லை. கலை அரசியல் இரண்டையும் வேறுப்படுத்தி பார்க்கும் மன முதிர்ச்சி அவர்களுக்குஇருக்கிறது.

ஆனால் இராஜ விஜய் ஆண்டனியோடு சேர்ந்து பங்காற்றுகின்றார் என்றவுடனே ஏராளம் எதிர்ப்புகள் இவ்விதமான எதிர்ப்புகளுக்கு எல்லாம் அஞ்சி நம் சமூகம் படம் பார்க்காமல் இருக்காது. ஏன் இலங்கையில் மட்டும் அறியப்பட்டிருந்த இராஜுக்கு இது நல்லதொரு விளம்பரமும் கூட . நான் மேற்சொன்ன சிங்களவருக்கு இருக்கும் பெருந்தன்மை ஏன் இல்லாமல் போனது நமக்கு? அதுவும் இது தொடர்பான பதிவுகளில் உள்ள வாசகங்களைப் பாருங்களேன் எத்தனை துவேசம். அவர் ராணுவ வீரர்களை பாராட்டி பாடல் பாடி விட்டாராம். தீர்க்கமான சந்தர்ப்பமொன்றில் தான் சார்ந்த தேசத்துக்கு அவர் செய்தது அது. நாமும்தான் அப்படியான விடயங்களைச் செய்தோம். இராஜ் வேண்டாம் என்கிறார்களே. சீமான் கூடத்தான் இரட்டை அர்த்தப்பட தம்பி எனப் பெயரிட்டு படமெடுத்தார். மாதவனும் புலியும் ஒன்றாய் உறுமுவது போல பானருடன் படம் இலங்கையிலும் திரையிடப்பட்டதுதானே. அதில் நடித்த பூஜா பின் சிங்களப் படங்கள் நடிக்க வில்லையா?


தமிழருக்காய் மேடைகளில் மௌன விரதமிருந்த பாரதிராஜா "கண்களால் கைது செய்" படமெடுத்த பின் படப்பிடிப்பில் தந்த ஒத்துழைப்புக்காக அரசு சார்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி எல்லாம் தெரிவிக்கவில்லையா. அந்த படத்தில் சனத் குணத்திலக்க நடிக்க வில்லையா? என் ஞாபகம் சரியாக இருந்தால் பதிவர் லோஷன் அண்ணா அந்நேரம் பாரதிராஜாவை பேட்டிக் கண்டிருந்தார்.

இது எல்லாம் கலை ஐயா தயவு செய்து இதை அரசியலாக்காதீர்கள் நாம் தமிழர்கள் வெறுப்பு என்றால் மிக ஆக்ரோஷமாகக் காட்டுகின்றோம். சில நேரங்களில் ரொம்பவும் குழைந்து உணர்வு ரீதியான அடிமைகளாய் மாறி விடுகிறோம். இது மட்டுமில்லாமல் கல் தோன்றி மண் தோன்றா என்கிற உயர் மனோபாவமும் இருக்கின்றது ( அல்லது இது மித மிஞ்சிய தாழ்வுச் சிக்கலின் பிரிதொரு வகையான வெளிப்பாடு) . தனியே தமிழரின் வரலாறு,சாதனைகள், என்பவற்றை அவர்களது உயர் மனோபாவத்தொடு ஒப்பிட்டு ஆய்வுக்குட்படுத்தினால் நகைப்புக்குரியதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

வேட்டைக்காரன் பிடிக்கவில்லையா அதை நிராகரிக்க அவரவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். பார்க்காமல் விடுங்கள். இவ்வாறான பிரசுரங்கள் எனக்கென்றால் உடன்பாடில்லை. கருத்து திணிப்புகள் நம் நிலைக்கு பிரதான காரணங்களில் ஒன்று. கிட்டத் தட்ட சுயச் சிந்தனையே மறந்து விட்ட நிலையில் இனியேனும் அவனை சிந்திக்க விடுங்கள் ஐயா. இதை விடுங்க சின்ன விடயம் அடுத்து ஜனாதிபதி தேர்தலில் பாருங்களேன் அவனுக்கு போடு இவனுக்கு போடுன்னு ஏக களேபரமாக இருக்கும்

