விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜூலை, 2010

முரளி = தன்னம்பிக்கை + விடாமுயற்சி


இன்று முக்கியமான தினங்களில் ஒன்று.

இனிமேல் இடக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் இருந்து மிக அகலமாக விழுந்த பந்தை லீவ் செய்ய அது அசாதாரணமாக திரும்பி லெக் ஸ்டாம்பை பதம் பார்ப்பதையோ, வலக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தை டிரைவ் செய்ய முயல்கையில் காலுக்கும் துடுப்புக்கும் இடையில் பந்து மாயமாக உள்நுழைவதையோ, வலக்கை வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் விழுந்த பந்தை ஒன் திசையில் அடிக்க back foot செல்லும் போது எதிர்பாராமல் பந்து மறுபுறத்தே விரைந்து திரும்பி சந்தேகத்திற்கிடமின்றிய LBW ஆட்டமிழப்புகளை ஏற்படுத்தும் டூஸ்ராக்களையோ இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம். ஆம் உலகக் கிரிக்கெட்டில் இதுவரை தோற்றம் பெற்ற மிகச் சிறந்த புறச்சுழற்பந்து வீச்சாளர் இன்றோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

ஐந்து நாள் தொடர்ந்தும் பெரும்பாலும் முடிவுகள் எட்டப்படாத போட்டிகள் என டெஸ்ட் போட்டிகள் எனக்கும் அயர்ச்சியைத் தருபவையாகத்தான் இருந்தன இவர் அசத்த துவங்கும் வரை.

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இன்னுமொரு பெயர் முரளி என்றால் அது மிகையில்லை. நிறவெறியின் காரணமாக மேற்கத்தைய ஊடகங்கள், டேரல் ஹேர், ரோஸ் எமர்சன் போன்ற நடுவர்கள், முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர், இன்னும் சில வீரர்கள் இவ்வளவு ஏன் உபகண்டத்திலேயே பிஷன் சிங் பேடி என இவரது பந்துவீச்சில் குறை சொன்னவர்தான் எத்தனை பேர். ஆனால் இத்தனைக்குப் பின்னும் தளராமல் ஆய்வு கூடங்களில் எல்லாம் ஏதோ கினி பிக் போல ஆய்வுக்குட்பட்டு தன்னை நிரூபித்து இன்று சாதனைகளின் சிகரம் தொட்டிருக்கிறார் முரளி.


தனக்கெதிரான சதிகளை வெற்றிக் கொண்டதில் மட்டுமல்ல இவர் ஒய்வு பெற்றதிலும் மற்றவருக்கு முன்மாதிரிதான். கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் போதும் நிலைக்கதவைப் பிடித்துக் கொண்டு போக மறுத்து அடம் பிடிப்பவர்களை போன்ற வீரர்களுக்கு மத்தியில் தனக்குரிய, தனது சாதனைகளுக்குரிய உச்சபட்ச கௌரவங்களுடன் ஒய்வு பெறுகிறார் முரளி.
எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு பேறு ஒரு தேசமே திரண்டு விடைத்தருகிறது.


அட இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த மலையகத் தோட்டத் தொழிலாளி தன உதிரத்தையும் வியர்வையையும் தேயிலைக்காடுகளுக்கு உரமாக்கினால் இலங்கையின் பெயர் விளையாட்டுலகில் ஜொலிக்கவும் ஒரு மலையகத் தமிழன்தான் தன் உழைப்பால் காரணமாகி உள்ளான்.





ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

யாழ்தேவி,கோவா,தமிழ்ப்படம் இன்னும்பிற

இந்த வாரத்திற்கான யாழ்தேவியின் நட்ச்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும் எனக்கும் இவ்வங்கீகாரத்தை தர முன்வந்த யாழ்தேவி நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றிகள். நாளொன்றின் பெரும்பாலான நேரம் ஆணி பிடுங்குவதிலேயே கழிவதில் பதிவிட இப்போதெல்லாம் நேரம் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. அதுவும் இல்லாமல் இப்போதெல்லாம் ஏதேனும் எழுத அமர்ந்தால் ஒன்றும் தோன்றாமல் வெறுமையாக இருக்கின்றது. இருந்தாலும் ஏதோ எழுதி ஒப்பேற்றலாம் என்ற நம்பிக்கையோடு சவாலை சந்திக்கத் தயாராகி இருக்கின்றேன். கொஞ்சம் வந்து வாசித்து என்னை செப்பனிட உதவுவீர்கள் என நம்புகிறேன்.

