புதன், 30 டிசம்பர், 2009

என்னைப் பாதித்த சினிமா Forest Gump


நாம் சினிமாக்களில் எத்தனையோ பாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டும் எம் மனதை தைத்து நீண்ட நாட்களுக்கு பதிந்திருக்கும். இளந் தாடியுடன் Interview சென்று அங்கே உணர்ச்சிவசப்பட்டு "What else do u want? two horns?" என ஆத்திரப்படும் ரங்கன்,
அதீத புத்திசாலித்தனத்தையும், தன்னம்பிக்கையையும்,வர்க்க உணர்வையும் அப்பாவித் தனத்திற்குள் மறைத்துக் கொள்ளும் கோபத்தையும் பக்குவமாய் வெளிப்படுத்தும் நல்லசிவம்,
தங்கை மேல் பாசமும் அதற்கு சற்றும் குறையாத ரோசமும் கொண்ட காளி, பூக்களை கூட ஒன்று குறையாமல் எண்ணி வைத்து விட்டு பின் "அன்பு காட்டுவதில்தான் கஞ்சத் தனமே கூடாது" என வசனம் பேசும் வித்யாசாகர் என தமிழ் சினிமாவில் என்னைப் பாதித்த பாத்திரங்கள் பல. இப்படி என்னை பாதித்து நீண்ட நாட்களுக்கு என் நினைவை விட்டு அகல மறுத்த ஒருவன்தான் Forest gump.



அவன் நம் எல்லோரையும் போல் ஒரு சாமானியன். ஆம் போலியோவால் பாதிக்கப் பட்டக் கால்களைக் கொண்ட IQ குறைந்தவனாக பாடசாலை அதிபரால் அடையாளப்படுத்தப்படும் அவனிடம் "போறேஸ்ட் நீயும் மற்ற சிறுவர்களைப் போல சாதாரணமானவன்" என்றுதான் அவன் தாய் சொல்கிறாள். அப்படி சாதாரணமானவன் எனச் சொல்லப்படுபவனின் அசாதரணமான வாழ்க்கைத் தொகுப்பே Forest gump.


பேருந்து நிறுத்தமொன்றின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் Forest gump அங்கிருக்கும் பெண்மணியிடம் தன் கதையை பால்யக்காலத்தில் இருந்து சொல்லத் துவங்குகிறான். அவன் கதையை கேட்கும் நபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றனர். சிலர் அசுவாரசியமாய்,அல்லது நம்பிக்கையின்றி கேட்டப் போதிலும் தனது பால்யம்,சிறு வயதிலிருந்து நேசிக்கும் காதலி ஜெனி,வியட்நாமில் ராணுவத்தில் தன்னோடு இணைந்திருந்த நீக்ரோ நண்பன், தன் வாழ்வில் தான் முகங் கொடுத்த வெற்றித் தோல்விகள், என அனைத்தையும் மீள அசைபோட்டு பார்க்கும் மகிழ்ச்சியில் கதை தொடர்கிறது.


புறக்கணிப்புகள் நிறைந்த அவன் வாழ்வில் தேவதையாக வந்து சேர்பவள் ஜெனி. அவன் கால்கள் குணமானதில் கூட அவள் பங்கிருப்பதாய் கருதுகிறான். அவள் மேல் அளவு கடந்த பிரியத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜெனி அங்கிருந்து விடுப்பட்டு வெளியேற நினைக்கிறாள்.


காலங்கள் உருண்டோட தன் அபார ஓட்டத் திறமையால் உள்ளூர் ரக்பி அணியில் இடம் பிடிக்கும் Forest gump பின் இராணுவத்தில் சேர்ந்து வியட்நாமிய போரில் பங்கேற்கிறான். அங்கே ராணுவத்தில் தன்னோடு பணியாற்றும் பபா என்ற கறுப்பின வீரனின் கனவான மீன்பிடி தொழிலில் தன்னையும் இணைத்துக் கொள்வதாய் சொல்கிறான்.
எதிர்பாராமல்
போரில் பபா இறக்கும் அதேவேளை இரண்டு கால்களை இழந்ததால் சாக விரும்பும் தன் தலைமை அதிகாரி ஒருவர் உட்பட மிகுதி அனைவரையும் காப்பாற்றும் Forest விருதளித்து கௌரவிக்கப் படுகிறான்.


பின்னாளில் மிகச் சிறந்த பிங் பாங் வீரனாக மாறும் Forest அதன் மூலம் பெற்ற பணத்தொகையைக் கொண்டு பபாவின் கனவான மீன்பிடி தொழிலில் இறங்குகிறான். ஆரம்பத்தில் தன்னைக் காப்பாற்றியதற்காய் வெறுக்கும் அவனது தலைமை அதிகாரி டேன் பின் அவனுடன் இணைந்து மீன்பிடித்துறையில் கிடைக்கும் பணத்தை Apple Computer இல் முதலிடுகிறான். இதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தில் அரைவாசியை பபாவின் குடும்பத்திற்கு வழங்கி அவர்களை திக்கு முக்காடச் செய்கிறான் Forest.


