
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. போர் வெற்றிக்கு காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னை வெளிக் காட்டிக் கொண்ட மகிந்த எவ்வித தடைகளும் இன்றி அனைத்து மக்களினதும் ஏகோபித்த தெரிவாக மீளவும் தெரிவாவார் என்ற நிலை இருந்த போதுதான் அவரே எதிர்பார்க்காத இந்த மாற்றம் வந்து சேர்ந்தது. போர் வெற்றியில் தன்னோடு சேர்ந்து பங்காற்றிய இராணுவத் தளபதியை ஊடங்களில் முன்னிறுத்தாது தவிர்த்ததும் , சந்தேகக் கண் கொண்டு பார்த்ததும், அவரை அரவணைத்துச் செல்ல தவறியதும் இன்று இவருக்கே வினையாகஅமைந்துள்ளது.

சற்றுத் திரும்பிப் பார்த்தோமானால் போர் வெற்றி மகிந்த முனைந்து மக்கள் முன் காட்டுவது போல அவரது தனிப்பட்ட வெற்றி கிடையாது. ரணில் விக்கரமசிங்க அவர் காலத்திலேயே புலிகளை ஒடுக்குவதற்கான வலுவான அடித்தளத்தை இராஜதந்திர ரீதியில் இட்டிருந்தார். பேச்சுவார்த்தையை இழுத்தடித்து இடைப்பட்ட காலப்பகுதியில் வன்னியினுள் இருந்த அமைதியான நிலைமையை போராளிகளிடமும்,மக்களிடமும் காணப்பட்ட போருக்கு ஆதரவான மனநிலையை சிதைக்கப் பயன்படுத்தியது, கருணாவை பிரித்தெடுத்து கிழக்கு மாகாணத்தை கை நழுவி போகச் செய்தது என்பன இவற்றுள்சில.
இலங்கையில் UNP அரசு அமைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயங்களின் ஆதரவுடனும் , சுதந்திரக்கட்சி ஆட்சி அமைகையில் இந்திய,ரஷ்ய,சீன ஆதரவுடனும் புலிகளுக்கெதிரான போர் எப்பொழுதும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழர் தரப்பு இவ்வாறான நேசத்தரப்புகளை கொண்டிருக்காமையால் தனியாகவே போராடும் நிலையிலேயே இருந்தது. ஓரளவேனும் வெளிநாட்டு தொடர்புகளை சிறப்பாக பேண வல்ல பாலசிங்கம் அவர்கள் இயற்கை எய்தியமையும் அதைத் தொடர்ந்த முக்கிய தளபதிகளின் மறைவும் மேலும் இயக்கத்தை பலவீனப்படுத்த அதன் பின் தமிழர் தலைமை தீர்க்கதரிசனமின்றி தேர்தலைப் புறக்கணிக்க ம்ம் இந்த நிலைமை. ஆக செத்த பாம்பை அடித்திருக்கிறார் மகிந்த
ரணில் வந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்குமா என்பவர்களுக்கு பிரச்சினை தீர்ந்திருக்குமோ இல்லையோ இங்கே JVP கொடிப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தாலும் உயிரிழப்பின்றி ஐரோப்பிய நாடுகளில் சமாதானமாவது பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.
ஆனாலும் மகிந்த வந்த ஆரம்பக் காலப்பகுதியில் அப்போது இருந்த நிலையில் போருக்கு செல்ல முடியாத நிலையிலேயே இருந்தார். எனினும் அதையும் கெடுத்து யானை மன்னிக்கவும் புலி மாவிலாறு அணைக்கட்டை மூடி தன தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. தம் மீது இருந்த அதீத நம்பிக்கையா? அல்லது எதிரி மீதிருந்த தவறான கணிப்பா? இன்று வரை புரியவில்லை. என் பழைய பதிவொன்றைப் பார்த்தேன் கோயபல்சை நம்மூர் கெஹலிய ரம்புக்வேள்ளவுடன் ஒப்பிட்டு எழுதியது. அத்தனை தூரம் நம்பிக்கையுடன் தோற்கவே மாட்டார்கள் இவர்கள் சொல்வதுதான் பொய் என்ற சராசரி தமிழரின் மனநிலையில்தான் நானும்இருந்திருக்கிறேன்.