கோவா, தமிழ்ப்படம் இரண்டும் பார்க்கக் கிடைத்தது. இரண்டுமே இலங்கையில் அருகாமையில் எத்திரையரங்கிலும் திரையிடப் படாமையால் டிவிடியில்தான் பார்த்தேன். அசல் இங்கே திரையிடப் பட்டிருப்பினும் ட்ரைலர் பார்த்த போது ஏலவே ரஜினியின் பில்லாவை ரீமேக் செய்த அஜித் மீண்டும் தான் நடித்த பில்லாவை ரீமேக் செய்திருப்பதாய் தோன்றியதால் தவிர்த்து விட்டேன்.

கோவா அத்தனை அருமையான படம் இல்லை என்ற போதிலும் நல்லதொரு டைம் பாஸ் படம். முதற் பாதிக் கிராமக் காட்சிகள் சுவாரசியம். பின்பாதி மகா இழுவை,அறுவை அதிலும் சிநேகா தேவையே இல்லாத Extra fitting . படத்தின் ஆச்சரியம் சம்பத். இன்னுமொரு பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவுக்குத் தயார் என நினைக்கிறேன். முன்னவர் போல அவ்வப்போது மிகையாய் நடிக்காமல் இருந்தால் சரி. அதிலும் இதுவரை தமிழ் சினிமா பேசத் துணியாத விடயத்தை தொட்டமைக்காகவும் அதை நாகரீகமாய் படமாக்கி இருந்ததற்காகவும் வெங்கட்ப்ரபுவுக்கு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் அவரும் வீட்டில்தான் பார்த்திருக்கிறார் ரொம்ப சங்கடமாய் போய்விட்டதாய் சொன்னார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் என்னுடைய Forrest gump பற்றிய பதிவைப் பார்த்து விட்து எனக்கு philadelphia தான் பிடிக்கும் என்று சொன்னவர் அவர். மாமியார் உடைச்சா மண்குடம் பழமொழிதான் ஞாபகம் வந்தது. ஆனாலும் சென்னை 28 இல் நாம் பார்த்த இயல்பான இளைஞர்கள் இங்கு இல்லை ரொம்பவும் செயற்கையாய் இருக்கிறது படத்தோடு ஒன்ற முடியவில்லை.

தமிழ்ப் படம் ம்ம் அருமை. ஆனால் இதனால் தமிழில் மசாலா படங்கள் குறைந்து விடுமெனத் தோன்றவில்லை. இன்னுமொன்று இப்படம் என்னை போன்ற சினிமாப் பைத்தியங்களுக்கு சரி அட இது அதைதானே சொல்றான் என ஒப்பிட்டு சிரிக்க. நிறைய சினிமா பார்க்காதவர்களோ அல்லது தமிழ் சினிமாவின் வழமையான க்ளிஷேக்களை உணர்ந்திராதவர்களோ படத்தை ரசிக்க முடியாது. படத்தில் தனித் தனியே ஒவ்வொருக் காட்சியும் மிகுந்த பரவசத்தைக் கொடுத்தாலும் முழுமையாக படம் ஒரு நிறைவைக் கொடுக்காத உணர்வு. சில வேலை எனக்கு மட்டுமாய் இருக்கலாம்.

