சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் என் பார்வையில்


 ஒரு பத்து வருடங்களுக்கு முன் "ஷங்கர்- கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்-சுஜாதா,  மீண்டும் இணையும்  இந்தியன் கூட்டணி " எனப் பத்திரிகையொன்றின் சினிமாப் பகுதியில் ஒரு ஓரமாக அறிவிப்பை பார்த்ததிலிருந்தே இப்படத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.. கமல் நடிக்கவில்லை என்ற போதே சப்பென ஆனது. பிறகு அந்நியன் ஆரம்பித்த காலத்தில் அந்த கதைதான் இது என தகவல் வர விக்ரமும் பரவாயில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு அஜித், ஷாருக் எனப் பயணித்த இக்கதை கடைசியாக வந்துச் சேர்ந்திருப்பது இக்கதைக்கு மிக மிகப் பொருத்தமானவரிடம். பத்து வருடங்களுக்கு முந்தைய கதை இன்று எப்படி ரசிகர்களை கவரப் போகின்றது என்பதையெல்லாம் தகர்த்திருக்கின்றது எந்திரன். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதகளப்படுத்தியிருக்கிறார்  ரஜினிகாந்த். 

ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என மக்கள் அவருக்களித்த அங்கீகாரமும்  சுஜாதா என்ற விஞ்ஞானம் அறிந்த சுவாரசிய(பரப்பிலக்கிய)  எழுத்தாளரின் நட்பும் தமிழில் ஒரு sci-fi   திரைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற கனவை தூண்டி விட்டிருக்க வேண்டும். நிறைய  சுஜாதா  பாதிப்போடு  இன்று திரையில் விரிந்திருக்கிறது ஷங்கரின் பத்து வருட உழைப்பு.
படம் வர முன்னரே பல தளங்களிலும் பேசப்பட்ட அதே கதைதான். ஆனால் கடைசி வரை அதை சலிப்புத் தட்டாமல் கொண்டு  சென்றதில்தான் இருக்கிறது ஷங்கரின் வெற்றி. நிச்சயமாய் இந்தப் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்காகவும் ஷங்கர் உழைத்திருக்கக் கூடிய உழைப்பு படத்தில் Dr.வசீகரனின் உழைப்புக்கு இணையானதாய் இருக்கும். 

ஷங்கருக்கு என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீனோவும் ரொம்பப் பிடிக்குமென நினைக்கிறேன். பல இடங்களில் இவ்விரு நாவல்களும் எட்டிப் பார்க்கிறது. சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ.  கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ. 

ஐஷை ஓவியமாய்த் தீட்டும் காட்சியும் ரோபோக் கூட்டத்துக்குள் கருப்பாடைக் கண்டுப் பிடிக்கும் காட்சியும் ஐ ரோபோட்டில் பார்த்தது.  Bicentennial Man போல என்று சொல்பவர்களுக்கு ரோபோ மனித உணர்வு பெறுதல் என்ற ஒரு ஒற்றுமையைத்  தவிர இரண்டுக்கும் ஒரு தொடர்பும்  இல்லை. அதிலும் ராபின் வில்லியம்ஸ் போன்ற ஒரு கலகலப்பான நடிகரை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை பெரும் இழுவையாக இழுத்திருப்பார் இயக்குனர் க்றிஸ் கொலம்பஸ். அவ்வகையில் ரஜினியை எப்படி முடியுமோ அப்படி அட்டகாசமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