இதற்கிடையில் தன் தந்தையை விட்டு தூரமாய் போகும் ஜெனி கட்டுப் பாடற்ற ஹிப்பிக் கலாச்சாரத்தில் மூழ்கி இலக்கில்லாமல் வாழ்கிறாள். விபச்சாரம் அவளது தொழிலாகிறது. நீண்ட காலத்திற்கு பின் இருவரும் சந்திக்கின்றனர். அவளிடம் தன் காதலை சொல்லும் Forest இடம் மறுக்கும் ஜெனி அன்றிரவு ஆறுதல் பரிசாக செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்கிறாள். காலையில் அவனிடம் சொல்லாமலே கிளம்பிப் போகிறாள். அதன் பின் காரணமில்லாமலேயே நாட்டைச் சுற்றி ஓடும் Forest அதன் மூலம் ஒரு கவனிப்பை பெறுகிறான். அவனும் ஜெனியும் மீள வாழ்வில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்தார்களா? என்பதை மனதைப் பிசையும் வண்ணம் சொன்னப் படம்தான் Forest gump.


ம்ம் நான் எழுத ரொம்ப சிரமப்பட்ட பதிவு இதுதான். ஏதோ ஆசையில் ஆரம்பித்து விட்டு வார்த்தைகளை சிக்கனப் படுத்தி எழுத ரொம்ப சிரமப்பட்டேன். யாரேனும் படத்தை பற்றி எழுதி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தேன். ம்ஹ்ம் Hollywood bala, ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் போன்ற பெருந் தலைகளே தொடல. தேவையான்னு கேட்டுக்கிட்டேன்.
நான் நினைத்ததை விட பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. படத்தின் கதையை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தில் நான் ரசித்த சில சுவாரசியங்கள் அடுத்த பாகமாக எழுதுகிறேன். சிரமம் பாராமல் வந்து வாசித்து ஆதரவு தாருங்கள் .

திங்கள், 28 டிசம்பர், 2009

சபிக்கப்பட்ட தேவதை


சபிக்கப்பட்டிருப்பேன் போலும்
போன ஜென்மத்தில்
தனிமை தவிர்க்க
காமம் தணிக்க
கனவுகள் வளர்க்க
ஒரு காதல் இல்லாமல் போகக் கடவதென

உன் விழிகளின் ஸ்பரிசத்தால்
சாபவிமோசனம் கிட்டுமென
நம்பிய போதுதான் தெரிந்தது
நீயும் இதயம்
கல்லாய் போக
சபிக்கப்பட்டிருக்கிறாய் என

புதன், 23 டிசம்பர், 2009

பின் வரிசை மாணவனின் புலம்பல்



எனது வகுப்பில் எனக்கு மிகுந்த தொல்லைக் கொடுப்பவர்கள். எழுத்தே அறியாமல் இப்போது யாரையும் Fail பண்ணுவதில்லை என்ற நடைமுறையால் வகுப்பேற்றப்பட்டு இடைநிலை வகுப்புகளில் இருந்துக் கொண்டு மற்றவர்களுக்கும் இடைஞ்சலாய் இருப்பவர்கள். எழுத்தே தெரியாதவனுக்கு என்னவென்று விஞ்ஞானம் படிப்பிப்பது. இருந்த போதிலும் பரிதாபமாய் இருக்கும். மிகுதி உள்ள மாணவர்களை பாதிக்கும் என்பதால் எனக்கு அவர்களுக்கு எழுத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில் ஆரம்ப வகுப்புகளில் Primary Teachers என்ன செய்தார்களோ தெரியாது. அவர்களிடம் கேட்டால் மலையக சூழலை காரணம் காட்டி தப்பித்துக் கொள்கின்றனர். ஆசிரியப் பயிற்சியில் Education psychology எல்லாம் இதற்குத்தானே ஐயா கற்ப்பிக்கிறார்கள். ம்ம் அப்படி ஒரு மாணவனின் ஆதங்கத்தை சில வரிகளில் சொல்ல நினைத்தேன். கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்.



பின் வரிசை மாணவன் நான்
கைகலப்புகளின் போது
மட்டும் கையுயர்த்தும்
காகிதக் கப்பல் செய்யவே
பேப்பர் எடுக்கும்
மேசையில் கிறுக்க மட்டும்
பேனா தொடும்

உங்கள் கவனம் பெறத்தான்
எத்தனை போராட்டங்கள்
ஆனாலும்
உங்களுக்கு பிடித்ததென்னவோ
எனக்கு சற்றும் பிடிக்காத
அந்த முன்வரிசை
அதிமேதாவிகளைத்தான்

மூக்கொழுகும்
என்னைப் பார்த்து
அசூயையுடன் ஒதுங்கினீர்களே
மன்னியுங்கள்
மற்றவனை எள்ளும்
உங்கள் நாசுக்கும் நாகரிகமும்
எனக்கின்னும் கைவரவில்லை

"" கூடவா தெரியவில்லை
அடுத்தமுறை அடிக்க
கை ஓங்க முன்
ஒருகணம் யோசியுங்கள்
எனக்கு எழுத்தறிவிக்கா
உங்களுக்கு என்ன
தண்டனை தரலாம்

நம்பக் கடினமாய் இருந்தாலும் ஒரு தகவல் மேல உள்ளப் படத்தில் இருப்போர் தம் பள்ளிப் பருவத்தில் Dyslexia வால் பாதிக்கப் பட்டிருந்தனர்.
Related Posts with Thumbnails