அப்படியே அடுத்த தேர்தலும் வந்து விட்டது. புதுமுகங்கள் நிறையப் பேர் ஆளுங் கட்சி சார்பில் களமிறங்க இருப்பதாகத் தெரிகிறது. அதில் பிரபலங்களும் அடக்கம் சனத் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஆகியோர் போட்டியிட தயாராகி உள்ள நிலையில் முரளிப் பற்றியும் பேசப்படுகிறது. ஆளுங் கூட்டணியில் போட்டியிட்டால் தமிழனும் போடமாட்டான் தமிழனாய் பிறந்த பாவத்திற்காய் சிங்களவனும் போடமாட்டான். வேண்டாமே முரளி எதற்கு வீணாக தோற்று பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை கிரிக்கெட் விளையாடுவோம். முடியாதக் காலத்தில் டொக்டர் அம்மாவின் ஊருக்கு போய் ஏதேனும் கிரிக்கெட் அகாடமி வைத்து பிழைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு போகும் அவசரத்தில் இந்த அதிகாலையிலேயே பதிவிடுகிறேன். இனி மீண்டும் இரவு ஒன்பது மணியளவிலேயே இந்தப் பக்கம் வரமுடியும். வந்துப் பார்க்கும் போது பரவாயில்லை நமக்கும் பின்னூட்டம் வருது எனுமளவுக்கேனும் பின்னூட்டங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

புதன், 18 மார்ச், 2009

" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"


cricket பற்றி பேசும் காலமா இது என பலரும் முகம் சுளிக்கக் கூடும். பாரதியே ODI விளையாடு பாப்பா என்று பாடி இருக்கிறாரே என மனதை தேற்றிக் கொண்டேன்.
ஒருநாள் போட்டி முடிவுகள்தான் சுவாரசியமாயிருக்கும் என்பது தெரிந்தது ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலும் ஆச்சரியத்தை தரும் என நேற்றுதான் தெரிந்தது.

அட ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசையில் நம்ம நுவன் குலசேகர முதலிடம். M & M magic தான் இலங்கை அணியின் பலம் எனத் தெரியும். அட இதற்கிடையில் இவர் எப்படி என்று தேடிய போதுதான் தெரிந்தது. ஐயாவும் லேசுப்பட்ட ஆளில்லை என்பது

தரவரிசைக்குட் படுத்திய குறித்த காலப்பகுதியில் இவர் அதாவது இவர் மீள அணிக்குத்திரும்பிய 2008 ஏப்ரல் தொடக்கம் இன்று வரை 29 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை 20.97 என்ற சராசரியுடனும் கிட்டத்தட்ட ஓவருக்கு 4.45 என்ற வகையில் சிக்கனமாகவும் ( economy rateஐ வேறெப்படி தமிழ் படுத்தலாம்) பந்து வீசி கொய்திருக்கிறார்.

இதைப் பற்றி இவரிடம் கேட்டால்
இது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் சென்ற வருடத்தில் அதிக சிரத்தை எடுத்து பந்து வீசியதாகவும் இருப்பினும் வெறும் இருபத்தாறே வயதான தான் கிரிக்கெட்டில் இன்னமும் கற்றுக் கொண்டிருப்பதாகவும் நல்லதொரு பந்துவீச்ச்சாளராக வர உறுதிப் பூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
(அட என்னவொரு அவையடக்கம்)

இது பரவாயில்லை 8ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராக ஆடி வரும் இவர் கடந்த 12 மாதங்களாக தான் பேணி வந்துள்ள 20.36 என்ற துடுப்பாட்ட சராசரியை 25 ஆக மாற்றுவதன் மூலம் அணிக்கு ஒரு ஸ்திர தன்மையை கொடுப்பது தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு துடுப்பாட்டத்தில் பல புதிய நுணுக்கங்களை கற்றுத்தந்த ( பந்து எங்கே வருகிறது எனப் பார்க்காமலே ஆறு ஓட்டங்கள் பெறுவது எப்படி போன்ற) முரளி இதை கேள்விப்பட்டு மென்டிசிடம் இப்படி சொன்னாராம்.
" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"

புதன், 4 மார்ச், 2009

வினையான விளையாட்டு


பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கை விடப்பட்டுள்ளது. போட்டிகள் கைவிடப் படுவது இயல்பு எனினும் இப்போட்டி கைவிடப்படுவதற்கான காரணம் சற்று வித்தியாசமானது.