ரஜினி மிக இயல்பாக நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர். கூடவே படத்தில் அவரது பாத்திரப்  பெயருக்கேற்ப எளிதில் எவரையும் வசீகரிக்கக் கூடியவர். கண்களில் பயம்,காதல்,அர்ப்பணிப்பு,கோபம் போன்றவற்றை எல்லாம் காட்டும் இயல்பான மனிதனாக வசீ, கலகலப்பும் நகைச்சுவையுமாய் சிட்டி I , நக்கலும் நையாண்டியும் நிறைந்த வில்லத்தனத்துடன்  சிட்டி II என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் தலைவர். நிச்சயம் விருதுக்கு தகுதியானது எனினும் மசாலா படம் என்பது இடிக்கிறது. சரி இந்தியனில் கமலுக்கு கொடுத்தார்கள் அதற்கு எள்ளளவும் குறையாத நடிப்பு கிடைக்குமென நம்புவோம். ரஜினியை தவிர்த்து இன்னுமொருவர் இதை இதனிலும் சிறப்பாகச் செய்ய முடியுமெனச் சொன்னால் சிரிக்க வேண்டியதுதான். இதுவல்லாமல் சிட்டி தன்னை போல சிலரை உருவாக்கி விட கடைசி 40 நிமிடங்களில் திரையெங்கும் பல நூறு ரஜினிக்கள். ரஜினி ரசிகனுக்கு அற்புதமானதொரு முன்கூட்டிய தீபாவளி விருந்து. 

ஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார். ரஜினியே வில்லனாய், காமெடியனாய் பிரகாசிப்பதில் டேனி,கருணாஸ்,சந்தானம் எல்லாம் காணாமல் போகின்றார்கள். ஒவ்வோர் காட்சியில் மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி வருகின்றார்கள்.

வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.
"உயிரோட இருக்காருல்ல?   வயரோடு இருக்கார்"
" அவ உடம்புல உடை இல்ல , ஆனா உயிர் இருக்கு"
கொச்சின் ஹனிபாவுடன் வரும் காட்சியில் உள்ள வசனங்கள்
"உன்னோட பாய் பிரண்டா இல்ல, டோய் பிரண்டா"
"காதலிச்சா நட்டு கழண்டுடும் "
மேற்சொன்னவை ரொம்பவும் நான் ரசித்தவை, மூவரில் எதை எதை யாரெல்லாம் எழுதினார்கள் எனத் தெரியாத நிலையில் சுஜாதா டச் இருப்பதாகப் பட்டது ஆனால் இவை கார்க்கியின் வசனங்கள் என நினைக்கிறேன் (அவரது ட்வீட்டில் கிடைத்த தகவல்) அட்டகாசம் கார்க்கி.

ஷங்கர் படத்தில் கலை, ஒளிப்பதிவு, இசை எல்லாம் உயர் தரத்தில் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆக இவை வழமைப் போலவே அசத்துகிறது. பின்னணி இசை அமைக்கும் காலங்களில் இரண்டு மணி நேரம்தான் தூங்கினேன் என்ற ரஹ்மானின் கூற்றில் கொஞ்சமும் மிகையில்லை. கலக்குகிறார் இசைப் புயல்.

இடைவேளைக்கு பின் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் சிறு தொய்வும், ரங்குஸ்கி கொசுக் காட்சியும் கிலிமாஞ்சாரோ பாடலை நுழைக்கவென வைத்த கலாபவன் மணி  காட்சியும் திருஷ்டிகள்.

மற்றும் படி நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு மகிழ்வான திரையனுபவம். கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். செல்லும் போது குழந்தைகளுடன் செல்வது அல்லது நாமே குழந்தைகளாய் செல்வது படத்தை இன்னமும் ரசிக்கச் செய்யும். Dot

8 கருத்துகள்:

ஷஹி சொன்னது…

அடேங்கப்பா!!! என்ன தர்ஷன் பதிவெல்லாம் போட்டுட்டீங்க??...பரவால்ல!லேட்டுன்னாலும் லேட்டஸ்ட்டு!

எப்பூடி.. சொன்னது…

படத்தோட பொசிடிவான விமர்சனத்துக்கு நன்றி.dot

Subankan சொன்னது…

அருமையான படம். எனக்கும் பிடித்திருக்கிறது :)

தர்ஷன் சொன்னது…

நன்றி ஷஹி
நன்றி எப்பூடி
நன்றி சுபாங்கன்

pichaikaaran சொன்னது…

film is nice..ur review also nice

பெயரில்லா சொன்னது…

kuppai......

வருண் சொன்னது…

***ஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார்.***

சிரிக்கிறேன் :)))

ஆண்ட்டினு சொல்லியிருந்தா கொஞ்சம் நல்லாயிருந்து இருக்கும்

வருண் சொன்னது…

Happy New Year,Dharshan! :)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails