செல்வராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வராகவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 டிசம்பர், 2011

கார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்



“Behind the success of every man there is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன் திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள், அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு  என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.
படத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

கார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும் ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி. சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின் போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக் கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும் கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.

புதுப்பேட்டையிலிருந்தே
கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்னவில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.

செல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.

செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு, 100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா? என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது எல்லாம் விசுவல் ட்ரீட்.

காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.

ராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர் அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில் சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.


ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல 
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்

வழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”. 

வியாழன், 14 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன்- என் பார்வையில்

கதையை நான் சொல்லப் போவதில்லை So பயமில்லாமல் படியுங்கள்


செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இடமுண்டு. துள்ளவதோ இளமை பாடல்களைக் கேட்டு விட்டு அதை டிவியில் பார்த்த போது எரிச்சலாக இருந்தது இவனெல்லாம் ஒரு ஹீரோ என சலிப்பு வேறு. அந்தக் கடுப்பில் படமே பார்க்கவில்லை. 2003 ஆம் வருடம் அதே ஹீரோ நடித்து ஒரு படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அந்தப் படத்தைப் போய் பார்த்தேன் பார்த்த நாளில் இருந்து தனுஷ் என் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். இவனைப் பிடிக்காது என்ற முன் முடிவுடன் படம் பார்க்கச் சென்றவனைஅவரது ரசிகனாக்கிய திறமைக்கு சொந்தக்காரர் செல்வராகவனே.


இதோ கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என போக்குக் காட்டிய செல்வராகவனின் புதியப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன். நிச்சயமாக தமிழிலே இது ஒரு புதிய முயற்சி. செல்வராகவன் படங்களில் என்னவெல்லாம் நாம் எதிர்ப்பார்ப்போமோ, என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது ஆனால் முற்றிலும் புதிய களத்தில்.
கிபி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. சோழ பாண்டிய மன்னரிடையே ஏற்படும் போர் உக்கிரமடைய சோழ இளவரசன் பெரும் படை புடைசூழ குறித்த சிலரோடு பெயரறியா தீவொன்றைச் சென்றடைகிறான். அவனைப் பின்தொடரும் ஒரு பாண்டிய நாட்டவனின் குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளின் ஆதாரத்தோடு அந்த சோழன் தஞ்சமடைந்த இடத்தை கண்டறிய முயலும் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் முயற்சியே ஆயிரத்தில் ஒருவன்.
தொல்பொருள் ஆய்வுக்குழுவின் தலைவி ரீமா சென், ஏலவே இப்பணியில் ஈடுப்பட்ட தன தந்தையைப் பறிக்கொடுத்த அண்ட்ரியா, இராணுவ உதவி வழங்கும் அழகம் பெருமாள் இவர்களோடு தன குழுவினருடன் பயணத்தில் இணைந்துக் கொள்ளும் போர்ட்டர் கார்த்தி. இவர்களே பிரதானப் பாத்திரங்கள்.


கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். என்ன இன்னமும் பருத்தி வீரன் தாக்கம் இவரை விட்டுப் போகவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்டைலை மாற்றுங்கள் கார்த்தி. செல்வராகவன் படங்களில் வழமையாக கதாநாயகி சோகம் ததும்ப வலம் வருவார். இதிலே அண்ட்ரியா அந்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். அழகம் பெருமாள் வழமைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்த்திபன் சஸ்பென்சில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் படம் வெளிவரும் வரை ஸ்டில் ஒன்று கூட வெளியிடப்படவில்லை. நானும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை ஆடியோ ரிலீசில் பார்த்திபன் பேசிய அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன்.


அடுத்தது ரீமா சென் பார்க்க அத்தனை அழகாய் இருக்க மாட்டார். முதிர்ச்சி தட்டிய முகம். ஒரு ஆண் போன்ற பாவனைகள் இவரா கிடைத்தார் செல்வராகவனுக்கு என நானும் யோசித்தேன். இதற்கெல்லாம் தன நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் ரீமா. முதல் படத்திலேயே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட கார்த்தி, 25 வருடத்திற்கு மேலே நடிப்பனுபவம் கொண்ட பார்த்திபன் எல்லாமே இவர் நடிப்புக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு அசத்துகிறார் ரீமா சென். ரீமா தவிர்ந்து இன்னுமொருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடுங்கள் விட்டால் ரீமா சென்னுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவேன். உண்மையை சொன்னால் சிம்ரனுக்கு பிறகு எந்தப் பாத்திரம் என்றாலும் செய்யக் கூடியவர் இவராயத்தான் இருக்கும்.


இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஏலவே ஹிட் ஆயிற்றே. பின்னணி இசையிலும் பெரிதாக குறை வைக்கவில்லை. பார்த்திபனும் ரீமா சென்னும் ஆவேசமாய் சண்டையிடுவார்கள் திடிரென ரீமா அவரை வேறு விதமாக சீண்ட அது ஒரு சிருங்கார விளையாட்டாக மாறும் அவ்விடத்தில் பிரகாஷின் இசை அருமை மாமாவின் பெயரைக் காப்பாற்றி விடுவார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானதொன்று. அமெச்சூர் தனமான சில கிராபிக் காட்சிகளின் குறையை மறைப்பதிலும் சோழப் பேரரசு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை. செல்வாவுக்கு தன மேல் நம்பிக்கையும் தன படைப்புக்களில் காதலும் அதிகம் என நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ எடிட்டருக்கு வேலையே வைக்கவில்லை. சில இடங்களில் கத்தரி வைத்திருந்தாள் கச்சிதமாய் இருந்திருக்கும்.


தான் ஒரு நல்ல இயக்குனரா என்று தனக்குத் தெரியவில்லை எனினும் தான் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் எனவும் செல்வா ஒரு முறை பேட்டியளித்திருந்தார். ஆனால் இங்கே திரைக்கதை அத்தனை நேர்த்தியாய் இல்லை. சில வேளை இவர் நினைத்ததைப் படமாக்க சிரமமாய் இருந்திருக்கலாம். படத்தில் இவர்கள் பட்ட சிரமம் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது. தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும். ஆக சில குறைகள் இருந்தாலும் தமிழின் புதிய முயற்சி என்ற வகையில் இதற்கு கொடுக்கப்படும் ஆதரவு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.


படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு. படம் பார்த்தோருக்குப் புரிந்திருக்கும். அதை இங்கே விளக்கினால் சுவாரசியம் கேட்டு விடுமென்பதால் விட்டு விடுகிறேன். நான் மேலே சொன்ன கதை சுருக்கத்தை வைத்து நீங்கள் ஒரு கதையை ஊகித்திருப்பினும் இடைவேளைக்குப் பின் வரும் ட்விஸ்ட் நான் சற்றும் எதிர்பாராதது. உங்களுக்கும் அப்படியே இருக்கும். சோ தயவு செய்து தியேட்டரில் போய்ப் பார்த்து இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். போகும் போது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு போதல் நலம். என்னை கேட்டால் 14 வயதுக்கு மேலுள்ளோர் பார்க்கலாம் என்பேன்.

ஆயிரத்தில் ஒருவன் - ஆயிரத்தில் ஒரு படம்





Related Posts with Thumbnails