பலஸ்தீன விடுதலை போராளிகளால் Munich ஒலிம்பிக் போட்டியின் போது நடத்தப் பட்ட black september தாக்குதல் உட்பட விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப் பட்ட பல தாக்குதல்கள் தொடர்பில் நாம் கேள்வியுற்றிருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் நமக்கு புதிய விடயமாகும்.

தங்களுடையது மட்டும்தான் உயிரு மத்ததெல்லாம் ***** என்ற எண்ணமுள்ள ஆஸ்திரேலியா அணி பாதுகாப்பின்மையையும் மும்பை தாக்குதலை காரணம் காட்டி இந்தியாவும் பாக் வர மறுத்த நிலையில் பாக் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்கவும் முன்னரே தங்களை அழைத்தால் பரிசீலிக்க தயார் என முந்திரி கொட்டை தனமாய் அறிக்கை விட்டார் முன்னால் Srilankan cricket இன் தலைவர் அர்ஜுன

பின் இது மேலிடத்திற்கு போனாலும் பாகிஸ்தான் மூலம் கிடைக்கும் பல ஆதாயங்கள் காரணமாக இலங்கை அணியை பாகிஸ்தான் அனுப்பியது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். இன்று அதற்கான பலன் கிட்டியுள்ளது. பாவம் இலங்கை அரசின் சுயநல அரசியலுக்கு பலியானது என்னவோ அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்கள்தான்.



















பொதுவில் மேலைதேயத்திற்கும் இஸ்லாமிய உலகுக்கும் இருக்கும் முறுகலின் வெளிப்பாடு என இந்நிகழ்வு கருதப்பட்டாலும் இச்சம்பவம் அதற்கு சற்றேனும் தொடர்புறாத இலங்கை மீது ஏன் பாய்ந்திருக்க வேண்டுமென்பதே எமது கவலையாகும்.

பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குடை பிடிக்கும் பாகிஸ்தான் அரசை பயமுறுத்தி அடிபணியச் செய்யும் நோக்கோடு தீவிரவாதிகளால் இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

அல்லது சிலர் சொல்வது போல இது Raw இன் கைங்காரியம் என்றால் வெட்கப்பட வேண்டியது உலகின் மிகப்பெரிய ஜனநாயகமே. இந்தியா என்று இம்மாதிரியான தன்னலம் சார்ந்த செயற்பாடுகளை மாத்திரம் செய்வதை நிறுத்துமோ.

வட கிழக்கு தமிழர்கள் தம்மை தமிழீழத்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். தமிழீழத்திற்கும் உரித்தில்லாது தம்மை இலங்கயராயும் உணர முடியாது மீள இந்தியாவிற்கும் செல்ல முடியாது தவிக்கும் மலையகத்தவர் இது நம்ம நாடுடா என சந்தோஷப் படும் தருணங்களில் இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதற்காக அவர்கள் தமிழுணர்வு அற்றவர்கள் என கூறுவது அபத்தமான வாதமாகும்.

நேற்றைய சம்பவத்தை தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் ஏதோ கடவுளின் செயலாகவும் வர்ணித்த சில பதிவுகளை பார்த்த போது உண்மையில் எரிச்சலாக இருந்தது. இச்சம்பவத்திற்காக நாம் வருந்தவில்லையெனில் சகோதரர் கம்பெனிக்கும் எமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இத்தனை போர் நடந்தும் கட்டுநாயக வரை வந்து தாக்கி விட்டு போன புலிகள் ஒரு முறையும் இவ்வாறான பேடித் தனமான தாக்குதல்களில் ஈடுப்பட்டதில்லை. இது கொஞ்சமாவது சிந்தனையாளரின் சிந்தையை கிளரியிருக்கும் என்றே நம்புகிறேன். அதை விடுத்தது இதற்கும் புலிகளுக்கும் தொடர்புண்டு என பழைய பல்லவியையே பாடினால் ம்ஹ்ம் இது என்ன சினப்புள்ளத் தனமா என சிரித்து விட்டு இருக்க வேண்டியதுதான்
Related Posts with Thumbnails