அப்புறம் ஒன்று நானும் இராஜின் ரசிகன்தான் எனக்கு பிடித்த சிலப் பாடல்களின் தொடுப்பு. கீழே பாடல் மட்டுமல்ல காட்சியமைப்புகளைப் பாருங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறும்படம் போல அத்தனை அழகு. வரிகள் புரியா விட்டாலும் இசை மற்றும் காட்சிகள் பொருளுணர்த்தும். அதிலும் அந்த மூன்றாவது பாடலின் காட்சிகளை பாருங்களேன் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நான்காவது பாடல்தான் தங்கத் தாமரை ஆனது. இதிலே தினேஷ் கனகரத்தினம் அமைச்சர் புத்திரசிகாமணியின் மகன் Bone killer ஆகியோரும்தான் இதில் பங்கேற்றுள்ளனர் அப்ப அவர்களுக்கும் ஆப்பா?


http://www.youtube.com/watch?v=y7Rin2vAzSM

http://www.youtube.com/watch?v=oeOGAiz24RU

http://www.youtube.com/watch?v=TLigScK6C3g

http://www.youtube.com/watch?v=jHWlRsIKnv8

திங்கள், 7 டிசம்பர், 2009

என்னை ஏமாற்றாத சாரு


இலங்கையர்களுக்கு இப்போதெல்லாம் இதைத் தவிர்த்தால் பேச எதுவுமே இல்லை போலும். அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரிடையேயும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருக்கிறது. இந்தியத் தலைவர்களை பார்த்து கூல் செய்ய முயன்றிருக்கிறார் ஜெனரல் பொன்சேகா. இங்கே இன்று மகிந்த எஸ்பியின் வீட்டுக்கு போயிருப்பது கட்சித் தாவலொன்றுக்கான அறிகுறிகளை காட்டியிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அரசு எதிர்பாராத பல அதிரடிகள் அடுத்த வாரம் அரங்கேறும் எனக் கூறியிருப்பது நிஜமா அல்லது புலி வருது கதையா என்பது இனிதான் தெரியும்.



புலி வருது என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது. எந்த புலியும் வராமலே மாவீரர் தினம் நடந்து முடிந்திருக்கிறது. தமிழக பத்திரிகைகள் இனி வேறு விதமான உளவுத் தகவல்கள் தர வேண்டியதுதான். அவர்கள் வியாபாரத்திற்கு சீமான் பக்கப்பலமிருப்பார் என நம்புகிறேன். சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவர் பெயர் வைத்தாராம். என்ன கொடுமை சீமான் இதெல்லாம்? தயவு செய்து மக்களின் உணர்வுகளை இப்படி மலினப் படுத்தி ஆதாயம் தேடாதீர்கள். திராவிடம் பேசும் மஞ்சள் துண்டு தலைவர்கள், தலித்துக்களுக்காக முழங்கிய சிறுத்தைகள் என பலரையும் நம்பி ஏமாந்த பின் இவர்.


மஞ்சள் துண்டுத் தலைவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெறப் போகிறாராம். பெரும்பாலான தனது இலக்குகளை எட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ம்ம் ஒரு மகன் மத்திய அரசில் அமைச்சர், மகள் எதிர்காலத்தில் அமைச்சராக வாய்ப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர், ஒரு மகனை தமிழக மக்களுக்கென தாரை வார்த்தாகி விட்டது, மருமகனின் பிள்ளைகள் இந்தியாவின் முக்கிய புள்ளிகள் ஆமாம் இதெல்லாம் ticket இல்லாமல் train ஏறி வரும் போதே Plan பண்ணி வந்ததா? இல்லை பிற்காலத்தில் உண்டானா ஆசையால் விளைந்ததா?


"அளவுக்கதிகமா ஆசை படுற ஆம்பிள்ளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை" என்றார் தலைவர். மண்ணாசை,பொன்னாசை கூட பரவாயில்லை பெண்ணாசையால் நொந்து நூடுல்ஸ் ஆன காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் பற்றி அறிந்திருப்பீர்கள். கருவறையில் பெண்களுடன்ஆபாசமாக இருந்ததோடு அதை செல்போனில் படமெடுத்து பிறகு பார்த்து ரசித்திருக்கிறார். பொதுவாகவே நம்ம சாமிகளுக்கு கொஞ்சம் கிளு கிளு உணர்வு ஜாஸ்திதான். புராணக் கதைகளை படியிங்களேன் Straight தொடங்கி incest வரையான பலான கதைகள் ஏராளம். என்ன சொல்லி என்ன இனி மேலும் நம் பெண்கள் சாமி புள்ளை வரம் கொடு என்று யாரேனும் ஒரு சாமி பின் போகத்தான் போகின்றார்கள்.


நான் சொன்ன ஒரு விடயம் பலித்திருக்கிறது. "பா" பாடல்கள் பற்றிய என் பதிவில் நிச்சயம் இந்த இசையை சாரு மட்டம் தட்டி எழுதுவார் என எழுதியிருந்தது பலித்தே விட்டது( ஆமா இதை ஊகிக்க பெரிய தீர்க்கதரிசனம் எல்லாம் வேணுமாக்கும்). ஆனால் நானே எதிர்பார்த்திராத ஆச்சரியம் அவரது நேற்றைய பதிவில். கிட்டத் தட்ட ஒரு நல்ல சிறுகதையின் முடிவில் வரும் Twist ஐப் போல. நந்தலாலாவில் இளையராஜாவின் இசை அவருக்கு ஆச்சரியமோ இல்லையோ அவர் பதிவை வாசித்த போதோ எனக்கு பெரும் ஆச்சரியம். இளையராஜா தவிர்ந்து சாருவின் ரசனையில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. அதனடிப்படையில் ஏலவே மிஷ்கினில் கொண்டிருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தி முதலில்கமலும் இப்போது சாருவும் படம் பார்க்கும் ஆவலை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

திங்கள், 23 பிப்ரவரி, 2009

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே


'ஸ்ளம் டோக் மில்லியனியர்'
. ஆர். ரஹ்மான் கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப் படும் வரை இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு தெரியாது. அவருக்கு விருதும் கிடைத்தப் பின் நடந்தேறிய சம்பவங்கள் படத்தையும் எப்படியாவது பார்த்து விடும் ஆசையை ஏற்படுத்தியது. அதன் பின்தான் ஒரு மாதிரி படத்தை தேடிப் பார்த்து முடித்தேன்.(DVD
இல்தான் )

படத்தை பார்க்க முன்பே படத்தின் விமர்சனமொன்றில் படத்தின் கதை சுருக்கத்தை படித்த போது குப்பத்து சிறுவன் போட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கோடிஸ்வரன் ஆகிறான் என ஏதோ கோகுலத்தில் வரும் சிறுவர் கதை போல உள்ளதே என யோசித்தேன். ம்ஹ்ம்.. படம் பார்த்த போது அங்கேதான் ஏமாந்து போனேன். போட்டி நிகழ்ச்சியும் அதையொட்டிய அவனது வாழ்க்கை சம்பவங்களும் சலிப்பூட்டதவாறு படமாக்கப் பட்டிருந்த விதம் அவார்ட் தரப்பட்டிராவிட்டால்தான் ஆச்சரியம். நம் தமிழ் இயக்குனர்கள் இரு வேறு கதைக்களங்களில் பயணிக்கும் கதையை தொடர்பு படுத்த திணறுவதை பார்க்கும் போது ( விருமாண்டி விதி விலக்கு) இதை இத்தனை லாவகமாய் சாத்தியப் படுத்தியிருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

அமிதாப்
பச்சனை பார்க்கவென மலத்தில் குதித்தெழுவது, தாஜ்மகால் பார்க்க வரும் உல்லாசப் பயணிகளுக்கு வழிக்காட்டுவது போன்ற கலகலப்பான காட்சிகளினூடே சேரி வாழ்வின் அவலங்களையும் வாழ்க்கை போராட்டத்தில் தமது சிறுபிள்ளைதனத்தை தொலைத்து விட்ட சிறார்களின் துயர் நிறைந்த காட்சிகளும் நம் மனதை சற்றே கலங்கச் செய்ய வல்லன .
ஜமால் போட்டியில் கலந்து கொள்வது தன் காதலி லத்திகாவையும் அடையும் நோக்கோடுதானாம் ஆனால் ஏனோ அவர்கள் சேர்வதைப் பற்றி மனம் அவ்வளவாய் அக்கறை கொள்ளவில்லை.

பிரதான
நடிகர்கள் பெரிதும் அறிமுகமற்றவர்கள் அனில் கபூர் இருக்கிறார் என் சிறு வயதில் தொலைக்காட்சியில் இவர் மாதுரி டிக்சித்தோடோ ஸ்ரிதேவியோடோ கட்டிப் பிடித்து ஆடுவதை கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்திருக்கிறேன் இதில் இவர் நடிக்கவும் செய்கிறார். குறிப்பாக
ஜமால் jack hops விடையாக சொல்லும் போது காட்டும் முகபாவனை. இர்பான் கான் பில்லு பார்பரில் பசுபதியின் பாத்திரம் செய்பவர் மற்றவர்கள் யாரையும் எனக்கு தெரியாது.

சரி
படம் தொடர்பான விமர்சனங்கள் இந்தியர்களுக்கு உள்ள கவலையே தமது பிச்சைக்காரத்தனத்தை யாரோ ஒரு வெள்ளைக்காரன் படமா எடுத்து உலகம் பூரா ஓட்டிட்டானே என்பதுதான் இது ஒரு இந்தியப் படமாயிருந்து அங்கு மட்டும் ஓடியிருந்தால் அவ்வளவு தூரம் கவலைப் பட்டிருக்க மாட்டனர். இங்கு சிங்களவனிடம் இத்தனைப் பட்டும் மக்கள் டிவியில் ஒரு முறை தமிழக மக்கள் இலங்கை தேசியக் கொடியை எரித்தப் போது மனம் இலேசாக வலித்தது. இவ்வகையில் இந்தியரின் கோபம் உணரத்தக்கதே.


ஆனால்
படம் சேரி வாழ்க்கையை மாத்திரம் கூறவில்லை இந்தியாவின் செழிப்பான ஒரு பக்கமும் காட்டப் படுகிறது. ஏழைகளின் பொருளாதாரத்தையும் சிந்தனையையும் சேர்த்தே சுரண்டும் மிகையான கதாநாயகத்துவதோடு வரும் சினிமாக்கள், இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் நாம்தான் என கூறும் மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கை முறை என்பவற்றையும் கூறுகிறது.
படம் பார்ப்பவருக்கு மும்பையின் வறுமை மட்டுமின்றி வறுமைக்கு காரணமும் தெரிந்து விடும்.

இதன்
பின்னணியில் படத்திற்கெதிராய் வெகுண்டெழுந்து கருத்துக் கூறிய அமிதாப் வகையறாக்களின் சமூக் அக்கறை உணரக்கூடியதே. இதன் போது தானும் ஒரு super star ஆய் இருந்தும் படத்தை ஆதரித்த ஷாருக்கான் பிக் பியை எதிர்க்க வேண்டும் என்றில்லாமல் உண்மையில் செய்திருந்தால் பாராட்டுக்குரியவர்.


அடுத்து
நம்ம ஹீரோ

ரஹ்மான்
முன்ன போல் இல்லை இப்பெலாம் பாட்டு முன்ன மாதிரி ரசிக்க
முடியிறது இல்ல என் பலர் புலம்புகின்றனர். உண்மையில் அவர் இப்போதெல்லாம் உலக ரேஞ்சில் இசையமைக்கிறார் நமக்குத்தான் ஞானம் இல்லை அதுதான் உண்மையையும் இருக்க கூடும். முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம், சகானா சாரல் தூவுதோ பாடல்கள் சமீபத்தில் வந்தவைதான்.எப்படியோ தமிழில் அவரை விட்டால் ஒஸ்கார் எடுக்க எவருமில்லை
படத்தில் பாடல் கேட்ட போதும் படம் பார்த்த போதும் எனக்கு வழக்கமான ரஹ்மான்தான் தெரிந்தார். ஆனால் இன்று ஒஸ்காருக்குப பின் இதே இசையை கேட்ட போது ஏனோ புல்லரித்தது.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

பாப் மார்லி

இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கும் இன்று இலங்கையிலுள்ள பல இளைஞர்களின் முன்மாதிரி இவர்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் தமது வாகனத்தில் இவரது பாடல்களை அலற விட்டுக்கொண்டு போவதும் தெருவோரக்கடைகளில் இவரது படம் போட்ட கைக்குட்டைகள் அதிகமாக விற்பனையாவதையும் கண்ட போதே இவர் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது.

அதுவும் நான் பிறக்க இரு வருடங்களுக்கு முன்னமே இறந்து போனவர் இன்றைய இளைஞர்களை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்து ஒரு சிலரிடம்

" யாருயா இவன் பரட்டை தலையோடு பிச்சை காரன் மாதிரி"

என்ற போது கடவுளையே பார்த்தது போல் பதறி கன்னத்தில் போட்டுக்கொண்டவர்கள்

"இவரைத் தெரியாதா? மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் கறுப்பினத்தவர்களின் வலியையும் வேதனையையும் தனது பாடல்களில் பதிவு செய்தவர்" என்று கூறினர்.

சரி நம்ம இளைஞர்களுக்குத்தான் நம்ம இனத்தவரை பற்றியே அக்கறை இல்லை கறுப்பினத்தவரை பற்றி என்ன வந்தது என அவர்களிடம் வினவ

" போப் மார்லிக்கு கஞ்சா புகைக்க லைசன்ஸ் தெரியுமா?"

என்றனர். என்னடா இது ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத இரு வேறு முரண்பாடான கருத்துக்கள் ஒருவரை பற்றி என்று யோசித்த போதுதான் சுவாரசியமான விடயமொன்றை காண நேர்ந்தது.

அண்மையில் மத்திய மாகாண சபை தேர்தல் கடமைகளுக்காக சென்றிருந்த போது அடையாள அட்டைகளை பரீட்சித்துக்கொண்டிருந்த போது போப் மார்லி தனது அடையாள அட்டை, வாக்காளர் அட்டை சகிதம் வந்து வாக்களித்து விட்டு போனார். அதாவது அவரை போலவே ஒருவர் அட ஒருவன் தனது தோற்றத்தையே ஒருவரை போல மாற்றி கொள்(ல்லு)கிறான் என்றால் எவ்வளவு அபிமானம் அவன் பேரில் இருக்கும் என்று யோசித்தேன் உடனே அவர் பற்றிய விடயங்களை தேடத்துவங்கினேன்.

அவற்றுள் பல உண்மையிலேயே சுவாரஷ்யமானவை
போப் மார்லி ஜமைக்க நாட்டு ரெக்கே இசை கலைஞர் பிரித்தானிய வெள்ளை இனத்தந்தைக்கும், கறுப்பின ஜமைக்க தாய்க்கும் பிறந்தவர். 1981இல் தனது முப்பத்தாறாவது வயதில் இறந்தார்.

சரி அவரது வரலாறை விடுத்து அவர் பற்றிய செய்திகள் நிஜமா என்று பார்த்தால் அவர் பற்றிய இரு வகையான தவல்களிலும் உண்மை உண்டு.
எதியோப்பிய மன்னராக இருந்த Hailie selassie என்பவரை கடவுளின் அவதாரமாக கருதி வழிபடும் Rasta fari இயக்கத்தை சேர்ந்த இவர் தனது பாடல்களை அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்ற தொனிப்பொருளில் அமைத்தார். இதனாலேயே பாடல்களின் மூலம் சமூக மாற்றமொன்றை செய்ய விளைந்த ஒரு போராளியாக இவரை கருதுகின்றனர்.

அதிலும் போப் மார்லி நமக்கு(மலையகத்தவர்) மேலும் நெருக்கமானவர் பிரித்தானிய ஆட்சி ஜமைக்காவில் நிலவிய போது அங்கு அடிமைகளாக கரும்புத்தோட்டத்தில் வேலை செய்த கறுப்பர்களின் ஏக்கங்களை வெளிக்கொணரும் விதமாக வந்ததே ரெகே இசை. அவ்வகையில் அவ்விசையின் முடிசூடா மன்னன் போப் மார்லி உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் குறியீடாக கொள்ளப்பட வேண்டியவன்.

ஆனால் இன்றைய இளைஞர்களை போப் கவர்ந்திருப்பதற்கு காரணம் இதுவல்ல. Rasta fari இயக்கத்தினர் தாம் இயல்பாய் வாழ்வதாய் கூறிக்கொண்டு தலை வாருவதையும் குளிப்பதையும் கூடத் தவிர்த்தனர். உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது எனக்கூறிக்கொண்டு கணக்கு வழக்கிலாமல் கஞ்சா புகைத்தனர். இம்மித மிஞ்சிய கஞ்சாவே இவரது அற்ப ஆயுளுக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் மேம்போக்காக கேள்வியுற்ற இவ்வாறான தகவல்களே இலங்கை இளைஞர்களிடம் அவரது திடீர் புகழுக்கு காரணம் என நினைக்கிறேன்.
நான் பேசிய சிலர் தமது எண்ணம் போல் வாழ்வுக்கு ரஸ்தா என பெயர் வைத்துக்கொண்டதை பார்த்த போது நான் நினைத்தது சரியெனவே தோன்றியது.
இன்னுமொன்று ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற போது அங்கு பாடி அதிபர் முகாபேவை தேசிய வீரர் எனப்புகழ்ந்தவர் மார்லி. இன்று இருந்திருந்தால் அவரை பற்றி என்ன சொல்வரோ தெரியாது.

தமிழ் திரையுலகுக்கும் இவர் நிறைய செய்துள்ளார். அதாவது இவரது பல பாடல்கள் நகலெடுக்கபட்டுள்ளன. சந்தேகமென்றால் இவரது Buffelo soldier பாடலை கேட்டு விட்டு நேருக்கு நேர் படத்தில் வரும் "அகிலா அகிலா " பாடலை கேட்டுப் பாருங்கள்


Related Posts with Thumbnails