ஆனால் இன்றைக்கும் அதே மாதிரி வருவார், போராடுவோம், வெல்வோம் என்ற ரீதியில் கதைப்பது யாரை ஏமாற்றவெனத்தான் தெரியவில்லை. கதைப்போர் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தோர். புலம்பெயர்ந்தோருக்கு தமது இத்தனை வருடக் கனவு தகர்ந்து போனதில் உள்ள ஏமாற்றம் புரியக்கூடியதே. ஆனால் தமிழகம்! இங்கே தமிழர் தரப்பு பலமாய் இருந்த போதெல்லாம் வாய் பொத்தி சினிமா பார்த்து காலம் கழித்து விட்டு இப்போது பேசுவதில் யாதொரு பயனுமில்லை. அதுவும் கடைசி தேர்தலில் கூட வைகோவைத் தோற்கச் செய்தீர்கள், காங்கிரசை ஆட்சிப் பீடம் ஏற்றினீர்கள். சீமான் வகையறாக்களுக்கு வேறு தேவைகள் உண்டு. அவரது நாம் தமிழர் இயக்கமும் பிரபாகரன் பிறந்ததின வாழ்த்துப் போஸ்டர்களும் அதைத்தான் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழ், இனம்,மானம்,தமிழ்நாடு எனப் பேசுவது அரசியல் வெற்றிக்கான ஒரு வழி அவ்வளவே. நாம் தமிழர்கள் உணர்ச்சித் ததும்ப இனம் பற்றிக் கதைப்போம் ஆனால் இனத்திற்காக ஒரு மயிரும் புடுங்க மாட்டோம் (நான் உட்பட).
ஆக இன்றைய நிலையில் விரும்பியோ விரும்பாமலோ தேர்தலொன்று நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரசத் தலைவராக வரமுடியாத நிலையில் இரு பெரும் கட்சிகளில் ஒருவரையே நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இம்முறையும் தேர்தலைப் புறக்கணிப்பதால் யாதொரு பயனும் கிட்டுமென நான் கருதவில்ல்லை. ஆக இரண்டில் எது ஆகக் குறைந்த பாதகத்தை தருமென்பதே நம்முன் இருக்கும் தெரிவு. சரி எதுவாக அமைய வேண்டுமென்பது தொடர்பாக விவாதிக்க வேண்டியதில்லை. இலங்கையில் இருப்போர் இன்றைய நிலைமையை நன்கு அவதானிபபின் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கும்.
ம்ம் நிறைய எழுதியதில் தலைப்போடு தொடர்பான விஷயத்தை பேசவே முடியவில்லை. பொது வேட்பாளர் பொன்சேகா தான் என்பது கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான். அனுரா குமார திசாநாயக்க(JVP) நேற்று தமது பொது வேட்பாளர் இவர் என அறிவித்தார். லக்ஸ்மன் கிரியெல்ல(UNP) வேட்பாளர் பெயரை சொல்ல விலை எனினும் மக்கள் வாக்களிப்பது போரை வென்றவர்களுக்கா? விற்றவர்களுக்கா? என்ற தீர்க்கமான முடிவெடுக்கும் காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறினார். ஆக இவை அவர்தான் போதுவேட்பாளர் என்பதை ஊர்ஜிதப் படுத்துவதாகவே உள்ளது.
நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் ராணுவத் தளபதி சொன்னதுதான் சுவாரசியம். நீங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வெல்வீர்களா? என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு ஒரு Hero பாணியில் அவர் சொன்ன பதில்
I have never lost in my life


































